கௌசல்யா - தமிழ்நாட்டின் மகள்

சமீபத்தில் திருப்பூர் நீதி மன்றம் உடுமலை சங்கர் ஆணவக்கொலை வக்கில் தொடர்புடைய 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. நம் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள மிகச்சிறிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக இதைப் பார்க்க வேண்டும். இன்னும் எத்தனையோ வழக்குகளுக்கு தீர்ப்பு வராத நிலையிலும் இந்தத் தீர்ப்பை ஒரு சிறந்த முன்னோடியாகப் பார்க்க வேண்டும். எத்தனையோ ஆணவக் கொலைகள் நாளிதழ்களிலும் வருகின்றன. இந்த வாட்சப் காலத்தில் ஒரு கூட்டமே கூடி ஒருவரயோ அல்லது இருவரையுமோ அடித்துக் கொல்வதைக் கூட சுற்றி நின்று ஜாதிவெறி பிடித்த மனநோயாளிகள் கூட்டம் படம்பிடித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கூட காண்கிறோம். அப்படி இருக்கும் நிலையில் இந்தியாவிலே ஜாதிய எதிர்ப்பு சிந்தாந்தம் வலுவாக இருக்கும் (ஜாதிவெறியும் வலுவாகத்தான் இருக்கிறது) தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள ஆணவக் கொலைக்கு தூக்கு தண்டனை என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்தியாவில் இது வரை இப்படி ஒரு தீர்ப்பு ஆணவக் கொலைக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தமிழகம் அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது.

இதற்கு மூலகாரணமாக இருந்தது கண்காணிப்புக் கருவியில் பதிவாகி வெளியான சங்கரும் கௌசல்யாவும் வெட்டப்படும் காணொலிக் காட்சிகள் மட்டுமல்ல, மறுபிறவி எடுத்து அதற்காகப் போராடிய கௌசல்யா என்ற அற்புதமான பெண்ணின் துணையும் கூட. தனது கண்ணெதிரே கணவனைப் பறிகொடுத்து, தானும் வெட்டுக்களை வாங்கி, உயிர் காப்பாற்றப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு முயன்று தன்னைத் தேற்றிக் கொண்டு பெரியாரிய, தன்னார்வக் குழுக்களின் உதவியால் புது மனிதியாக மாறி தன் கணவனை கூலிப்படை வைத்துக் கொலை செய்த, தனது தந்தைக்கே தூக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் மனித நேயப் போராளியாக மிளிர்கிறார், ஆளுமையாக வரலாறு படைத்திருக்கிறார் கௌசல்யா. அவரின் செயல்களை நினைக்கையில் அவர் மேல் நமக்கு பேரன்பும், பாசமும், பெருமிதமும் பெருகி வருகிறது. 

இந்தத் தூக்கு தண்டனை அறிவிப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்குக் கூட வழியில்லாமல் இருக்கிறது கௌசல்யாவின் குடும்பம். இப்படி ஒரு குடும்பத்தை நாசமாக்கியிருக்கிறது ஜாதி வெறி. இதற்கெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல் கூச்சப்படாமல் கௌசல்யாவை அசிங்கப்படுத்து வேலையை ஜாதி வெறி இழிபிறவிகள் செய்து வருகின்றனர். ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியிலிருக்கும் குடும்பப் பெண் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஜாதி ஆணைத் திருமணம் செய்வது உயிருக்கே உத்தரவாதமில்லாத செயலாக இன்றும் இருக்கிறது. இப்படி ஒரு குடும்பம் ஜாதிவெறியில் ஆணவக் கொலை செய்து தூக்கு தண்டனை வாங்கியிருக்கிறது, இதற்காக கொஞ்சமும் கவலையோ துயரமோ இல்லாமல் கௌசல்யாவை இழிவு செய்து மீம்களையும் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் பரப்பி வருகின்றனர். 

இது மாதிரியான மன நோயாளிகள்தான் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மாதிரியான ஆட்களை தற்கொலைக்கோ அல்லது சொந்த மகளையே ஆள் வைத்து வெட்டுவதற்கோ தூண்டி விடுகிறவர்கள். இந்தமாதிரியான ஆட்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் ஜாதியை, தான் கௌரவம், குடும்ப மானம் என்றெல்லாம் கருதி அடிப்படை மனிதநேயத்தைத் தொலைத்து ஜாதிவெறி மனநோயை சரி என்று நம்பி கொலை செய்யத் துணிகிறார்கள். ஜாதிய சமூகத்தில் ஜாதிக்கு பயப்படும் மனிதர்கள், தான் சமூகம் என்றும் ஊர் உலகம் என்று நம்பும் இது மாதிரியான ஆட்கள்தான் ஜாதி வெறியை வாழவைக்கும் இழிபிறவிகள். இவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், பக்கத்து ஊர்க்காரர்களாக இருக்கலாம், அங்காளி பங்காளிகளாக இருக்கலாம். இவர்கள்தான் அடுத்தவர்களை தூண்டிவிடுவது, சீர் செனத்தி கொடுப்பதை பெருமை பேசுவது, பொண்ணு வயசுக்கு வந்துட்டாளா இல்லையா என்று கேட்பது முதல், பையன் என்ன சம்பளம் வாங்கறான், பையனுக்கு இன்னும் கல்யாணமில்லையா, கல்யாணமாய் இத்தனை நாளாயும் குழந்தை இல்லையா, அந்தக் கோயிலுக்குப் போகணும், இந்த டாக்டரைப் பாக்கணும், நான் சொல்றா ஜோசியகாரரைப் பாருங்க என்றெல்லாம் ஆலோசனை சொல்வது,  அடுத்தவன் குடும்பத்தைப் பற்றி கிசுகிசு பேசுவது, இது போன்று பெண்ணின் தனிப்பட்ட படங்களை சமூகத்தில் தனது கழிவுக் கருத்துக்களுடன் பகிர்ந்து கொள்வது, போலித்தனமாக உச் கொட்டுவது இப்படிப் பல வகைப்படுவர். 

இது மாதிரியான ஊருக்கு 4 பேர்களாக இருக்கும் ஜாதிவெறி மனநோயாளிகள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? சின்னச்சாமி போன்றவர்கள் ஊர் என்ன சொல்லுமோ ?, நம்ம சனம் என்ன சொல்லுமோ ? சொந்தக்காரவுக என்ன சொல்லுவாகளோ என்றெல்லாம் மன அழுத்தம் கொள்ளாமல், சிறிது காலத்தில் கௌசல்யாவின் முடிவை அங்கீகரித்திருக்கக் கூடும். இப்போது கொலைகார சின்னச்சாமி மட்டும் தூக்கு மேடையில், சின்னச்சாமியின் ஜாதிவெறியைக் கூட்டிய ஜாதிக்காரர்கள் எல்லாம் கௌசல்யாவைத் திட்டிக் கொண்டும் சின்னச்சாமியின் ஈகத்தை மெச்சிக் கொண்டும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் தங்கள் ஜாதி சனத்துடன். 

இப்படியெல்லாம் திரியும் ஒரு பெண், தனது பெத்த தகப்பனுக்கே தூக்கு தண்டனை வாங்கித் தந்து விட்டாள் என்று பொருமுகின்றனர். அனைவரும் சங்கர் வெட்டப்பட்ட அதிர்ச்சியில் இருக்கும்போதே, மேல் ஜாதிப் பெண்களைத் தொடுகின்றவனுக்கு அப்படித்தான் வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் அதிகமாக இருந்தனர். இப்போது கௌசல்யாவின் அப்பாவுக்கு தூக்கு உறுதியானவுடன் கௌசல்யாவை ஏசுவதற்கு வசதியாகப் போய்விட்டது. ஆனால் உண்மையென்ன ? சின்னச்சாமி தூக்குமேடைக்குச் செல்லக் காரணமே இது மாதிரி அவர் சார்ந்த சொந்தங்களும், சமூகமும்தான். இந்த எடுபட்ட ஜாதிய சமூகம்தான் அவரை அனைத்து வகையான உறவுகளையும் இப்படித்தான் இருக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகிறது. தனது மகள் அதை மீறியதால் சமூகத்தில் தனக்கு மரியாதை போய்விடும் என்று எண்ண வைக்கிறது. எனவே ஒரு தனி மனிதன் ஜாதியால், ஜாதிவெறியால், ஜாதிப்பாசத்தால் நிகழ்த்தும் வன்முறைக்கு ஜாதிதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ஜாதி இங்கே புனிதமாகி கௌசல்யாவை ஏசுகிறது. 

நம் முன்னோர்களெல்லாம் பொறியியல் படிக்கவில்லை என்பதற்காக கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி கௌசல்யாவை பொறியியல் படிக்க வைக்காமல் இருக்கவில்லை. நாம்தான் படிக்காத தற்குறியாக இருந்து விட்டோம் தம் பிள்ளைகளாவது படிக்கட்டும் என்று படிக்க வைக்கிறார்கள். ஆனால் படித்து விட்டு, பட்டம் வாங்கி விட்டு வேலைக்கும் போய் விட்டு இருந்தாலும் நம்மைப் போலவே ஜாதியச் சாக்கடையில்தான் வாழவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களின் மனநோய் விந்தையிலும் விந்தையல்லவா ?. நம் மகனோ மகளோ நம்மைப் போல் படிக்காத தற்குறியாக இருக்கக் கூடாது, ஆனால் நம்மைப் போல் ஜாதிவெறியனாகவே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவோ ஏற்றுக் கொள்ள முடியாத நம்பிக்கைகளால் நிறைந்ததுதான் ஜாதி. அதன் அடிப்படை தந்நலமும், போலிப் பெருமையும், மனிதநேயம் இல்லாமையும்தான். 

தேவர் ஜாதியினர்தான் தனது ஜாதிக்காரனுக்கு தூக்குதண்டனை வாங்கித்தந்ததால் கௌசல்யாவைத் திட்டுகின்றனர் என்று பார்த்தால், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், வன்னியர்கள், மாதிரி இன்ன பிற ஆண்ட பரம்பரைப் போலிப் பெருமையில் மூழ்கி இருக்கும் மனநோயாளிகளும் சேர்ந்து கௌசல்யாவை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய கீழ்மையைக் காட்டி வருகின்றனர். 

கௌசல்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இருக்கின்றன. அதை தூக்குதண்டனை வெளியான அன்று "சங்கர் இறந்ததிலிருந்து நான் நிம்மதியின்றி இருந்தேன். இத்தீர்ப்பு எனக்கு நிம்மதி அளித்தது என்று கௌசல்யா கூறியிருந்தார். இந்த செய்தியின் கீழே கௌசல்யா நிம்மதியின்றித் தவித்தபோது க்ளிக்கியது" என்று கீழ்க்காணும் படங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அதை எல்லா ஜாதியிலிருக்கும் நாடகக் காதல் என்ற கதையை நம்புகிற, தலித்கள் மேல் ஜாதிப் பெண்களை மணந்து கொண்டு பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கின்றனர் என்று நம்பும் ஜாதிவெறியர்கள் தத்தமது ஃபேஸ்புக்கில், வாட்சப் குழுமங்களில் பகிர்ந்து தனது இழிவைப் பதிவு செய்து கொண்டனர். இங்கே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். அவர் முகத்தில் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிந்துகொண்டுதான் இருக்கிறது. 

                                                      

                                                 

                                                  

அதாவது கௌசல்யா இப்போது ஜீன்ஸ் அணிகிறார். கூந்தலை வெட்டி விட்டார். அதாவது கெட்டுப்போய்விட்டாராம்.  ஆண்களுடன் ஊர் மேய்கிறார். அதற்கும் மேல் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதாவது இன்னும் முக்கால்வாசி ஆண்களுக்கு பெண்கள் ஆண் நண்பர்களுடன் பழகுவது, கைகோர்ப்பது, சேர்ந்து புகைப்படம் எடுப்பது, நெருங்கி நின்று தற்படம் (Selfie) எடுப்பது இதிலெல்லாம் ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்தக் கொடுமையையெல்லாம் எங்கே போய் சொல்லி அழ ?.

பின்னே என்ன ஒரு கணவனை இழந்த பெண் எப்படி இருக்க வேண்டுமாம் ? மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை உடுத்தி, முக்காடு போட்டு மூலையில் அமர்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டு இருக்க வேண்டுமோ ? பெண்களை அடக்கி வைக்க நினைக்கும் உங்கள் புத்தி அப்படித்தானே போகும்.

அவர் பொறியியல் பயின்றவர், செத்துப் பிழைத்த பின்னர் பெரியாரியம் பயின்றவர். அவர் அப்படித்தான் இருப்பார். அப்படி மகிழ்ச்சியாக இருந்ததால்தான், துணிவாக இருந்ததால்தான், சராசரிப் பெண்களின் அடையாளமான நீண்ட கூந்தலைத் துறந்து, ஜீன்ஸ் அணிந்து மனிதநேயராக சிந்திக்கத் தொடங்கியதால்தான் இப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்து இன்று அதை நியாயப்படுத்தி பேசவும் முடிகிறது. அவர் அப்படித்தான் உடையணிவார், நண்பர்களுடன் ஊர் சுற்றுவார், சிரித்துக் கொண்டே புகைப்பத்திற்குக் காட்சி தருவார். மேடைகளில் பேசுவார், நடனம் ஆடுவார் இதற்கு மேல் அவர் திருமணமும் கூட செய்து கொள்வார். அதற்கு இப்போது என்ன ? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா ? என்ன நடந்தாலும் ஜாதிவெறியால மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் திருந்த முடியாது. உங்களிடம் நல்ல பெயர் எடுக்க தன் வாழ்க்கையை ஏன் அவர் வீணாக்க வேண்டும். முடிந்தால் மனிதர்களாக மாற முயற்சி செய்யுங்கள். யார் யாரை காதலிக்க வேண்டும் யார் யாரை காதலிக்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு பண்பாடாம் அதுதான் மதமாம் கலாச்சாரமாம். இதையெல்லாம் இவர்கள் கட்டிக் கொண்டு அழ இருப்பவர்கள் சாக வேண்டுமாம். 

இந்த மாதிரி அயோக்கியர்கள் தம் திருமண உறவுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் ? ஏங்க பொண்ணு ஏழையா இருந்தா பரவால்லை, நம்ம சாதியா இருந்தா போதும் என்றா சொல்கிறார்கள். அது தமது பையனுக்கோ/பெண்ணுக்கோ வரன் அமையாமல் பல வருடங்கள் இருந்தால் மட்டுமே இறுதியாக சொல்லும் வாக்கியம். இதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கேரளா. அங்கே போய் பெண் எடுத்தால் யாரும் ஜாதி கேட்க மாட்டார்கள், கல்யாணப் பொண்ணு கேரளா என்றால் அத்துடன் கேள்விகள் முடிந்து விடும். 

பொண்ணுக்கு எத்தனை பவுன் போட்டாங்க ? பையனுக்கு என்ன சம்பளம் ? எத்தனை ஏக்கரா தேறும்? தாய்மாமன் என்ன செய்தார் ? என்றுதானே எல்லா சாதிசனமும் கேட்கிறது. ஆக இங்கே ஜாதிக்கு மரியாதை இல்லை. பணத்துடன் கூடிய ஜாதிதான் மதிப்புப் பெறுகிறது. பணத்தால்தான் ஜாதியே மதிப்புப் பெறுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் தனது குடும்ப்பத்துடன் கந்துவட்டிக் கொடுமை தாளாமல் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் தீக்குளித்தார். குடும்பமே அழிந்தது. அந்த இறந்தவரின் குடும்பமும், கந்து வட்டி கொடுத்தவரும் ஒரே ஜாதி என்று கேள்விப்பட்டேன். இதனால் அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரின் மானம் போனதாக எந்த ஜாதிவெறியனும் கவலை கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண் தான் விரும்பிய வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் செய்தால் மட்டும் ஜாதி மானம் போய்விடும். அதற்கு அவர்களைக் கொன்று தானும் தூக்கு மேடைக்குச் சென்று செத்தால்தான் ஜாதி கௌரவம் காப்பாற்றப்படும். அடுத்த ஜாதிக்காரன் கரு தன் ஜாதி வயிற்றில் வளர்வது கேவலம் என்றால் அடுத்த ஜாதிக்காரன் விடும் மூச்சைக் கூடத்தான் சுவாசிக்கிறார்கள். வேற சாதிக்காரன் விட்ட காத்தை நான் சுவாசிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு மூச்சை நிறுத்திப் பாருங்களேன். 

என் பங்குக்கு நானும் ஏதோ என்னால் முடிந்த மீம்கள்

                  


                  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அழகு என்று சொல்வதின் அழகின்மை

உங்க ஊர்ல தேன்மொழி கனிமொழினு எவளாவது வாய்க்கால் வரப்புல திரிவா அவளத் தேடித் தேடி லவ் பண்ணு உனக்கெல்லா நான் செட்டே ஆக மாட்டேன். 
                                     
வெள்ளைத்தோல் மலையாளியை வைத்து சராசரி தமிழச்சிகளை கீழாகக் காட்டும். இது அட்லி எழுதிய வசனம். இதை தமிழ்நாட்டில் ரசிக்காதவன் எவன்?  எவள் ? 

இந்த வசனத்தை கொகொட்டிச் சிரித்து மகிழ்ந்த அதே உள்ளங்கள் இயக்குநர் அட்லியின் உருவத்தையும் நிறத்தையும் வைத்து அவரது மனைவியுடன் இருக்கும் படங்களைக் கிண்டலடிப்பதாக நினைத்து தன்னைத்தானே இழிவு படுத்துகின்றனர், அட்லி இந்தப் படத்தில் இந்த வசனத்தின் மூலம் இழிவு செய்தது போல.


இத்தனைக்கும் கனிமொழி என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு ஆளுமையை வைத்துக் கொண்டே. தேன்மொழி கூட அத்தனை இழிவான பெயரும் இல்லை. 

ஒருவரின் உருவத்தைப் பழிப்பதே மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. ஒரு பொம்பளையக் கிண்டல் பண்ணனும்னா அது மொக்க ஃபிகர் இல்லைன்னா ஆன்ட்டின்னு சொன்னா முடிஞ்சது. ஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிரிப்பதை வைத்தோ,  ஒரு மீமை பகிர்வதை வைத்தோ, ஒரு கருத்தை விரும்புவதை வைத்தோ கூட நாம் நிறவெறியர்கள் என்பதை நிரூபித்து விடலாம். இப்ப நாமெல்லாம் ஒரு நிறவெறியர்கள் என்பதற்கான சிறிய உதாரணங்கள். 

நமக்கு எதிரிகள் என்பதற்காகவே தமிழிசையை பரட்டை என்று மீம் போடுவது, அதைப் பரப்புவது. 

திராவிடக் கட்சியின் குலக்கொழுந்து உதயநிதி சாக்கடை சந்தானத்துடன் ஒரு சராசரி தமிழச்சியைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சியாடா த்தூ என்றெல்லாம் உளறுவதைப் பார்த்து நாம் சிரிக்கவில்லையா ?. 

நடிக்க வந்த புதிதில் அதே உதயநிதியின் பழைய புகைப்படத்தைப் போட்டு காசிருந்தா காக்காவும் மயிலாகும் என்று தமிழர்கள் ஃபேஸ்புக்கில் தங்களது நகைச்சுவை உணர்வைக் காட்டினார்கள். 

ராஜகுமாரன் படத்துல வர்ற கவுண்ட மணி, செந்தில், வடிவேல் மற்றும் தங்கச்சி மணிமேகலை காட்சி. அதை எல்லாம் என்ன நியாயம்னு நினைச்சு சிரிச்சோம் நாமல்லாம்.

சுமாரான, அழகில்லாத ஆண்கள் எல்லாரும் அழகான பெண்ணை காதலிக்க, திருமணம் செய்ய நினைப்பார்கள். அதே இன்னொருவன் அழகான பெண்ணின் காதலனாகவோ, கணவனாகவோ இருந்தால் எலுமிச்சப்பழத்தைக் காக்கா கவ்விடுச்சு, இவன் மூஞ்சிக்கெல்லாம் இந்த ஃபிகர் ஓவர் என்று நினைப்பார்கள். 

தன்னைச் சார்ந்த பெண்கள் என்றால் குணங்களைப் பற்றிப் பேசுவார்கள் ஆண்கள். தன்னை சாராத பெண்களைக் குறித்த சராசரி ஆண்களின் உளவியல் என்ன ?. என்னுடைய கணிப்பு இரண்டே இரண்டுதான்.

அழகான பெண்ணைப் பார்த்தால், ஆகா இவளைக் கட்டிக்க எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ ?

திருமணமானவராக இருந்தால் நம்ம பொண்டாட்டி இது மாதிரி இல்லையேன்னு ஏக்கமும் திருமணமாகதவராக இருந்தால் இந்த மாதிரி ஒருத்திதான் நமக்கு வரணும்னும் இருக்கும்.

அழகாக இல்லாத பெண்ணைப் பார்த்தால். த்தூ ! இதையெல்லாம் எவன் பார்ப்பான் ? கட்டுவான் ? 

ஆக நமது உளவியல் அழகை வைத்து ஒருவரை குறிப்பா பெண்களை எடை போடுவதுதான். இது கொடிய மனநோய்தான். நாமேதான் சிரமப்பட்டு மாற்றிக் கொள்ள வேண்டும். 

ஒருவரை அழகு என்பதாலேயே இன்னொருவரை அழகில்லாதவர் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறோமே இது தவறில்லையா ? மாற்ற முயல்வோம்.
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அன்பில்லா கணவா

அப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்
முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானே
அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால்
நானெங்கே போவது இல்லை என்னை என்ன செய்வது ?
உனக்கோ எனதன்பின் பதிலாக எரிச்சலேன் வருகிறது
கொஞ்சிப் பேச மாட்டாயாவென கெஞ்சியே கேட்கிறேன்
உன்னிடம் நான் கேட்பது அன்பைத் தவிர வேறென்ன

உன்னைப் போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்
உன்னைப் போலவே வெளியில் எனக்கும் தொல்லைகள்
மனத்தின் அழுத்தத்துடன்தான் வீட்டிற்கு வருகிறேன்
உன்னைப் போல் உண்ணும் உணவுக்குக் காத்திருப்பதில்லை
நீ உண்ணும் உணவை உண்டாக்கிக் காத்திருக்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில் அழுத்தம் ஆனந்தமாகிறது
உன்னைக் கண்டதும் களைப்பு களிப்பாகிறது
ஊனெங்கும் உற்சாகமாகி காதல் களைகட்டுகிறது
உனக்கோ களைப்புதான் பெரிதாகத் தெரிகிறது

உன்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்
நான் கொடுப்பினை செய்தவளென்று உனைக்காட்டி ஊரார் சொல்ல
என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் குறையில்லை
அதனால்தானென்னவோ எனக்கு உன்மேல்
அன்பு குறைவில்லாம் ஊற்றெடுக்கிறது
குறை எனதன்பிலா உன் புரிதலா உன் மனநிலையா
எதுவாயினும் மிகத்துயரம் என் நிலை
என் மீது சாய்வு கொள்ளுமோ உன் நிலை ?
அள்ளித் தராவிட்டாலும் தாழ்வில்லை
என் ஏக்கத்திற்கு ஏனென்ற கேள்வி கூட இல்லையா ?
இப்படி என் துக்கத்திற்கு அடித்தளமாகிறாயே ?

நீ எல்லோருடனும் அன்பாய் இருக்கிறாயாம்
எனக்கும் பெருமைதான் கசக்கவா செய்யும் கணவனின் நற்பெயர்
ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி இல்லை ?
எனக்கு மட்டும் நீ ஏன் அப்படித் தோன்றவில்லை
என்னிடம்தானே எரிந்து விழுகிறாய்
எரிசொற்களை வீசுகிறாய்
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாய்
சிறுதவறுகளையும் பொருட்படுத்துகிறாய் குற்றம் காண்கிறாய்
என்னை ஏசுகிறாய் குறை சொல்கிறாய்
எனக்குத்தானே தெரிகிறது நீ எத்தனை நல்லவனென்று ?
உன் கோபக்கொடுக்கை அறிந்தவள் யானே
நான்கு சுவர்களுக்கு நடுவிலும் நான்கு பேருக்கு அருகிலும்
என்னிடம் அன்பாக பேசமாட்டாய் புன்னகை பூக்க மாட்டாய்
இத்தனையும் தெரிந்தும் உன்னை நல்லவனென 
ஊரார் சொல்வது எனக்கு உவப்பாகவே இருக்கிறதே
இதுதான் நான் என்று புரிகிறதா ?
என் அன்பு எத்தகையதென்று தெரிகிறதா
உன்னிலும் சிறந்தவள் நானன்றோ ?

 உனது நீதியும் நேர்மையும் எனக்குத் தேவையில்லை
உனது சாக்குகளும் போக்குகளும் நான் பொருட்படுத்துவதில்லை
உனது கொள்கையும் கோட்பாடும் எனக்குக் குப்பைகள்
உனது மனநிலையும் தோல்வியும் எனக்கு புரளிகள்
உனது இன்பமும் துன்பமும் மட்டுமே நான் காண்பவை
உனது தீண்டல் மட்டுமே
உனது அணைப்பு மட்டுமே
உனது முத்தம் மட்டுமே
உனது ஆசைப்பேச்சு மட்டுமே
என்னைக் கொஞ்சுவது மட்டுமே
அவை அனைத்தும் எனக்கு மட்டுமே
நான் வேண்டுவது இவை மட்டுமே
அன்புக்கு ஏங்குவதே என் பிறவிக்குணம்

அன்பு செய்வதெப்படியென
சமையல் செய்வதெப்படியென
சமர்த்தாக நடந்து கொள்வதெப்படியென
சினந்து பேசாமல் சிரித்து பேசுவதெப்படியென
பொங்கியெழாமல் பொறுமை காப்பதெப்படியென
என்பதெல்லாம் கற்றுக்கொள் என்னிடம்

திருமணமான ஆண்களுக்குக் காதல் சற்றே கடினம்தான்
மனைவியைக் காதலிப்பது என்னவோர் சாதனை பாரேன் கணவா
உனக்கு வேறுவழியில்லையே என்ன செய்ய ?
என்னை நேசிக்கக் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
அதில் கிடைக்கும் தெவிட்டாத இன்பம் நான் உத்தரவாதம்
இயலாத காலத்தில் இன்பம் அனுபவிக்காது போனோமே
என்றெண்ணி ஏங்கி வாடும் நிலை உனது முதுமைக்கு
வேண்டாமே என் கணவா புரிந்து கொள்வாய் என் கணவா
அன்றேல் என் வாழ்க்கை போய்விடும் வெறும் கனவா
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கூகிளின் அடுத்த அருட்கொடை - நமது குரல்/பேச்சு எழுத்துக்களாக மாறும் அதிசயம்

அடுத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டது கூகிள். ஆம். நாம் பேசினால் அது எழுத்துக்களாக மாறுகிறது. இதற்காக நாம் எழுத்துக்களை குரலாக மாற்றித்தான் வாழ்கிறோம். ஆனால் குரலையே எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் ஏற்கெனவே வந்து விட்டது. கூகிள் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது ஆண்ட்ராய் திறன் பேசியில் இதைப் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள், நேரமும் வாய்ப்பும் கிடைக்காதவர்கள் கூட இதைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு நமக்கு அளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் கூகிளுக்கு கடமைப்பட்டுள்ளது. இதன் வேகம் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் மும்மடங்கு வேகத்தில் இருக்கிறது என்று கூறுகிறது கூகிள். 

கையால் ஒரு பலகையில் எழுதுவது போல் எழுதினால் கூகிள் அதை எழுத்தாக மாற்றித் தரும் வசதியான தமிழ் ஈர்த்தறி வசதி (Tamil Handwriting Recognition Facility) என்ற அற்புதத்தின் அடுத்த மைல்கல்லாக விளங்கப் போகிறது இந்த கண்டுபிடிப்பு. இதற்கு மேலும் என்னதான் வேண்டும் சொல்லுங்கள். 

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆண்ட்ராய்ட் அலைபேசியில் Gboard - எனப்படும் கூகிளின் தட்டச்சுப் பலகை செயலியை நிறுவ வேண்டியதுதான். பின்பு languages - என்ற பகுதியில் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு பேசிக் கொண்டே இருக்கலாம். இதைக் கொண்டு இணைய உலாவிகளில் தேடல்களை நிகழ்த்தலாம். மின்னஞ்சல், ஃபேஸ்புக், கட்செவி அஞ்சல் (whatsapp) என அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தலாம். அதிகம் மெனக்கெட்டு தட்டச்சு செய்து அழித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.        இவ்வாறு தன்னால் இயன்ற வரையில் எல்லாம் மொழிகளுக்கு தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள். ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம். இனிமேல் தமிழில் தட்டச்ச முடியாமல்தான் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தமிழில் உரையாடும் அட்டூழியம் இனியாவது ஒழிய வேண்டும். ஆயிரம் நன்றிகள் இதை சாத்தியமாக்கிய கூகிள் ஊழியர்களுக்கு. 
     தமிழ் வாழ்க ! தொழில்நுட்பம் வாழ்க ! கூகிள் வாழ்க !


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மீண்டும் நானாக

உனது ஊர் எனக்கும் உறவாக இருந்தது
எனது உறவு உனக்கு ஊராக இருந்தது
நாம் இயங்கும் இடம் நமக்கான பாலமாய் இருந்தது
இருந்தும் எனக்கில்லை அந்தக் கொடுப்பினை
உனது இயல்பே எனது அன்பானது
உனது புறக்கணிப்பே பதிலானது
நீயோ எனது உலகமாக இருக்கிறாய்
நானோ உனதுலகத்தில் கூட இல்லாதவனாய்
எனது சொற்களில் அன்பை நிறைத்து அனுப்புகிறேன் 
நீயோ உன் பதில்களில் சலிப்பைக் காட்டுகிறாய்
உன்னைக் கண்டு புன்னகைக்கவே காத்திருக்கிறேன்
என்னைக் கண்டதால் வேறுவழியின்றி புன்னகைக்கிறாய்
நீ எனக்கு மற்றவரில் ஒருவரல்ல என்று நிறுவ முனைகிறேன்
நான் உனக்கு மற்றவராகக் கூட இல்லை என்று நிறுவுகிறாய்
எதிர்ப்பட்டால் கூட ஏறெடுத்தும் பார்க்காத நீ
எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருக்கும் நான்
எதற்காக நம் சந்திப்பு நிகழ வேண்டும்
உன் அலட்சியம் உன்னையே இலட்சியமான
எனை ஏன் இகழ வேண்டும்
என்ன விந்தை இது ?
என்ன கொடுமை இது ?
ஓர் உயிர் இன்னோர் உயிரை ஓயாது நினைக்க
இன்னோர் உயிர்க்கோ இப்படியோர் உயிர் இருப்பதே
அறியாமல் இருக்க நம்பிக்கையற்ற ஒன்றிற்காக
கிடைக்காத ஒரு வரத்திற்காக 
இல்லாத கடவுளிடம் தவமெதற்கு
விரும்பாத ஒருவரைக் கூட நான் இப்படி விட்டதில்லை
ஆம் இப்படியே செல்லட்டும் என் காலம்
இப்படியெல்லாம் நினைந்திருந்தவன் மாறிவிட்டேன்
உனது நீண்ட கூந்தல் ஈர்ப்பு தரவில்லை
உனது வடிவான உடல் சிலிர்க்க வைக்கவில்லை
கூரிய புருவங்களும் கண்களும் கலக்கம் தரவில்லை
உனது கொலுசொலி இதயத்துடிப்பை அதிகரிக்கவில்லை
உனது உடைகளின் நேர்த்தியில் அதிசயிக்கவில்லை
உன்னுடன் பேசும் தருணத்திற்கு ஏங்கவில்லை
உன்னுடைய பேச்சுக்களை அசைபோட்டு களிக்கவில்லை
உன்னுடைய சிரிப்பின் அழகை நினைத்துப்பார்க்கவில்லை
உன்னை சிரிக்க வைத்தேன் என்று பெருமிதப்படவில்லை
உன்னுடன் பழகிவிட்டேனே என்று பெருமைப்படவில்லை
உன்னை வெல்லவில்லை என வருத்தப்படவில்லை
முன்பு போல் உனது வருகையும் செல்கையும் சலனப்படுத்தவில்லை
நீ யாரோவாக மாறி விட்டாய்
நான் நானாகவே திரும்பி விட்டேன்
உன்னைப் போலவே இயல்பானவனாக மாறிவிட்டேன்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சகாவு - தோழர் - Comrade

சகாவு (தோழர்) என்ற மலையாளப்படம் பார்த்தேன். ஒரு பொதுவுடமைவாதியின் படம். இல்லை இரண்டு பொதுவுடமைவாதிகள் பற்றிய கதை. பொதுவுடமை கம்யூனிச படம் என்றதுமே படம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. ஆனால் நிவின் பாலியின் படம் என்றதும் ஒரு தயக்கம் ஏற்பட்டது. இதுவே துல்கர் சல்மான் என்றால் அந்தத் தயக்கம் வந்திருக்காது. இந்தப் படம் பொதுவுடமை பற்றிய படம் என்றாலும் பொதுவுடமை என்ற உலகின் மிக முக்கிய சித்தாந்தத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், பல சிறு கட்சிகளையும் கொண்டிருக்கும் சித்தாந்தம்தான் பொதுவுடமை. 

இந்தியாவில் தெற்கே கேரளத்திலும், வடக்கே (கிழக்கு?) மேற்கு வங்கத்திலும் பொதுவுடமைவாதிகள் அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதன் தாக்கம் அந்த மக்களிடமும் இருக்கிறது. ஜாதிக்கொடுமை மிகுந்த கேரளம் 60 வருடங்களில் கல்வியில் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அது கம்யூனிசவாதிகளின் ஆட்சியின் விளைவினால்தான். இன்று கூட ஏறக்குறைய ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா ஃபாசிசவாதிகளிடம் வீழ்ந்து விட்ட போது கேரளா இன்னும் மண்டியிடாமல் இருக்கிறது, கம்யூனிச தலைமையில் இந்துத்துவாவை எதிர்த்து நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக அங்கே இரண்டு மதவாதிகளின் வளர்ச்சியும் இருக்கிறது. இந்த நிலையில் கம்யூனிசம் பற்றிய மதிப்பீடுகளை அதிகரிக்கும் படங்கள் வர வேண்டும். 

ஆனால் இது போன்ற திரைப்படங்களால் என்ன பெரிய மாற்றம் இளைய தலைமுறையிடம் வரும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இத்திரைப்படத்தினை நிவின் பாலி என்ற ப்ரேமத்தின் நாயகன் என்ற புகழ் வெளிச்சத்திலேயே பார்ப்பார்கள். ப்ரேமம் போன்ற விடலைகளின் அற்ப உணர்ச்சியை சொறிந்து விட்ட படத்தில் தன்னைக் கண்டு மயங்கிய இளசுகள் இதை ரசிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. அய்யோ கம்யூனிச படமா என்று அஞ்சுவார்கள் (கம்யூனிசம் என்றாலே சலிப்புதான்). ஏனென்றால் இது உண்மையில் நிவின் பாலியின் நாயகத்தனத்தை போற்றுவது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இக்கதை இரண்டு பொதுவுடமைவாதிகளைப் பற்றியதாகும். இரண்டு வேடத்திலும் நிவின் பாலியே நடித்துள்ளார். சகாவு கிருஷ்ண குமார் என்ற கிச்சு, சகாவு கிருஷ்ணன். சகாவு கிச்சு அல்லது கிருஷ்ண குமார் என்ற, மாணவர் இயக்கத்தில் (கேரள மாணவர் இயக்கம்- SFK) மாவட்ட பொறுப்பில் இருக்கும் சகாவு (தோழர் அல்லது Comrade) கிருஷ்ண குமார் என்கிற கிச்சுவிடமிருந்து படம் தொடங்குகிறது. 

அவன் வீட்டில் அம்மாவிடம் சினந்து கொண்டு உணவை அருந்தாமல் வெளியில் சென்று உணவை உண்கிறான், அவன் நண்பன் அழைக்கும் போது அவனுக்கும் சேர்ந்து இறைச்சி வாங்க வேண்டும் என்று அவனிடம் தான் உண்டு முடித்து விட்டதாகவும், தானே வாங்கி வருவதாகக் கூறுகிறான். தான் இறைச்சி உண்டதை நண்பன் மோப்பம் பிடித்து அறியாமல் இருக்க சௌகாரம் (soap) கொண்டு கழுவுகிறான். வெறும் தோசையை வாங்கி வரும் கிச்சுவிடம் அவனது நண்பன் ஒரு ஹாம்லெட் கூட வாங்க முடியாதா என்று கேட்கிறான். எல்லாம் தீர்ந்து விட்டது என்று பொய் சொல்கிறான். அவனுக்கு தங்க இடம் கொடுக்கும் அந்த நண்பனுடனான உரையாடலுடனேதான படத்தின் ஆரம்பக் காட்சிகள் கழிகின்றன. அதில் அவன் எப்பேர்ப்பட்ட பொய்யனாகவும், அயோக்கியத்தனமாகவும் இருக்கிறான் என்பதை நகைச்சுவையாகக் காட்டுகிறார்கள். அவன் தற்போது இருக்கும் பதவியிலிருந்து படிப்படியாக முன்னேறும் திட்டம் வைத்திருக்கிறான். அதில் எந்த வித நேர்மையும் இல்லாமல் அடுத்தவனை ஏமாற்றுவது, கையூட்டு வாங்குவது, போட்டுக் கொடுப்பது, மக்களிடம் ஏமாற்றி நல்ல பெயர் வாங்குவது எப்படியாவது அமைச்சராவது என்ற வரையில் இருக்கிறது. 

அதில் முதல் கட்டமாக அரசியலில் இருக்கும் அவனுடைய உற்ற நண்பனையே அடியாட்களை வைத்து அடித்து விரட்டி அரசியலில் நகர்வதைப் போல ஒரு திட்டத்தைச் சொல்கிறான். இது போல் பல பத்து குறிக்கோள்களை வைத்து ஒவ்வொரு இடங்களிலும் அவனது நண்பனிடம் சொல்கிறான். (மலையாளப் படங்களில் இது போன்ற ஒரு நண்பன் பாத்திரத்தை வைத்து அவனை பேக்காகவும், அய்யே என்று வாயை அழுத்தி அதிர்ச்சியடையும் வகையில் நாயகனைப் பேச வைத்தும் நகைச்சுவைக் காட்சிகளை வெற்றிகரமாகவே படைக்கிறார்கள்). பிறகு அவர்கள் குருகிக்கொடை கொடுப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.  அங்கே தனது கட்சியின் பெரிய தலைவர்கள் வந்து செல்வதையும் பார்க்கிறான் கிச்சு. 

கிச்சுவின் குருதியை வேண்டியிருக்கும் நோயாளியுடன் வந்திருப்பவரிடம் பேசி அவரிடமிருந்தே கிச்சுவும் அவனது நண்பனும் உணவை உண்கிறார்கள், பழச்சாற்றை அருந்துகிறார்கள். காவல்துறையினர் வந்து மருத்துவரிடம் அந்நோயாளியின் உடல் நிலையை அறிந்து செல்கின்றனர். அவனுடைய கட்சியின் ஒரு தலைவரிடமிருந்து தான் குருதிக் கொடை அளிக்க வேண்டிய நோயாளி ஒரு (தமது கட்சிக்கு வேண்டப்பட்ட) சகாவு என்று சொல்கிறார். எனவே அங்கே இருந்து குருதியை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அப்போது அங்கே தன்னுடையை பள்ளித்தோழி ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் காண்கிறான். அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவள் விடுப்பில் இருக்கும் அவள் அந்த படுக்கையில் இருக்கும் (கிச்சுவின் குருதியை வாங்கப் போகும்) சகாவைக் காண வந்ததாகக் கூறுகிறாள். யார் அந்த சகாவு என்று கேட்கும் கிச்சு, அவர்தான் அவனது தோழியான அந்த ஐஸ்வர்யாவை படிக்க வைத்தவர் என்று அறிகிறான். அவருக்குக் குருதிக் கொடை அளிப்பதால் பல பேருடைய அன்பும், நன்றியும், வேண்டுதலும் கிச்சுவுக்கு உரித்தாகும் என்று கூறுகிறாள். தனிப்பட்ட முறையில் அவனுக்கு ஒரு பெரிய நன்றியையும் நவில்கிறாள் ஐஸ்வர்யா. 

அங்கே தனக்கு வேலை வாங்கித் தந்தேன் என்பதற்காகாக நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு எளியவரிடம் பணத்தை வற்புறுத்திப் பெறுகிறான். அரசியலில் இருப்பவர்கள் எத்தனை கீழ்த்தரமாக இருப்பார்கள் என்பதை கிச்சுவின் பாத்திரம் மூலமாகப் புரிய வைக்கிறார்கள். பின்பு படுக்கையிலிருக்கும் சகாவு உடன் இருப்பவர் வந்து சகாவுவின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் தனது இளமைக்காலத்தில் கிச்சுவைப் போலவே இருந்ததாகவும் கூறுகிறார். கம்யூனிசக் கட்சியை வளர்ப்பதற்காக வந்த ஒரு கொள்கைப் பற்றுள்ள இளைஞர் என்கிறார். 


சகாவு கிருஷ்ணன்.

சகாவு கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி. அரசியல்வாதி என்பதைக்காட்டிலும் வயதைத் தாண்டிய பக்குவமுடைய, கொள்கைப் பற்றுடைய சமூக சேவகர், மக்கள் தொண்டர். தான் முதலில் பீர்மேட்டில் சகாவைக் கண்டதாகக் கூறுகிறார். அங்கே தான் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியதாகக் கூறுகிறார். இங்கே சகாவு கிருஷ்ணன் அறிமுகம் தமிழ் தெலுங்கு படங்களின் மாஸ் நாயகர்களின் அறிமுகத்தைப் போல நிகழ்கிறது. அந்த உதவி ஆய்வாளர் (கிச்சுவிடம் கதை சொல்பவர்) ஒருவரை அடித்துத் தள்ளுகிறார். அவர் வந்து சகாவின் காலடியில் உருண்டு விழுகிறார். அவரை எழுப்புகிறார் சகாவு, இக்காட்சியில் சகாவை பின்புறமிர்ந்து மேல் வரை காட்டுகிறார். கைமுட்டியை முறுக்குவதாகக் காட்டுகிறார்கள். என்னவோ பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. அந்த அடிவாங்கியவரை வண்டியில் ஏற்றிக் காவல்துறை செல்கிறது. சகாவு பெட்டிக் கடையில் சோடாவை வாங்கிக் குடித்து விட்டுச் செல்கிறார். 

இது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் என்பவனை பற்றிய ஒரு சித்திரத்தை இது போன்ற காட்சிகள் மூலமாக என்ன பதியவைக்க முடியும். எந்த மொழித் திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் சினம் கொண்ட இளைஞன் கதையின் நாயகன், தான் வந்த இடத்தில் நடக்கும் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவான். அப்படியிருக்க உலகில் எங்கு அராஜகம் நடந்தாலும் அதைக் கண்டு சினம் கொள்ளும் ஒரு கம்யூனிச பாத்திர அறிமுகம் இப்படி ஒரு மௌனமாக நிகழ்ந்திருக்கிறது. பின்பு அங்கே சக தோழர்களுடன் அறிமுகமாகிறார். மொத்தம் ஐவர் மட்டுமே அங்கே கட்சியாக இருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கான சங்கம் அங்கே இல்லை, யாரும் இணைவதில்லை என்கிறார்கள் மற்ற தோழர்கள். தொழிலாளர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும் அதுதான் முக்கியமானது என்று தோழர்களுக்கு விளக்குகிறான் கிருஷ்ணன். மற்ற ஐந்து தோழர்களும் கிருஷ்ணனை விட பத்து பதினைந்து வருடங்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல கட்சியைப் பற்றியும் கம்யூனிசத்தைப் பற்றியும் சொல்கிறான் கிருஷ்ணன். (அதாவது பாரவையாளர்களுக்குச் சொல்கிறான்)

பின்பு அங்கே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் சென்று கேட்கிறார்கள். யாரும் இவர்களுடன் இணைய முதலில் மறுக்கிறார்கள். பின்பு இணைகிறார்கள். இரவில் அவர்கள் வீடுகளின் முன்பு சென்று தீப்பந்த வெளிச்சத்தில் அவர்களது உரிமைகள் பற்றியும், அரசாங்கத்தில் அறிக்கைகள் பற்றியும் போராடுவதன் அவசியம் குறித்தும் உரையாற்றுகிறான். அவர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். காவல்துறையால் கைதாகிறான். அடிவாங்குகிறான். கட்சியால் விடுவிக்கப்படுகிறான் பின்பும் போராடுகிறான், தொழிலாளிகளின் நியாயமான கூலியை போராடிப் பெற்றுத் தருகிறான். தொழிலாளர் சங்கத்தைக் கட்டுகிறான். இவை திரைப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளதை கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் போராட்டம் இன்னும் இன்னல் மிக்கது, நீண்டது. வெறும் உண்டியல் குலுக்கிகள், உண்ணா நோன்பு இருப்பவர்கள் என்று புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அது தெரியாது. இதைப் போன்றே விவசாயத் தொழிலாளர்களுக்கும் வரவேண்டிய நியாயமான கூலியைப் போராட்டங்களின் மூலம் பெற்றுக் கொடுக்கிறான். ஒரு இடத்தில் பாண்டிக்கார ஆட்கள் என்ற இனவெறிச் சொல்லும் வருகிறது சகாவின் வாயிலிருந்தே.

இந்த இடத்தில் ஒரு காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலவுடமையாளரான அம்பட்டரிடம் பேசிவிட்டு அவர் வீட்டிலிருந்து தோழர்களுடன் வெளியேறுகிறான் கிருஷ்ணன். அப்போது அம்பட்டர் கேட்கிறார்

உன் பெயரென்ன ?

கிருஷ்ணன்.

கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டும்தானா ? பேருக்கு ஒரு வாலில்லையா ? கிருஷ்ணன் நம்பூதிரி, கிருஷ்ணன் நாயர் என்றெல்லாம் இல்லையா ? 

என்னுடைய ஜாதியயும் நம்பிக்கையயும் அறிய வேண்டுமென்றால் அது என்னுடைய பெயரின் வாலில் இல்லை. என்னுடைய பேரின் முன்னர் உள்ளது. தோழர் (சகாவு) !  சகாவு கிருஷ்ணன் ! 

இந்தக் காட்சி ஜாதியை எதிர்ப்பவர் அனைவராலும் கொண்டாடப்படும். 

சகாவின் தொல்லை தாங்காமல் அம்பட்டர், அந்த உதவி ஆய்வாளரை ஏவி அவனை கொல்வதற்கு முயல்கிறார். ஆனால் அவர் சகாவின் நண்பராகி விடுகிறார். அவர்தான் கிச்சுவிடம் இதுவரையான கதையைச் சொல்கிறார். அப்போது அங்கே வழக்கறிஞர் ஒருவரும், இன்னும் சில தோழர்களும் வருகிறார்கள். அங்கே வெளியே காத்திருக்கும் ஆட்களிடமும் அந்த கதை சொல்லும் ஆளிடமும் இது வரை இயங்காமல் இருந்த டீ எஸ்டேட் மீண்டும் திறக்கப்படப் போகிறது என்ற நற்செய்தியைச் சொல்கிறார். அங்கிருப்பவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். அதற்குக் காரணமான சகாவு அங்கே உள்ளே இருக்கிறார் என்று சொல்கிறார் அந்தக் காவலர். இதையெல்லாம் பார்க்கும் கிச்சு தன்னை ஒரு சகாவு போல உணர்கிறான். 

பின்பு சகாவு கிருஷ்ணனின் மனைவியும் மகளையும் பார்க்கிறான். அவர்களும் அங்கேதான் இருக்கிறார்கள். அங்கே சகாவுவின் திருமணம் பற்றி அறிகிறான். அது ஒரு நயமான கதை. லஷ்மி அங்கே தேயிலைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். அங்கே கட்சியை வளர்க்க வந்த கிருஷ்ணனுடன் போராடுகிறாள் லக்ஷ்மி. அவள் போராடுவதால் அவளுக்கு திருமணம் தள்ளிப் போவதாக அவளது பெற்றோர் அவளை அதிலிருந்து தடுக்கின்றனர். இவள் போராட்டத்தில் ஈடுபடுவதால் யாரும் திருமணம் செய்ய மறுத்தால் தானே திருமணம் செய்வதாக கிருஷ்ணன் அப்போதைக்கு சொல்லி வைக்கிறான். ஆனால் ஒரு வருடம் கழித்து அதை மீண்டும் ஒரு தோழர் நினைவூட்ட பின்னர் சம்மதிக்கிறான். ஆனால் லக்ஷ்மி அவன் விரும்பாவிட்டால் திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணன் திருமணம் செய்ய சம்மதம் என்கிறான். திருமணத்தன்று வெளியே ஒரு பிரச்சனைக்காக முன்னிரவு சென்றவன் திருமண நேரம் கடந்தும் வரவில்லை. சென்ற இடத்தில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு பிரச்சனை தீர்ந்தவுடன் திரும்பச் செல்ல எத்தனிக்கிறான். அப்போது அவனுடன் இருக்கும் தோழர் இனி வேறொன்றும் முக்கியமான வேலை இல்லையே என்று கேட்கிறார். அப்போதுதான் அப்போது அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நேரம் என உறைக்கிறது. சகாவுக்கள் இப்படி தன்னை மறந்து சமூகத்திற்காக உழைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

பின்பு திருமணம் செய்யுமிடத்திற்குச் செல்ல அங்கே அனைவரும் சென்று விட்டிருக்கின்றனர். லக்ஷ்மி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறாள். தான் ஏமாற்றி ஓடிவிட்டதாக நினைத்துக் கொண்டாயா என்கிறான் கிருஷ்ணன். லக்ஷ்மி தான் அப்படி நினைத்திருந்தால் இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருக்க மாட்டேன் என்கிறாள். பின்பு அங்கே கட்டியிருக்கும் சிவப்புத் துணியொன்றை எடுத்து தாலியாகக் கட்டுகிறான் கிருஷ்ணன். இப்படியாகக் கவிதையாக இருக்கிறது அவர்களது திருமணக்கதை. 

இப்படிப்பட்ட சகாவுவின் மகளும் ஒரு அரசியல் ஊட்டப்பட்டதாகவே வளர்கிறாள். அவள் விபச்சாரம் செய்த பெண்களை காவல்துறையின் பிடியிலிருந்து மறுவாழ்வுக்காக மீட்கிறாள். அதில் தனது பாலய காலத் தோழியும் இருந்தது கண்டு அறிகிறாள். அவளது குடும்பம் அவர்கள் பகுதியிலிருந்த டீ எஸ்டேட் மூடப்பட்டதால் பிழைக்க வழியின்றி பலரும் வெளியேறினர். பட்டின் காரணமாக அவள் விபச்சாரம் செய்ய நேர்ந்ததை அவளது தந்தை சகாவு கிருஷ்ணனிடமும், அவரது மகளிடமும் சொல்கிறாள். அதனால் கிருஷ்ணன் அங்கே சென்று பார்க்கிறார். பல வருடங்களுக்கு முன்பு ஒருவர் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக கிருஷ்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார். அவரிடம் சென்று அந்த எஸ்டேட்டை வாங்கி நடத்த முடியுமா என்று கேட்கிறார். இதனால் பல பேர் வாழ்வு பெறுவார்கள் என்பதற்காக அவர் சம்மதிக்கிறார். ஆனால் அப்பகுதியில் ரிசார்ட் வைத்திருக்கும் டோன் என்பவன் அதற்கு இடையூறு செய்கிறான். அவனுடன் நடந்த சண்டையில்தான் கத்திக்குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் சகாவு கிருஷ்ணன். 

இதையெல்லாம் கேட்கும் கிச்சு, தனது நண்பனையே அடியாள்களைக் கொண்டு தாக்கும் திட்டத்தைக் கைவிடுகிறான். தனது அம்மாவிடம் தான் உணவருந்த விரைவில் வருவதாகவும் அலைபேசியில் கிச்சு சொல்கிறான். அவரைக் கத்தியால் குத்திய டோனியை எதிர்த்து போராடச் செல்கிறான். படம் முடிகிறது. ஒரு சகாவு தொடங்கிய போராட்டத்தை இன்னொரு சகாவு தொடர்வான் என்று முடிக்கிறார்கள். மற்ற திரைப்படங்களில் சித்தரிப்பதைப் போன்றே உடை கசங்காத, ஒப்பனை மிக்க நாயகத்தனமான பாத்திரத்தில் ஒரு தோழனை, பொதுவுடமைவாதியை சித்தரித்திருப்பது அயற்சியை ஏற்படுத்துகிறது என்ற போதிலும் ஓரளவு நிறைவான படமாக இருக்கிறது சகாவு.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தஸ்லிமா நஸ்ரின் விரட்டியடிப்பு, அப்ப ஜனநாயகம் ? அதுவும்தான் !

கடந்த மாதம் வியாழக்கிழமை வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா அஜந்தா, எல்லோரா பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்தார். அதை அறிந்த ஆல் இன்டியா மஜ்லிஸ் - இ - இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சார்ந்த சயித் இம்தியாஸ் அலி என்ற முன்னாள் என்டிடிவி இன் நிருபர்/சட்டப் பேரவை உறுப்பினர் தலைமையில் ஔரங்காபாத் விமான நிலையத்தின் வெளியே நின்று ஏறக்குறை 500 பேர்களுடன் வந்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவர் விமான நிலையத்திலேயே இருந்து அடுத்த விமானத்தில் மும்பை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இதைப் பற்றி வருந்திய தஸ்லிமா ஒரு பெரும் ஜனநாயக நாட்டில் இங்கனம் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். 

அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலும் அவர் தனது கருத்து காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் எங்கும் தனித்துச் செல்ல இயலாது. பாதுகாவலர்களுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் தம் மகிழ்ச்சிக்காக எங்கும் தனித்துச் செல்ல முடியாத துயரநிலையாகக் கருதுகிறார். 

நான் பல வருடங்களாக கனவும் கண்டேன் அது பலிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். அஜந்தாவின் சிறப்புகளையும், எல்லோராவின் மாயாஜாலங்களையும் பார்க்கபோகிறேன் என்று நினைத்தேன். நான் இந்தியா கொண்டிருக்கின்ற பல வரலாற்று அற்புதங்களை கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றைக் காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் என் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இழந்திருக்கிறேன். இங்கே இந்தியாவில் ஆயுதமேந்திய பாதுகாவலர்களைக் கொண்டிருக்கிறேன். தனிச்சிறப்பான அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 2007 இல் என் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இது தொடர்கதையானது. நான் நிகழ்ச்சிகளில் எங்காவது கலந்து கொள்ளப் போகிறேன் என்றால் அது செய்தியாகிவிடும். விளம்பரமாகி விடும். நான் தாக்குதல் அச்சமின்றி கலந்து கொண்டிருப்பேன். ஆனால் தாக்குதல் முதன் முறை நடந்த பின்னர் அது தொடர்கிறது. ஒரு தொற்று நோயைப் போலப் பரவி விட்டது. நான் எனது மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்ய முடிவதில்லை. விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. என்னுடைய பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டியிருக்கிறது. எங்கே, எதற்கு, எப்போது என்றெல்லாம்.  பின்பு அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வர். 

நான் அஜந்தா செல்வதை யாருக்கும் அறிவிக்க வில்லை. விமானப் பயணம் தொடர்பாக நான் கொடுக்க வேண்டிய அனைத்து உண்மையான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் அதை மகாராஷ்ட்ராவிற்கு அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி எனது பாதுகாப்பை உறுத் செய்தனர். நான் மகாராஷ்ட்ராவில் பாதுகாவலர்களைப் பெற்று விட்டேன். தங்குவதற்கு விடுதியிலும் பதிந்து விட்டேன் என்னுடன் வருபவரது பெயரில். துணையாக எனது பெயரை சேர்த்துக் கொண்டேன். என்னுடன் துணையாக வந்த இளம்பெண் எனது மகள் போன்றவர். ஜூலை 29 ஆம் நாள் நான் டெல்லியிலிருந்து ஔரங்காபாத் சென்றேன். அங்கே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதே ஒரு அதிகாரி என்னைத் தடுத்தார். 

"இங்கே நிலைமை சரியில்லை. உங்களுக்கு எதிராக 500 பேர் நீங்கள் தங்கப் போகிற விடுதியின் முன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய வரவு மிகவும் இரகசியமாக டெல்லி காவல்துறையால் மராட்டிய காவல்துறைக்கு அனுப்பப்பட்ட செய்தி கடும்போக்குவாதிகளுக்கு எப்படித் தெரிந்தது ?. அந்த அதிகாரிக்கும் எப்படி இந்த செய்தி கசிந்தது என்று தெரியவில்லை. தாங்க முடியாத வேதனையுடனும், உதவியற்றவளாகவும் உணர்ந்த நான் அவரிடம் நான் 

"இப்போது என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார். 

எப்போது ? எப்படி ? என்றேன். 

நாளை காலையில் டெல்லிக்கு ஒரு ஏர் இன்டியா விமானம் இருக்கிறது.

நாளைக் காலை வரை என்ன செய்வது ? நான் எங்கே தங்குவது ?"

விமான நிலையத்தில்.

பின்பு நான் ஏர் இன்டியா பயணச்சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று மும்பைக்கு இரண்டு சீட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அதற்குள் போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள்ளும் வந்து விட்டார்கள். என்னுடைய பாதுகாப்பு அதிகாரி எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். நான் அங்கிருந்து செல்லும் போது 200 பேர் காது கிழியும் அளவுக்கு "தஸ்லிமா திரும்பிப் போ" "தஸ்லிமா ஒழிக" "இறைவன் மிகப் பெரியவன்" என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். மும்பைக்குச் சென்ற பிறகு எங்காவது கலவரம் நடந்திருக்கிறதா என்று இணையத்தில் பார்த்து விட்டு இல்லையென்று நிம்மதியடைந்தேன். இது அவர் எழுதிய அஜந்தா எல்லோர அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதி. முழுவதும் படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

ஒரு தனி நபர் அதுவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஒடி ஒளிய வேண்டிய நிலையில் இருக்கிறார். இங்கே கருத்துரிமைக்கான பாதுகாப்பு என்பது அந்த அளவில் இருக்கிறது . சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு வட மாநிலங்களில் தலைப்புச் செய்தி அளவுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே பெரிதாக எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. 

இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மதவாதிகள்/மதவெறியர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பவர்கள் மதவாதிகள். ஆனால் இறைமறுப்பாளர்களை மட்டும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். மதத்தை விமர்சிப்பவர்கள், மதவாதத்தை எதிப்பவர்களுக்கு படுகொலையைத்தான் பரிசளிக்கிறார்கள். 


ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதவாதிக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா ? உலகத்தின் எல்லா இஸ்லாமல்லாத நாடுகளுக்கும் செல்கிறார். அங்கே யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. அதே போல் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் இஸ்லாமல்லாத ஜனநாயக நாட்டில் கூட சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியவில்லை. நிம்மதியாக நடமாட முடிவதில்லை.

இஸ்லாமிய மதவாதிகள், விவாதத்துக்கு வா நேரடி விவாதத்துக்கு வா என்று அழைக்கிறார்கள். அதே விவாதத்தை இணையத்தில் நடத்துவது வீண் என்கிறார்கள். இணைய விவாதம் வீண் என்று சொல்கிறவர்கள் இணையத்திலிருந்து வெளியேறி களத்தில் மட்டும் இயங்குவதில்லை, தொடர்ந்து இணையத்திலேயேயும் இயங்குகிறார்கள், ஏன்?. இஸ்லாமிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே இல்லை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை இஸ்லாமிய எதிரிகள் என்று வகைப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானவராக அவரை நிறுத்தி விடுகிறார்கள். கருத்தை விமர்சனம் செய்ய முடியாத பட்சத்தில் அவர் எதிரி ஆக்கப்படுகிறார்.

ஏன் இஸ்லாமை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஏன் எங்கள் மீது வன்மம் என்றும் கூட நினைக்கக்கூடும். இஸ்லாமியர்கள் தாங்கள் உண்டு தங்கள் மதம் உண்டு என்று வாழ்வதில்லை, அதைப் பரப்புரை செய்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வெறும் மார்க்கமாக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி அறிவியல் ரீதியாக விவாதிக்கும் துணிச்சல் தங்கள் மதத்தில் இருப்பதாகக் கருதினால் எல்லாவகை எதிர்க்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய போராட்டங்களால் அல்ல. வன்முறைகளால் அல்ல. ஆனால் என்ன செய்கிறார்கள் ? எங்கே அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அங்கே விமர்சனம் செய்பவரை அவதூறு செய்கிறார், வெறுக்கிறார், விதண்டாவாதம் செய்கிறார், இஸ்லாமிய எதிரி, துரோகி என்கின்றனர். மற்றவர் மீதான வெறுப்பை விதைக்காத வரை விமர்சனம் என்பது எந்த ஒரு எல்லையும் அற்றது. 

இவர்கள் மதத்தை மட்டும் பரப்புரை செய்வதில்லை, அது சார்ந்த சட்டத்தையும் (ஷரியத்) உலகத்திற்கே பொதுவானதாகக் காட்டுகின்றனர். படைப்புக் கொள்கையை மறுக்கும் பரிணாமக் கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இப்படி அறிவியல் அறிஞர்கள் போல் விவாதம் செய்பவர்கள், அதே போல் இஸ்லாமை அறிவியல் பூர்வமாக வரலாற்றுத் தரவுகளுடன் விமர்சனம் செய்பவர்களுடன் எதிர் விவாதம் செய்யும் போது அதை எப்படி எதிர்கொள்கின்றனர். அவரை இஸ்லாமிய சமூகத்தின் எதிரியாகப் பிரகடனம் செய்து விடுகின்றனர். இறை மறுப்பாளர்களின் கருத்துக்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றது, மனதைப் புண்படுத்துகிறது, மத நிந்தனை செய்கிறது என்ற அயோக்கியத்தனமான கருத்துக்களைக் கொண்டு வந்து பாமர மக்களைத் துணைக்கு அழைத்து இறைமறுப்பாளர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியராகப் பிறந்து இறைமறுப்பாளராக மாறியவர்கள், மதவாதத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்த நிலைதான்.

யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்
ரஷ்ய கன்னிகாஸ்த்ரி இஸ்லாத்தைத் தழுவினார்
அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாத்தை ஏற்றார்
பாபர் மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை ஏற்றார்
பெரியாரியவாதி ஏகத்துவத்தை ஏற்றார்
ஐரோப்பாவில் இஸ்லாம் வளர்கிறது
அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது
ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுகிறது
இஸ்லாமை நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் பெண்கள்

என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது ? அந்தக் குறிப்பிட்ட நபர் இஸ்லாமை ஏற்பதை அந்த நாட்டின் அரசோ அல்லது சமூகமோ தடை செய்வதில்லை. யாரும் இஸ்லாத்தைப் பரப்பக்கூடாது என்று போராடவில்லை. பிறகு ஏன் இஸ்லாமிய மதவாதிகள் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு ஜனநாயகம் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் சுதந்திரத்தை இறைமறுப்பாளர்கள் பயன்படுத்தி மதத்தை விமர்சித்தால் அதற்கெதிராக போராடுவார்கள். தமக்கு அதிகாரம் உள்ள நாடுகளில், பகுதிகளில் சட்டத்தின் மூலமாகவே மத எதிர்ப்பைத் தடுத்து வைப்பார்கள். 

மதவாதம் அற்ற நாடுகளில், அதாவது சட்டத்தில் மதம் என்பது தனிமனித உரிமையாக உள்ள நாடுகளில், மதம் என்பது தனி நபர் சார்ந்தது. அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ? இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதச் சட்டம் நடைபெறும் நாடுகளில் எந்தளவுக்கு இறைமறுப்பாளர்களுக்கு இருக்கிறது. நான் கேட்பது இஸ்லாமிலிருந்து விலகி இறைமறுப்பாளராக வாழ்பவர்க்கு. இறைமறுப்பை பரப்புரை செய்பவர்க்கு. இல்லையென்றால் அதற்கு இஸ்லாமைத்தானே விமர்சிக்க வேண்டும் ? 


நான் ஃபேஸ்புக்கில் விவாதமொன்றில் ஒருவரிடம் இந்தக் கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமைப் பரப்புவதைப் போல் இஸ்லாமிய நாடுகளில் வேறு கொள்கையைப் பரப்பு முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இஸ்லாமை அவர்கள் சட்டமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் பிழைக்கபோன இடத்தில் உங்கள் சித்தாந்தத்தைச் சொன்னால் யார் சம்மதிப்பார்கள் என்றார். இஸ்லாமியர்களும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிழைக்கத்தான் சென்றார்கள். படியளக்கச் செல்லவில்லை. அங்கே அவர்கள் தமது சித்தாந்தத்தைப் பரப்பவில்லையா ? நான் கேட்பது மதவாத நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மதத்திலிருந்து விரும்பாமல் வெளிவருகிறவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை ?

இஸ்லாமியப் பரப்புரை எப்படித் தொடங்குகிறது. சிலைகள் யாவும் கடவுளல்ல. இணை வைத்தல் கூடாது. படைப்பினங்களை வணங்கக் கூடாது. இஸ்லாமைத் தவிர அனைத்து மதங்களும் சிலையை வைத்து வணங்குகின்றன. அதைத்தான் முதலில் மறுக்கிறது இஸ்லாம். இஸ்லாம் பரப்புரையே மற்றவர்களின் முதல் நம்பிக்கையான (மாற்று மதங்களின்) "அவர்களின் கடவுள்" உண்மையான கடவுள் இல்லை நாங்கள் சொல்வதுதான் உண்மையான கடவுள். ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் நடுவில் நின்று உங்கள் நம்பிக்கை பொய் நாங்கள் சொல்வதுதான் மெய் என்கிறார்கள். உங்கள் கடவுள் வெறும் சிலை அது கடவுள் இல்லை" என்கிறார்கள். பிழைக்க வந்த நாட்டில் அங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறோம் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் இஸ்லாமிய மதவாதிகள் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள்.  அது எப்படி சாத்தியமாக இருக்கிறது, மிக இயல்பாக இருக்கிறது ? அந்த நாட்டின் ஜனநாயகமும் அதனால் பண்பட்ட அந்நாட்டினரின், அச்சமயத்தவரின் சகிப்புத்தன்மையின் காரணமாகத்தானே. 

அதே நேரம் இவர்களை சுதந்திரமாக மதம் பரப்பச் செய்ய அனுமதிக்கும் ஜனநாயகத்தை, அதைப் பின்பற்றும் மேற்கத்தியப் பண்பாட்டை விமர்சனமும் செய்கிறார்கள். விபச்சாரம், அவிழ்த்துப் போட்டு அலையும் கலாச்சாரம் என்பார்கள். அவிழ்த்துப் போடும் சுதந்திரம் இருப்பதால்தானே அவர்கள் வேறுமதத்தையும் தழுவும் சுதந்திரமும் இருக்கிறது. 

இவர்கள் தமது மதக்கருத்துக்களைத்தான் எல்லா நிகழ்வுகளின் மீதும் கருத்துக்களாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. உணர்வு (இஸ்லாமிய) என்ற வார இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கல்லூரியில் விரிவுளையாளரும், கல்லூரி மாணவியும் திருமணம் செய்திருந்த செய்தியைப் போட்டு அதில் விமர்சனமும் இருந்தது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி கற்பது இதுமாதிரியான செயல்களைத் தூண்டும். எனவே இருபாலருக்கும் தனித்தனியான கல்வி நிலையங்களைக் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று முடித்திருந்தார்கள். இது மாதிரிதான் சமூகத்தில் நிகழும் பலவகையான நிகழ்வுகளில் தமது மதம் சொல்லும் கருத்துக்களைச் சொல்லி அதைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். 

காதல் தவறானது, கலப்புத் திருமணம் தவறானது போன்ற தனி மனித உரிமைகளுக்கு எதிரான மதக் கருத்துக்களை சொல்கிறார்கள்  காதலர் தினம் விபச்சாரம், கற்புக்கொள்ளை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலக் கூடாது என்கிறார்கள். ஆக இவர்கள் இப்படியெல்லாம் விமர்சனம் செய்வது தான் சாராத சமூகத்தையும் சேர்த்துத்தான். இதே போல் இஸ்லாமிய எதிர்ப்பாளர் தரப்பு பர்தாவை விமர்சனம் செய்யும் போது மொத்த சமூகத்தையும் சமூகப்பெண்களையும் வன்மம் கொண்டும் வெறுப்பு கொண்டும்வி மர்சனம் செய்கிறீர்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ?

இதே போல் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவன் நின்று கடவுள் இல்லை, முகமது தூதர் இல்லை என்று சொல்லிவிட்டு தனது விளக்கத்தைத் தொடர முடியுமா ?. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. ஒருவன் மத நிந்தனை செய்துவிட்டான் என்ற புரளியைக் கிளப்பி விட்டாலே போதும். வங்க தேசம், பாகிஸ்தான் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவன் உயிருடன் இருக்க மாட்டான். ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இஸ்லாமிய மதத்துக்கு மட்டும் இந்த சலுகை ?. உங்களை எப்படி புண்படுத்தாமல் விமர்சிக்க முடியும். நாங்கள் அறிவியல் பூர்வமானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று சொல்பவர்கள் ஏன் "மதத்தைப் புண்படுத்தும்" என்ற நேர்மையான விவாதத்திற்கு எதிரான கருத்தைப் பயன்படுத்த வேண்டும் ?

இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை. ஏனென்றால் மதவாதிகளுக்காக தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியதே இடதுசாரிகள் என்றிருக்கையில் அதற்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும். கருத்தை எதிர்கொள்ளும் பொறுமையோ பக்குவமோ மதவாதிகளுக்கு இருந்ததே இல்லை. இங்கே மதச்சார்பின்மை என்பதே போலி மதச்சார்பின்மை என்றும், மதச்சார்பின்மைவியாதிகள் என்றும், சிக்குலரிஸ்டுகள், சூடோ செக்குலரிஸ்டுகள் என்றும் நல்ல பெயர் வாங்கியவர்கள்தான் மதச்சார்பின்மை பேசுகிறவர்கள். அப்படி இருக்க மதவாதிகள் மட்டும் எப்படி இருப்பார்கள். மத உணர்வைத் தூண்டி அரசியல் செய்கிறவர்களாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் இது பெரிய செய்தியாகவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கலாம் சிலையில் மதத்திணிப்பு

ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் 15  கோடி ரூபாய் செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதில் அவருக்குப் பக்கத்தில் பகவத் கீதையையும் சேர்த்து சிலையில் வடித்திருக்கிறார்கள். இதை விடக் கேவலம் உண்டா ? அவர் வீணை வாசிப்பார் அதனால் கையில் வீணை சரி. அவர் பகவத் கீதையில் இருந்து மேற்கோள் காட்டுவார் அதனால் கீதையை சிலையில் வடித்தது சரியா ? அவர் என்ன சாகும் வரை கீதையையா பிரச்சாரம் பண்ணினார் ? மாணவர்களிடம் கல்வி குறித்துதானே பேசினார். 

அவரைப் பற்றி நினைத்தால் என்ன நினைவுக்கு வருகிறது. குழந்தைகள், கல்வி, இந்தியா, வல்லரசு, போக்ரான் அணுகுண்டு இத்யாதிகள். இப்பேர்ப்பட்டவரின் சிலை அருகில் ஒரு மதத்தைச் சார்ந்த நூல் எதற்கு ? அறிவியலுக்கும் மத நூலுக்கும் என்ன தொடர்பு. அவர் அடிக்கடி சுட்டிக் காட்டும் (ஓரளவிற்கு அனைவரும் ஏற்கக்கூடிய மதச்சார்பற்ற)திருக்குறள் கூட அங்கே வைத்திருக்கத் தேவையில்லை. இதற்கும் பகவத் கீதைக்கும் என்ன தொடர்பு. இந்த பகவத் கீதை எல்லா இந்துக்களின் புனித நூலும் அல்ல. இந்து மதத்திலிருக்கும் ஒரு புனித நூல். அது பைபிள் போன்றதோ, குரான் போன்றதோ அன்று. இந்து மதம் பன்மைத்தன்மை வாய்ந்தது இதுதான் இந்து மதம் இது இந்து மதம் இல்லை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பழக்கவழக்கங்களைக் கொண்டது. ஆனால் அதன் பன்மைத் தன்மையை மறுத்து இஸ்லாமிய, கிறித்தவ, பௌத்த மத பாணியில் கொண்டு சென்று இந்து மத ஆட்சியை அமைக்க முயல்பவர்கள் இந்துத்துவாவாதிகள். 
    
                                  

அவர் உயிருடன் இருக்கும் போது இந்துமத சாமியாரின் கீழ் அமர்ந்திருந்தது, கோல்வால்கர் சிலையில் வணக்கம் வைத்தது போன்றவை பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியாகியது. அதன் மூலம் இந்துமதவாதிகள் அவரை தங்களுடையவராகக் காட்டிக் கொண்டனர். குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகளை மறைத்து வேடம் போடவே பாஜக பிறப்பால் இஸ்லாமியரான அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அவரை பிரபலமும் ஆக்கியது. அவர் பெரும்பான்மையான இந்தியர்களால் போற்றுதலுக்கு உரியவரானார். அவரை மக்கள் பாஜவின் அடையாளமாகப் பார்க்கவில்லை. எந்த மதமும் சாராதவராகவே இருந்தார் மக்களின் பார்வையில், ஆனால் இந்த பகவத் கீதையை அவர் அருகில் வைத்தது மதத் திணிப்பாகவே கொள்ளப்படும். இறந்த பிறகும் ஒரு மனிதனுக்கு மதம் திணிக்கப்படுகிறது. 

இதைப் பலரும் கண்டித்தனர். பின்பு அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம் என்பவர் கலாம் சிலையருகில் குரானையும், பைபிளையும்(ஒரு முஸ்லிம் பைபிளையும் சேர்த்து எடுத்துக் கொள்வது உண்மையில் பாராட்டத்தக்கதே) வைத்தார். உடனே இந்து மக்கள் கட்சி என்ற முட்டாள் மதவெறிக்கட்சியினர் வந்து அவர் மீது புகார் கொடுத்தனர். இந்து மதம் இழிவு படுத்தப்பட்டது என்கின்றனர். இந்த முட்டாள்களுக்கு ஒரு முஸ்லிம் சிலைக்கு முன்னர் பகவத் கீதையை வைத்தது தவறாகப்படவில்லை. ஆனால் குரானையும் பைபிளையும் வைத்தது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது என்கிறார்கள். ஒரு மதச்சார்பற்றவர் சிலை என்றால் எந்த நூலையும் வைக்கக்கூடாது இல்லையென்றால் எல்லா நூலையும் வைக்க வேண்டும்தானே அதுதான் நியாயம். மதவெறியர்கள் ஆளும் நாட்டில் இது போன்ற சில்லரைப் பிரச்சனைகளை வைத்தும் கலவரம் செய்ய முடியும், மக்களைக் குழப்ப முடியும். மதவெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கவும் முடியும். கொடுமை !

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் முஸ்லிம் தொப்பி அணிவது, தர்காவிற்குச் செல்வது, நோன்புக் கஞ்சி குடிப்பது, ரம்ஜான் பிரியாணியை அருந்துவது போன்றவை மதச்சார்பின்மையாகப் பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க ஒரு முஸ்லிமின் அருகில் பகவத் கீதையை வைப்பதை ஏன் மதச்சார்பின்மையாக, மத நல்லிணக்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி வருகிறது. இந்துக்கள் அவர்களாக விரும்பிச் செய்வது. அத்வானி முஸ்லிம் குல்லாவை மாட்டியிருக்கிறார். மோடியே முஸ்லிம்களுடன் கையை ஏந்தியவாறு நின்றிருக்கிறார். ஜெயலலிதா நின்றிருக்கிறார். இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். சரி மோடிக்கு சிலை வைக்கும்போதோ, அத்வானிக்கு சிலை வைக்கும்போதோ, வல்லபாய் படேலுக்குச் சிலை வைக்கும்போதோ பக்கத்தில் குரானை வைத்து விட்டு அது முஸ்லிம்களைப் போல அ அவர்கள் நடந்திருக்கிறார்கள், எனவே இப்படிச் சிலை வைப்பது மதச்சார்பின்மையின் அடையாளம் என்றால் அதை ஒத்துக் கொள்ள முடியுமா ? முடியாதல்லவா. மேலும் இப்போது நடப்பது இந்துத்துவா ஆட்சி என்பதாலும், ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி போன்றவற்றை வெறித்தனமாகத் திணிக்கும் அரசாக இருக்கும் காரணத்தாலும்தான் இதை எதிர்க்க வேண்டியிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜாதியத்தின் போலிப் பெருமை

கட்செவி அஞ்சலில் எனக்கு ஒரு படம் வந்திருந்தது. அதில் கவுண்டர்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் சொல்லியிருந்ததை திரைச்சொட்டு(screenshot) எடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதில் அவர் சொல்லியிருக்கும் கருத்து அபத்தத்தின் உச்சம். அதை பரப்புகிறவர்கள் ஜாதிப்பிரியர்கள், ஜாதிவெறியர்கள், ஜாதிவிரும்பிகள், ஜாதித்துதிபாடிகள் மொத்தத்தில் ஜாதிகள். தங்களது ஜாதியை ஒருவர் பெருமையாகச் சொன்னால் எந்த ஜாதிக்குதான் இனிக்காது சொல்லுங்கள்.  இதுதான் எனக்கு வந்த புகைப்படச் செய்தி. இதில் ஏதாவது அடிப்படை உண்மை இருக்கிறதா ? இதைப் பரப்புகிறவர்கள் நோக்கம் என்ன ? இதில் இருப்பதை எப்படி நம்புகிறார்கள். இதை நம்புவது அவர்களின் நம்பிக்கைக்கே எதிரானது அன்றோ ? ஜாதி என்றாலே தன்னைச் சார்ந்த கூட்டத்தை மட்டுமே நம்மவர்கள், நம்ம சனம், நம்மாளுங்க என்றெல்லாம் குழுவாகச் சிந்திப்பது மட்டுமல்லாமல் பிற ஜாதிகளை கீழாகப் பார்ப்பதுதான் ஜாதியம். அவர்களில் சில ஜாதிகளை இழிவாக அடிமைகளைப் போல் நடத்துவதுதான் ஜாதியம்.

                               

கொங்கு பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தனிப்பெருமிதம் உண்டு. ஜாதிப் பெருமிதம்தான். கோவை மரியாதைக்குப் பெயர் பெற்றது என்ற பொய்யும் அப்படி வந்ததுதான். கோயம்பத்தூரில் சந்திப்பவர்களில் என் ஜாதியையும் குலத்தையும் கேட்காதவர்கள் குறைவு. அங்கே ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கூட ஜாதிய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இளைஞர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கோ பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பம் போன்ற உயர்ந்த பணிகளில் இருப்பவர் முதல் தமது விவசாயத் தொழிலில் ஈடுபடுகிற இளைஞர்கள் வரை எல்லாரும் கவுண்டன், கொங்கு, இதுமாதிரியான பெயருடைய கட்செவி அஞ்சல்(வாட்ஸப்) குழுவில் இருப்பார்கள். மற்ற ஜாதியினரைக் இவர்களுக்குள் குறிப்பிட்டுப் பேசுகிற போது, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதை விட அவர்களின் ஜாதிப் பெயரைத்தான் சொல்வார்கள். தேவர் சொன்னார், நாடார் கேட்டார், முதலியார் வரக் காணமே, செட்டியார் எங்கே இப்படியெல்லாம் சொல்வார்கள்.  கோவையைத் தாண்டிய பகுதிகளில் இவையெல்லாம் மிகவும் சாதாரணம். ஏன் கோவையைச் சொல்கிறேனென்றால் கோயம்பத்தூரை வைத்துத்தான் மரியாதையை அடையாளப்படுத்துகிறார்கள்.

கொங்கு பகுதி மட்டும்தான் திராவிடக் கட்சிகளின் ஆட்சியினால் இல்லாமல் உழைப்பால் உயர்ந்த பகுதியாம். அதாவது கவுண்டர்கள் கடுமையாக உழைத்ததால்தான் கொங்கு பகுதி முன்னேறியதாம். அங்கே இருக்கும் மற்ற ஜாதியினர் கூடத்தான் கடுமையாக உழைத்தார்கள். கவுண்டர்களின் தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்து அவர்களின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்கள் கூட வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலிருந்தும், முன்னேறாத பகுதிகளிலிருந்து வந்தும் பலர் (திருப்பூர் போன்ற பகுதிகள்) கொங்கு பகுதியை தமது உழைப்பினால் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெருமையை மட்டும் ஒரு பிரிவினர் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கட்டும் வரியை இவர்களுக்கு இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் ஒதுக்குவதால் இவர்கள் தனி மாநிலம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆண்டபரம்பரை தனிநாடு கேட்கவில்லை என்பதுதன் காரணம் தனி. அப்படி ஒரு தனிமாநிலம் ஜாதியின் பேரில் அமைந்தால் அது எத்தகு கொடுமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு கொங்கு இளைஞனின் குமுறல்
இவர்கள் மற்ற ஜாதிகளுக்கு இணக்கமானவர்களாம், ஒற்றுமையைப் பேணுகிறவர்களாம். அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இணக்கமும் பண்பானவர்களாயும் இருப்பவர்களாக ஜெயமோகன் போன்றவர்களும்   சொல்வார்கள். ஆமாம் ரொம்ப இணக்கமானவர்கள், கவுண்டர்களும் அவர்கள் வீட்டு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பெரியப்பா, தாத்தா வயது பெரியவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லியும் வாடா போடா என்றுதான் அழைப்பார்கள். தங்கள் தோட்டங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு கொட்டாங்கச்சி (அ) தேங்காத்தொட்டியில் தண்ணீர்/தேநீர் கொடுப்பார்கள். அதை எருமை மாடு கட்டப்படும் கட்டித்தாரையின் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். இல்லையென்றால் இவர்கள் ஊற்றுவதை இரண்டு கைகளால் ஏந்தி வாயில் வைத்துக் கொண்டே தண்ணீரைக் குடிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் வாசலில்/கட்டாந்தரையில் உட்கார வைத்துத்தான் சோறு போடுவார்கள். அவர்கள் வீட்டில் சாவு நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து இழவு வீட்டுக்காரர்களின் காலில் விழுந்து எழவு கேட்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர் வீட்டில் எழவானால் அதற்கும் தாழ்த்தப் பட்டவர்களே சென்று துண்டை ஏந்தி அவர்கள் தருவதை வாங்க வேண்டும். புழங்கற ஜாதியில்லையென்றால் இதுதான் இன்றும் கொங்கில் நடந்து வருகின்றது. இவர்களின் வட்டார வழக்குதான் தமிழிலேயே சிறந்தது போலவும், மரியாதைக்குரியது என்றும் எல்லோரும் நம்புவது என்னவொரு முரண்நகை. ஏனுங்க என்று இனிமையாக விளித்ததால் மட்டுமே அவர்கள் பண்பாளர் என்று நம்பிவிடாதீர்கள். ஜாதி என்ற அடையாள நம்பிக்கைதானே இதையெல்லாம் நியாயப்படுத்துகிறது.

ஜாதிக்குப் புதுப்புது விளக்கங்கள் கொடுக்கப்படும் காலம் இது. ஜாதியை இனம் என்பது, இனக்குழு என்பது, ஜாதியே பண்பாடு என்பது, ஜாதியை இனமீட்பு என்பது முதல், ஜாதிக்குத் தனி மாநிலங்கள், தனி நாடுகள் கேட்கும் காலம் இது. அதனால்தான் ஜெயமோகனும் இப்படி அடித்து விடுகிறார். இதை அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். கவுண்டர்கள் மட்டும்தான் மற்ற ஜாதிக்கு இணக்கமானவர்களா ? மற்ற ஜாதியினர்கள் இணக்கமானவர்கள் இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், இதைக் கவுண்டர்களே நம்ப மாட்டார்கள். இணக்கமானவர்கள் என்றால், இவர்கள் பட்டியல் ஜாதியினர்க்கு இணக்கமானவர்களா ? அவர்களை சமமாக நடத்துவார்களா ? மனிதர்களாக மதிப்பவர்களா ? என்பதற்கு ஒரிரு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இன்னொரு திரைச்சொட்டு பதில் சொல்லும். இதைக் கூறியவர் ஒரு கல்லூரி மாணவர். இதன் வாயிலாக ஒரு ஜாதியைக் குறித்து அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பிற ஜாதியிடம் காட்டும் ஜெயமோகன் சொல்லும் அந்த "இணக்கம்" என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனக்கு வந்த ஒரு புகைப்படத்தையும், கிடைத்த ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளேன் இதைக் காண்பவர்கள் ஜாதியைக் குறித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். 

                               

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

முஸ்லிமாக இருந்தால் போதும் கொலை செய்யப்படலாம்

கடந்த வியாழக்கிழமை (22-06-2017) ஒரு கொலை நடந்திருக்கிறது. மோடியின் இந்தியாவில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும் கொலைதான். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள் அத்தகையவர்களாக இருக்கின்றனர். இதுவும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுகிற மாதிரியான நிகழ்வுதான். 

1. செப் 2015 : முஹம்மது அஹ்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனால் அவர் வைத்திருந்தது ஆட்டுக்கறி. கொன்றவனின் தந்தை ஒரு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் வைத்திருப்பவர்.

2. அக் 2015 : உத்தம்பூரில் ஜாஹித் ரசூல் பட் என்னும் 16 வயது சிறுவன் மாடுகள் ஏற்றிய வண்டியில் இருந்த குற்றத்திற்காக அடித்து கொல்லபட்டான்.

3. மார்ச் 2016 : லத்திஹரில், முஹம்மது மஜ்லும், ஆசாத் கான் இருவரும் மாடுகளை விற்பனை செய்த காரணத்திற்காக தூக்கிலிடபட்டு கொலை செய்யபட்டனர்.

4. ஏப்ரல் 2017 : அஸாம் மாவட்டம் அபூ ஹனீஃபா, ரியாஸூதீன் அலி இருவரும் மாடு விற்பனை செய்பவர்கள் என சந்தேகபட்டு அடித்தே கொலை செய்யபட்டனர்.

5. ஏப்ரல் 2017 : பெஹ்லு கான் பசு காவலர்கள்!? என்னும் பயங்கரவாதிகளால் அடித்து துன்புறுத்தபட்டு கொல்லபட்டார்.

6. மே 2017 : மாலீகன், மஹாராஸ்ட்ராவில் இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பால் பண்ணைக்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது இந்துவெறி மாட்டுவெறி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.  

(தகவல்கள் ஃபேஸ்புக்கில் சித்திக் என்பவரின் பதிவிலிருந்து)

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் கொல்லப்பட்டவன் ஒரு முஸ்லிம். கொல்லப்பட்ட காரணமும் நமக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ஏனென்றால் அவன் "தேசப்பகைவன்" அல்லது "மாட்டிறைச்சி உண்பவன்" அல்லது "முல்லா" அல்லது அம்மூன்றுமே எனக் கொள்ளலாம். அதனால் அவனைக் கொல்லலாம். இத்தனைக்கும் அவன் 16 வயதுச் சிறுவன். ரம்ஸானைக் கொண்டாடுவதற்காக பொருட்களை வாங்கி வரக் கடைக்குச் சென்றிருக்கிறான், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு. திரும்பி வருகையில் பயணியர் ரயிலில் வந்திருக்கிறான். அவனுடன் அவனது சகோதரர்கள் மூவரும் வந்திருக்கின்றனர். 

அப்போது ஒரு கும்பலும் ரயிலில் ஒரு நிறுத்தத்தில் ஏறியிருக்கிறது. இவர்களுடன் இருக்கையில் அமர்வது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது. இவர்களின் முஸ்லிம் அடையாளமான தாடியும் குல்லாவும் சேர்ந்து இவர்களை பலியாக்கியிருக்கிறது. தவிரவும் ஜுனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுடன் சண்டையிட்ட அக்கும்ப்பல் இவர்களை, இவர்களின் மதத்தை அவமானப்படுத்தி ஏசியிருக்கிறது, குல்லாவைப் பிடுங்கி வீசியது, தாடியைப் பிடித்து இழுத்திருக்கிறது. "தேசப்பகைவன்", "மாட்டிறைச்சி உண்பவன்", "முல்லா" என்றெல்லாம் அவர்களை வசைபாடிய கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது. இச்சண்டையில் இச்சிறுவனை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொடிய நிகழ்வு நடக்கும் போது சுற்றியிருந்தவர்கள் இவர்களை "தொலைத்துக் கட்டச்" சொல்லி ஆரவாரம் செய்துள்ளனர். இது ஆர் எஸ் எஸ் இயக்க பயங்கரவாதிகள் செய்ததா அல்லது அந்த கொடிய பயங்கரவாதக் கொலைக் கொள்கைகாளால் சைக்கோவான கும்பலால் செய்யப்பட்ட கொலையா என்று தெரியவில்லை. இது ஒரு வெறுப்புணர்ச்சியால் விளைந்த கொடூரக் கொலையாகும். 

இந்துக்கள் பசுக்களை வணங்குகிறார்கள், அதைக் கொல்வது பாவம் என்பது எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கையல்ல. இங்கே பசுவை வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களே அதுவும் மாமிச உணவு உண்ணாதவர்களே மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி, மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதி மூலமாக பணக்காரர்களாக விளங்குகிறவர்கள். ஆனாலும் பசு இந்துக்களின் தெய்வம் என்ற போலிக் கருத்தை உற்பத்தி செய்து அதை சமூகம் முழுவது பரவச் செய்ய முடியும், அதைக் கொல்பவர்களை, உண்பவர்களை, விற்பவர்களை, வாங்குபவர்களை கொலை செய்ய பசுக் காவலர்களால் முடியும். இதெல்லாம் ஒரு நாடா ! உண்மையில் அவர்கள் பசுக் கறியை வைத்திருக்கக் கூடத் தேவையில்லை, அப்படி ஒரு வதந்தியையும் அவர்களே உண்டாக்குவார்கள், அவர்களை அடித்தே கொல்லவும் செய்வார்கள். அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இந்த நாட்டை அப்பேர்ப்பட்ட கொள்கையுடன் ஆள்கிறார்கள். கேவலம் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரும் அவநம்பிக்கையாக உணர்கிறேன் இந்த நாட்டைப் பற்றி !

ஒரு முஸ்லிமைக் கொல்ல இனிக் காரணம் எதுவும் பெரியதாக வேண்டியதில்லை. அவன் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்று சொன்னால் போதும். இன்னும் பத்தாயிரம் முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டாலும் இந்து சமூகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் மௌனம் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவே அன்றி வேறில்லை. அந்தளவுக்கு சமூகமே வக்கற்று தந்நலமேறி, அலட்சியமயமாக உள்ளது. இந்து பயங்கரவாதமோ இந்துக்கள் பெயராலேயே அனைத்து வன்முறைகளையும் முஸ்லிம்களின் மீது செலுத்திக் கொண்டு வருகிறது. நாமெல்லாம் 2017 ஆம் ஆண்டில் இதை மௌனசாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி துலுக்கனுக்கு பாடம் புகட்டினார் என்றுதானே பாஜகவை ஆதரிக்கும் மனநிலை பலருக்கு, அவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் என்ன செய்ய முடியும் ?

ஜுனைத்

ஜுனைத் பிணமாக
ஜுனைத்தின் இல்லத்தில்

நன்றி - http://www.newsjs.com/url.php?p=http://www.hindustantimes.com/delhi-news/how-could-they-hate-us-so-much-family-in-shock-after-16-year-old-muslim-boy-stabbed-to-death-on-train/story-TEzAfE9atfWv0EHaXJm6JJ.html
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment