சீமானுக்கு ஒரு சலாம் - சீமான் பாராட்டப்பட வேண்டியவரே !


எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்கள் ஜெவிடம் பம்மி விடுகிறார்கள் என்று பொதுவாக நம்புகிறோம். ஆனால் ஜெவின் ஆட்சி நடக்கும் போது இப்படி ஒரு தலைவரை வரவைத்து பேச வைத்திருப்பது துணிச்சலான செயலே.

அதே நேரம் யாசின் மாலிக் என்ற தாடி வைத்த முஸ்லிம் மனிதனைப் பார்த்தவுடன் இஸ்லாமோஃபோபியா விஸ்வரூபம் எடுத்துவிட்டதைப் பலரிடம் காண முடிகிறது. இது ஈழத்துக்கு எதிராக இந்தியாவைத் திருப்பி விடும் என்றும் அஞ்சுகிறார்கள். இதற்கு மேலும் இந்தியா ஈழத்துக்கு செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன ?

யாசின் மாலிக் ஒரு "தீவிரவாதியோ" தீவிரவாத இயக்கத் தலைவரோ கிடையாது. ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கம் மட்டுமே. அங்கு இருக்கும் ராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராகவும், அரசியல் உரிமைக்காகவும் போராடுகிற இயக்கம் மட்டுமே. தமிழ்நாட்டில் கூட தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறிவித்துக் கொண்டு சிறு சிறு இயக்கங்கள் இயங்குகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை தேசிய வியாதிகள் நினைவூட்டிக் கொள்ளவும்.

யாசின் மாலிக்
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று பீதியைக் கிளப்பி, சீமானை குற்றவாளிக் கூண்டில் தள்ள முனைகிறவர்கள், சிங்கள ராணுவமே இந்திய இறையாண்மைய மதிப்பதில்லை என்பதையும் நினைவூட்டிக்கொள்ளவும். அந்த சிங்கள ராணுவம் இந்திய இறையாண்மையை மதிக்காத போதும் அவர்களுக்கு இறையாண்மையுடைய இந்தியா பயிற்சி அளிக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். இறையாண்மையுடைய இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று சொல்லிக் கொண்டதையும் நினைவூட்டிக் கொள்ளவும். தற்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக தேசபக்தர்கள் சிலிர்த்து எழுந்த போதும், சீனப் பிரதமர் இந்தியாவிற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து போகிறார்.

காஷ்மீருக்கு சீனா தனி விசா கொடுத்ததை எதிர்ப்பவர்கள், சீனாவின் எதிரியான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுப்பதையும் எதிர்க்க வேண்டும், வங்கதேசப் பிரிவினை பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரானது, திபெத் சீனாவின் இறையாண்மைக்கு எதிரானது. ஈழம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவுக்கு மட்டும்தான் இறையாண்மையா ? இல்லை இந்தியர் என்பதால் இந்த பாரபட்சமா ? அவரவர்க்கு அவரவர் இறையாண்மை. இதில் இந்தியர்கள் மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக மட்டும் நடக்கலாமா? அங்கெல்லாம் அடக்கு முறை நடக்கிறது என்பது பதிலென்றால் காஷ்மீரிலும் அதுதானே நடக்கிறது. மற்ற நாடுகளின் அடக்குமுறைகளை எதிர்ப்பேன், அதே அடக்குமுறை இந்தியாவில் நடந்தால் தேசப்பற்றின் பெயரால் ஆதரிப்பேன். இதுதான் இங்கே நிலைப்பாடு. 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கொலைகாரர்களால் டெல்லியில் வாழ்ந்த 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் சீக்கியர் அமைப்புகள் இலண்டனில் தமிழினப்படுகொலையைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம். சீக்கியர்களின் ஆதரவாவது தமிழர்கள் ஏற்கிறார்களா  இல்லை இந்திரா காந்தியைக் கொன்ற பிரிவினைவாத காலிஸ்தான் சீக்கிய பயங்கரவாதிகளின் ஆதரவு எமக்கு வேண்டாம் என்கிறீரா ?
இங்கு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், தேசப்பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதற்கு ஒருவர் தீவிரவாதியாக இருக்க வேண்டியதில்லை. ஈ காக்காவுக்குக் கூட துரோகம் செய்யாத கூடங்குளம் உதயகுமார் கூட கிறித்தவர் என்ற காரணத்தை வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்று வெறியேறிப் பேசும் தேசபக்தர்கள் இருக்கிறார்கள்.

இதை எதிர்ப்பவர்கள் யார் யாரென்றால் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இந்து மக்கள் கட்சியினர். இந்தியாவையே அந்நியனுக்குக் கூட்டிக் கொடுக்கும் இவர்கள் இந்திய இறையாண்மையைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. இந்து மக்கள் கட்சியின் கொள்கை தெரிந்ததுதான், அவர்கள் தனது கடமையைச் செய்கிறார்கள் அவர்களை நான் விமர்சிக்க மாட்டேன்.

எனக்கு என்ன கசப்பென்றால் இதை விமர்சிக்கும் ஈழ ஆதரவாளர்கள். ஈழத் தமிழர்கள் அடைய வேண்டிய உரிமைகளின் நியாயத்தை அறிந்த இவர்களுக்கு காஷ்மீர் அடைய வேண்டிய நியாயம் தெரியவில்லை. ஈழத் தமிழர் உரிமை பற்றிப் பேசும் போது புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்களைப் பேசாத வாய்கள், காஷ்மீர் என்று வந்து விட்டால் அங்கிருந்து விரட்டப்பட்ட இந்து பண்டிட்களைப் பற்றிச் சொல்லி, தீவிரவாதப் பட்டம் கட்டி கொச்சைப்படுத்துகிறார்கள். இந்து- முஸ்லிம் நல்லிணக்கத்தின் இலக்கணமாய் விளங்கிய காஷ்மீர் நடக்கக் கூடாததெல்லாம் நடந்து இஸ்லாமியர்-பிரிவினைவாதம்-தீவிரவாதம் என்று செல்லரித்துப் போன காரணங்களைச் சொல்லி எதிர்க்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்கள் உலகத்தின் மிக மோசமான தீவிரவாத இயக்கம் என்று உலகத்தால் வர்ணிக்கப்பட்ட புலிகளையும் ஆதரிக்கிறார்கள். அது எப்படி ஒருவர் ஈழத்தை ஆதரித்துக் கொண்டு காஷ்மீரை எதிர்க்க முடியும். நான் இரண்டும் ஒரே பிரச்சனை என்று சொல்லவில்லை. ஆனால் போர், நில ஆக்ரமிப்பு என்பதைத் தவிர இரு பக்க மக்களுமே ராணுவ அடக்கு முறைகளை நாளும் எதிர்கொள்கிறவர்கள்தானே. தமிழனுக்கு வந்தால் குருதி காஷ்மீரிக்கு வந்தால் தக்காளி சட்னியா ? ஏன் ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளவில்லையா ?

தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்கள், தமிழரல்லாத மற்ற இந்தியர்கள் ஈழத் தமிழர் பிரச்சனையை எப்படிப் பார்ப்பார்கள். இங்கிருந்து போய் இன்னொருவனிடம் தனிநாடு கேட்டால் அவன் சும்மா இருப்பானா? ஈழத் தமிழர்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கூடத் தெரியாத மண்டைகளுக்கு இதுதான் உண்மை என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் உயிரே போய்விடுகிறது. அதே போல் பொதுப் புத்தியில், காஷ்மீர் என்பது எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது  காஷ்மீர் இந்தியாவைச் சார்ந்தது, பாகிஸ்தான் துண்டாட நினைக்கிறது, காஷ்மீரிகள் பிரிவினைவாதிகள், இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதைத் தாண்டி உண்மை என்னவென்று அறிய எவரும் விரும்புவதில்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்று எதுகை மோனையாகப் பேசுமளவிற்கு வரலாறு திரிந்துள்ளது. உண்மையை விளக்கினால் தேசத் துரோகியாக்கி விடுகிறார்கள். அவர்கள் ஏன் நம்மைப் போல அமைதியாக வாழ்ந்து கிரிக்கெட்டை ரசிக்காமல் தெருவில் ராணுவத்திற்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள் என்று சிந்திப்பதே இல்லை.  


தமிழர்கள் இனப்படுகொலையை சந்தித்தவர்கள் சம உரிமை மறுக்கப்பட்டவர்கள், ஆனால் காஷ்மீரிகள் சிறப்பு அதிகாரமுடையவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு உரிமை காஷ்மீர்க்கு மட்டும் ஏன் இருக்கிறது என்று கேட்க வேண்டுமல்லவா ? அதில்தான் காஷ்மீர் ஏமாற்றப்பட்ட வரலாறே இருக்கிறது. பாகிஸ்தான் படைகள் நுழைந்த போது காஷ்மீரைக் காக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டது. இந்தியா ஆக்ரமிப்பு நோக்கத்துடன் காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளப்படாது என்றும், அவர்கள் ஆளும் அதிகாரம் அவர்களிடமே இருக்கும் என்றும் உறுதிமொழியுடன்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.

காஷ்மீரிகள் ஜம்முவின் குடிகள், நாம் இந்தியக் குடிகள் என்பது போல

காஷ்மீருக்கு தனிக் கொடி உண்டு

தனி அரசமைப்புச் சட்டம் உண்டு
காஷ்மீர் கொடி
இப்படிப் பல உரிமைகள் 1957 இல் இந்திய அரசாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டவையே. பல வருடங்கள் முடிந்த பின்னரும், வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இழுத்தடித்தாலேயே அவர்கள் போராட வேண்டியதாயிற்று. மேலும் ராணுவம், துணை ராணுவம், ஊர்க்காவல் படை என ராணுவத்தின் மூஞ்சியிலேயே 20 வருடங்களுக்கும் மேலாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

பின்பு உரிமைகளின்றி அடக்குமுறையும், புறக்கணிப்பும் தொடர்ந்த பின்னரே விடுதலைப் போராட்டம் தொடங்கியது 1980களின் பிற்பகுதிகளில். ராணுவ நடவடிக்கைகள் காரணமாக 70000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வீதியில் சோதனைகள், கைதுகள், கடத்தல், காணாமல் போதல் என்ற ராணுவத்தின் கொடுமைகள் நாளும் நடக்கின்றன.

அமர்நாத் பனிலிங்கத்தை வணங்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்களே அந்தக் குகையைக் கண்டு பிடித்தவரே ஒரு முஸ்லிம். யாத்திரை செல்கிறவர்களுக்கு வேண்டிய அடிப்படை உதவிகளைச் செய்கிறவர்களும் முஸ்லிம்களே. எனவே அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி இருப்பவர்கள் ஏன் இந்தியாவை எதிர்க்கிறார்கள் என்று எண்ண வேண்டாமா ? போராட்டம் நடக்கும் இடங்களில் அதை சிதைக்க இனவாதம், மதவாதம் தூண்டப்படுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். காஷ்மீரிலும் அதுதான் நடந்தது.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ராணுவத்தினர் மீது கல்லை விட்டு எறிகிறார்களே ஏன் அப்படி ஆனார்கள் என்று சிந்திக்க வேண்டாமா ? இராணுவத்தின் கண்காணிப்பில் வாழும் கொடுமையைப் புரிந்து கொள்ள வேண்டாமா ?

காஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள் பலவும் இந்நிலைதான் நிலவுகின்றன. மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒன்று போதும் இந்திய ராணுவத்தின் யோக்கியதைக்கு, ஈழத்திற்கு இசைப்பிரியா என்றால், மணிப்பூரில் மனோரமா தேவி, காஷ்மீரில் நிலோஃபர் ஜான் என எல்லா இடத்திலும் ஒரே வகையான வன்முறைகள்.

ஐரோம் ஷர்மிளா ஏன் 12 வருடங்களாக பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் ? என்றெல்லாம் யோசிக்காமல் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் என்று ஒரே அடியில் கொச்சைப் படுத்துகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ?

இந்தக் கமல்ஹாசன் இருக்கிறாரே அவர் இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரானவர், கமல் ஹாசன் என்ற தனது பெயர் தான் எந்த மதத்தைச் சார்ந்தவன் (இந்துவா அல்லது முஸ்லிமா) என்ற குழப்பத்தை மற்றவர்க்க்கு ஏற்படுத்துவதை பெருமையாகக் கருதிகிறவர். ஷாருக் கான் தனது இஸ்லாமியப் பெயரால் அமெரிக்க விமானத்துறை அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது பெயரை அரபி ஒலியுடன் இருக்குமாறு மாற்றிக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு மனிதாபிமானமுடையவர் தனது விஸ்வரூபம் படத்தில் அமெரிக்காவினால் ஆக்ரமிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களிடமிருந்து அமெரிக்காவைக் காக்கும் இந்தியனாக நடித்தார் என்பது எத்தகைய முரண்நகை. அப்படித்தான் இருக்கிறது சிலருடைய கருத்து. நான் இந்தியன் எனவே இந்தியா என்ன செய்தாலும் அது தவறில்லை நான் தேசபக்தியின் காரண்மாக ஆதரிப்பேன். நான் தமிழன் எனவே புலிகள் என்ன செய்தாலும் ஆதரிப்பேன் என்ற கொள்கையெல்லாம் எனக்கில்லை.

அது போலவே ஈழத் தமிழர்களின் துன்பத்தைக் கண்டு இரங்குகிறவர்கள், யாசின் மாலிக்கின் வருகையை எதிர்ப்பது எந்த வகையில் சேர்த்தி ? இவருக்காக ஆதரவு தரும் முஸ்லிம்களைக் கண்டு இவர்கள் முகம் சுளிக்கிறார்கள். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாத, பிரிவினைவாத, இறையாண்மைக்கு எதிரானவர்களை ஆதரிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஈழத் தமிழர் துன்பம் பற்றிப் பேசினால் புலி பயங்கரவாதம் பற்றிப் பேசும் சோ வைப் போலவே நடந்து கொள்கிறார்கள். காஷ்மீரிகள் துன்பம் என்பது மற்ந்து பிரிவினைவாதம் மட்டுமே முன் தெரிகிறது.
 

புலிகளை நாம் ஆதரிப்பதை மற்ற மாநிலத்தவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமர் ராஜீவைக் கொன்ற பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்  என்றுதானே நினைப்பார்கள்.

யாசின் மாலிக்கை அழைத்து வருவது இந்தியாவை ஈழத்துக்கு எதிராகத் திருப்பாதா ? இப்போது இந்தியா ஈழத்தை எப்படிப்பார்க்கிறது ? இந்தியாவின் இறையாண்மை மேல் மதிப்புடையவர்கள் ஈழம் பற்றியே பேசக் கூடாது என்றுதான் இந்தியா சொல்கிறது, கருணாநிதி டெசோ மாநாடு அறிவித்தவுடன் சிதம்பரம் ஓடி வந்து ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக்கூடாது என்றும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் சொல்லவில்லையா ? ஈழ அகதிகள் தமிழகத்தில் எப்படி நடத்தப் படுகின்றனர் ?

5 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சீமான் போர் நிறுத்தம் கோரி, தமிழ்த் திரை இயக்குநர்கள் கலந்து கொண்ட பட்டினி போராட்டத்தில் உரையாற்றினார். அவரது உரை பரந்த வரவேற்பைப் பெற்றது. அவரது கருத்துக்களை காங்கிரஸ், பாஜகவினர் பலரும் எதிர்த்தனர். அதற்குப் பின்பு அவர் பல முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்றார். பலரது ஆதரவையும் பெற்றார். ஈழ ஆதரவுப் போராட்டங்களினாலேயே அவர் பலருக்கும் பிடித்தவரானார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த போது பலத்த விமர்சனத்துக்குள்ளானார். பின்பு திமுகவை மட்டுமே எதிர்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்ட போது இந்திய இறையாண்மையைக் காக்க செயல் படுவோம் என்ற வரிகளுக்கும், திராவிட எதிர்ப்புக்கும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார். இஸ்லாமியர்களையும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். பின்னும் ஜாதிக் கூட்டங்கள்லெல்லாம் கலந்து கொண்டார். இனவெறியனாக நடந்து கொண்டார்.
அதற்கெல்லாம் பதிலாக இது அமைந்துள்ளது இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் ஒரு நேர்மையான செயலைச் செய்திருக்கிறார். இதற்கு தனக்கு பலத்த எதிர்ப்பு வரும், சிறை செல்லவும் நேரிடும் என்று தெரிந்தே செய்திருக்கிறார்.

வழக்கமாக ஈழத் தமிழர்க்காக முஸ்லிம்கள் குரல் கொடுப்பதில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பார்கள், இங்கு காஷ்மீரிலிருந்து முஸ்லிம்கள் தலைவர் ஒருவர் ஆதரவு சொல்கிறார். இவர்கள் பிரிவினைவாதியின் ஆதரவு தேவையில்லை என்கிறார்கள். எங்கள் மீது குண்டு வீசிய இந்தியாவின் ஆதரவும், போருக்கு பணம் வழங்கிய மேற்கு நாடுகளின் ஆதரவும் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். 

இந்தியத் தலைவர்கள் இறையாண்மையுள்ள நாட்டில் தலையிட முடியாது என்கிறார்கள் ஆனால் காஷ்மீரின் இறையாண்மையில் மட்டும் தலையிடுகிறார்கள். காஷ்மீரிகள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளாலும் ஆக்ரமிக்கப்பட்டவர்கள். 5 இலட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் காஷ்மீரைக் காவல் காத்து வருகின்றனர். இதை வைத்து காஷ்மீர் மக்களை போலி என்கவுன்டரில் கொல்லவும், பெண்களை வன்புணரவும் செய்ய பல நூறு கோடிகள் செலவிடப் படுகின்றன. அதே நேரம் அடிப்படை உரிமைகள் வாழ்வாதாரம், வேலை என அனைத்தும் புறக்கணிக்கப்படுகின்றன. அதை எதிர்த்து அவர்கள் போராடினால் அது தேசபக்தர்களுக்கு பொறுக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment