ஆப்கானியர்களின் உயர்ந்த உள்ளம்


முன்னாள் சோவியத் ராணுவ வீரர் 33 வருடங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சோவியத் ராணுவம் 1979 லிருந்து 1989 வரை 10 வருடங்கள் ஆப்கானில் இருந்து முஜாஹிதீன்களுடன் போர் புரிந்தது. ஏறக்குறைய 5 இலட்சம் ஆப்கானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனினும் போரில் வெற்றி பெற முடியாமல் தோல்வியுற்று வெளியேறியது. அதில் சோவியத்தின் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இறந்தனர். 35000 பேர் உடல் ஊனமடைந்தனர். 250 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

காணாமல் போன சோவியத் வீரர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு குழு ஒரு வருடமாக ஆப்கானில் தேடுதலை நடத்தி வருகிறது. அதன் பயனாக 33 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சோவியத் வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களாக சோவியத் ராணுவத்தில் பணிபுரிந்த உஸ்பெகிஸ்தானைச் சார்ந்த பாச்சர்ட்டின் காகிமோவ் எனும் இவர் ஷாநிந்த் மாவட்டத்தில் 1980 செப்டம்பரில்  நடந்த சண்டையில் தலைப்பகுதியில் காயமடைந்துள்ளார். அங்குள்ள மக்கள் இவரைக் காப்பாற்றி சிகிச்சை அளித்துள்ளனர். முழுக்க குணமடைந்ததும், அவர் வெளியேறவில்லை. அப்பகுதி மக்கள் அவரைத் தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். அவரும் தனது பெயரை 1993 இல் இஸ்லாமியராக மாறி ஷேக் அப்துல்லா என மாற்றி அங்கேயே நாடோடியாக வாழ்ந்து வந்தார்.
பாக்ர்ட்டின் காகிமோவ் - ஷேக் அப்துல்லா
இவர் மனைவியை இழந்தவர் குழந்தைகளும் இல்லை. தனது குடும்பத்தினரைக் காண ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார். சோவியத் ராணுவம் அமெரிக்காவைப் போல படையெடுத்து ஆக்ரமிக்காத போதும், ஆப்கானின் சோவியத் ஆதரவு-அரசுக்கு ஆதரவாகவும் முஜாஹிதீன்களுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவைப் போலவே பல போர்க்குற்றங்களைச் செய்தது. கொலை, பாலியல் வன்முறைகள் உட்பட எல்லாவற்றையும் செய்தது. இனப்படுகொலையும் செய்தது. பத்து இலட்சம் ஆப்கானியர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம். 

ஆப்கானியர்கள் சோவியத்தின் மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள். இருப்பினும் ஒரு காயமடைந்த இராணுவ வீரனைக் காப்பாற்றி தம்முள் ஒருவனாகவும் அவரை வாழவைத்துள்ளனர் மேலும் அவர் அங்கேயே திருமணமும் செய்துள்ளார் என்பது நெகிழ்ச்சி. இது ரஷ்யாவின் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியாகும். 

அவர் ருஷ்ய மொழி சிறிதே அறிந்தவர், உஸ்பெக் மொழியை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார். இவர் பற்றி முரண்பாடான செய்தியொன்றும் இருக்கிறது இவர் துப்பாக்கியைத் திருடிச் சென்று முஜாஹிதீன்களிடம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் ஒரு செய்தியாளர்.

இன்னொரு சோவியத் வீரர் குறித்த ஆவணப் படம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தென் அமெரிக்கத் தலைவர்களுக்கு புற்று நோயைப் பரப்பியது சிஐஏ ?


இது ரஷ்யாவைச் சேர்ந்த இணையத்தளமொன்றில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கட்டுரை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இதைப்படித்தேன். சாவேஸின் இறப்பும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்து விட்டதால் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. இதை நம்புவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அதற்கு முன்பு உலகில் எய்ட்ஸ் பரவியது என்பது எப்படி என்பதையும் படித்து விட்டால் இதை நம்புவது அவ்வளவு சுலபம். இது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் நடந்திருக்கவே முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது.

கடந்த 18 மாதங்களில் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 4 (முன்னேற்றத்தை விரும்பும்) முற்போக்குவாதத் தலைவர்களும் மக்களும் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட தகவலைக் கேட்டு அதிர்ந்து போயினர். மருத்துவர்கள் சொன்ன தகவல் புற்று நோய். 


ஃபெர்னாண்டோ லூகோ (Fernando Lugo) - பராகுவே

லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா (Luis Inacio Lula da Silva) மற்றும் டில்மா ரௌஸஃப் (Dilma Rousseff) - பிரேஸில்

ஹியூகோ சாவேஸ் - வெனிசுலாவோ

சமீபத்தில் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் - அர்ஜென்டைனா

ஆகியோரிடம் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இனிமேல் உயிர்வாழ்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.


சாவேஸ் "தனக்குத் தேவையில்லாத தலைவர்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆயுதமே இந்த நோயாக இருக்கலாம்" என்று கூறினார். ஆனால் முரணாக இந்தத் தலைவர்கள் தமது பதவிகளிலிருந்தோ பொறுப்புக்களிலிருந்தோ விலகவில்லை. தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டதுடன் தமது ஆதரவாளர்களிடம் ஊர்வலமும் சென்றார்கள்.

முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவின் நிணநீர் மண்டலத்தில் (lymphatic system) புற்றுநோய்க் கட்டிகள் கண்டறியப்பட்டன. சாஓ பௌலோவிலும் (Sao Paulo)  அசன்சனிலும் (Asuncion) ஆறு முறை வேதிச்சிகிச்சை (chemotherapy) எடுத்துக் கொண்ட பிறகு புற்றுநோய்க்கட்டிகள் மறைந்தன. இவர் 2008 - இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தனது தேவாலய பதவியை (ecclesiastical rank)  விட்டு விலகியவர், பராகுவே நாட்டின்  இரண்டாவது இடதுசாரியத் தலைவர்.
66 வயதான பிரேஸிலின் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா வுக்கு அக்டோபர் 2011 இல் தொண்டைப் புற்றுநோய் (larynx cancer) கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தில்மா ருஸ்ஸஃப் - இடம் பதவி மாறியிருந்தது. லூயிஸ் இனாசியோ சிகிச்சை மேற்கொள்ளும்பட்சத்தில் அவர் நிரந்தரமாகவே பேசும் ஆற்றலை இழந்து விடக்கூடும் என்பதால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கவில்லை.

அவர் பல முறை எடுத்துக்கொண்ட வேதிச்சிகிச்சையின் காரணமாக அவருக்கு இருந்த புற்று நோய் 75% குணமாகி விட்டது. அவர் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 2003 -லிருந்து 2010 வரை பிரேஸிலின் அதிபராக இருந்த லூலா வறுமையைக் குறைத்தார், லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைத்தார், பிரேஸிலின் பொருளாதாரத்தை உலகின் பெரிய நாடுகளின் அளவுக்கு உயர்த்தினார்.
நெஸ்டர் கிர்ச்னர் உடன் சாவேஸ், ஃபெர்னாண்டோ லூகோ
57 வயதான வெனிசுவேலாவின் அதிபர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினார். அவர் எந்தவகைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான தரவுகள் இதுவரை இல்லை. ஹவானாவில் ஜூலை 20 ஆம் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு முறை வேதிச் சிகிச்சையும், பல ஆய்வுகளும் செய்யப்பட்ட பின்பு அவருக்கு நோய் குறைந்தது. அவர் 1999 - லிருந்து, 2012 வரையில் அதிபராக இருந்தார். தற்போது மூன்றாம் முறையாகப் போட்டியிடவிருக்கிறார்.

இறுதியாக டிசம்பர் 2011 இல் 58 வயதான அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2012 ஜனவரி மாத தொடக்கத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார், உடல் நிலையில் முன்னேற்றமும் காண்பார் என்று ஊடகங்கள் கணித்தன. கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2011 டிசம்பரில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இருக்கிறார்.

முதன்முதலாக இது குறித்து ஐயத்தை வெளியிட்டவர் ஹியூகோ சாவேஸ். "நான் குறிவைக்கப்படுவதினால் அன்சுகிறவனல்ல ஆனால் தனக்கு எதிரான தலைவர்களை நீக்குவது என்பது பேரரசின் (அமெரிக்கா) நீண்டகால வழமையாக இருக்கிறது. என்னிடம் ஆதாரமில்லை ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு புதுமையான காரணம் லத்தீன் அமெரிக்க முற்போக்குத் தலைவர்கள் விசயத்தில் இருக்கிறது" என்று கூறினார் சாவேஸ்.

அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்பதை ஃபிடல் காஸ்ட்ரோ மீது பலமுறை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதிலிருந்து அறியலாம். வெனிசுலாவின் எழுத்தாளர் லூயிஸ் ப்ரிட்டோ கார்சியா என்பவர் கருத்துப்படி அமெரிக்க உளவுத்துறை (CIA) 900 முறைகளுக்கும் மேலாக காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்றுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றிணைந்துள்ளன. ஏனென்றால் ஏறக்குறைய அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்துள்ளன. எனவே சிஐஏ மட்டுமல்லாது மொசாத்தின் பங்கு குறித்து ஆராய வேண்டும். இன்னொரு விசித்திரம்  என்னவென்றால் சாவேஸ் நோய்வாய்ப்பட்டதையும், அவரது விந்துப்பை (Prostate) புற்றுநோய் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது, சிஐஏவினைச் சார்ந்த ஊடகம், நூவோ ஹெரால்ட், இது அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் வெளியாகும் செய்தி நாளிதழாகும்.

புற்றுநோய் என்பது உளவுத்துறையால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பக்க விளைவுகளா ? இல்லை வெறும் தற்செயல் நிகழ்வுகள் எதிரிகளான லத்தீன் அமெரிக்க அரசுகளை சுற்றி நடக்கின்றனவா? இந்த சதிக்குப் பல முன்தேவைக் காரணங்கள் இருக்கலாம். மிகவும் இன்றியமையாத  ஒன்று, 


தென் அமெரிக்க நிகரமைவாதம் (சோஷலிசம்) உருவாவதைத் தடுப்பது.

இரண்டு, methods of operation have been developed, and the most unsuccessful ones are   discussed by the entire world என்று குறிப்பிட்டுள்ளார்கள் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நேரடியான போர் நடவடிக்கைகள் தோல்வியுற்றும் உலகத்தால் பேசப்படுகின்றதைச் சுட்டலாம்.

மூன்றாவதாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாத்தியப்பாட்டின் மூலம் உயிரியல், வேதியியல், மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தி இது போன்ற மறைமுகமான உள்நாட்டுப் போர்கள் நடத்த முடியும்
 
இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், யாருடைய கொள்கைகளெல்லாம்  அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்ததோ அவர்களுக்கு மட்டுமே இந்நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.  எல்லாவற்றுக்கும் முன்பாக, குருதிப் புற்றுநோயால் அவதிப்பட்ட பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத் 2004 இல்  விசித்திரமான முறையில் இறந்தார். ஃப்ரான்ஸ் நிபுணர்களின் கருத்துப்படி, அவர் குருதியோட்ட ஒழுங்கு சிதைந்து குருதிக்கசிவு மூளையில் ஏற்பட்டதன் காரணமாக இறந்தார். குருதியோட்டம் மாறக் காரணமாக இருந்தது பெயரிடப்படாத ஒரு தொற்றுக் கிருமிதான். இதனால் நோயாளியின் குருதிச்சிறுதட்டுக்கள் (blood platelet) எண்ணிக்கை குறைந்தும், வெள்ளை அணுக்கள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். இதே போன்ற அறிகுறிகள் புற்றுநோய், நுரையீரல் அழற்சி (inflammation of the lungs) மற்றும் சில வகை குருதிக் குறைபாடு உட்பட பலவகையான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்க்கும் காண முடியும்.

போலோனியம் - 210 மூலம் ரசாயன நச்சூட்டப்பட்டதால் மர்மமான முறையில் 2004 இல் இலண்டனில் இறந்தவர் அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ (ருஷ்ய உளவாளி பின்னர் இங்கிலாந்து உளவாளி).  எந்த சிறப்புப் படை இதை செய்தது என்று தெரியவில்லை எனினும், இவர் உடலின் முக்கிய உள் உறுப்புக்களைத் தாக்கும் புற்றுநோயால் இறந்தார். இதே மாதிரியாக உக்ரேனின் முன்னாள் அதிபரான விக்டர் யுஸ்சென்கோ அதிதூய டையாக்ஸின் (dioxin of high purity) மூலம் நஞ்சூட்டப்பட்டார். இந்த ரசாயனம் ருஷ்யாவுக்கு வெளியே எங்கோ ஒரு ஆய்வகத்தில் தயாரானது. இது மூக்கு - மூச்சுக் குழாயில் புற்றுநோயை உருவாக்கும் திறனுடையது.

அமெரிக்கா தனது, ஆப்கான், ஈராக் படையெடுப்புக்களின்போது பல புதுவிதமான ஆயுதங்களையும் போரில் பயன்படுத்தி ஆய்வு செய்தது. உதாரணத்திற்கு நுண்ணலைத் துப்பாக்கிகள் எனப்படுகின்ற ஆயுதங்கள்,  நுண்ணலை அடுப்பு (conventional microwave oven)  செயல்படும் விதியின் படி இயங்குகின்றவை, அவை குறுங்கிய பீம் - ல் (narrow beam) அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் பாதிப்புக்கள் பரவலாக இருக்கும். புற்று நோயை பரப்புவதுடன் அவை அதற்குச் சற்றும் குறையாத இன்னொரு தன்மையும் வைத்திருக்கின்றன. தோல்களிலும் செல்களின் இடைவெளிகளிலுமுள்ள (intercellular space) நீரை வெப்பமாக்கிவிடும் தன்மையுடையவை, உயிரைக் கொல்லாது என்றபோதும், தீக்காயத்துக்கு இணையான வேதனையை உண்டாக்கும். இது போன்ற அறிகுறிகளுடன் இறந்த ஒருவர்
அர்ஜென்டைனா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர். 2011 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் போட்டிக்கு வேட்புமனுவை விண்ணப்பித்த பின்னர்   அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் திடீரென 27 அக்டோபர் 2010 இல் இறந்தார்.

விக்கிலீக்ஸ் கூறிய தகவல், 2008 இல் சிஐஏ தனது பராகுவே தூதரகத்திடம் கேட்ட தகவல்கள் என்னவென்றால் பராகுவே நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நான்கு பேர்களின் டிஎன்ஏ குறியீடு உள்ளிட்ட உயிரிபுள்ளியல் தரவுகள் (biometric data). புற்று நோயால் பாதிக்கப்பட்ட பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவை நினைவில் கொள்க ஒருவரின் டிஎன்ஏ குறியீட்டைப் பயன்படுத்தி ஆன்கோஜீன்கள் அல்லது புற்றணுக்கள் (oncogene) எனப்படும் புற்றுநோயினை உண்டாக்கும் அணுக்களை உருவாக்கிட முடியும். இதே  நிகழ்வை பிரேஸிலின் தேர்தலுக்கு முன்பு நடந்ததாகக் கருதினால்  பிரேஸில் அதிபர் தில்மா ருஸ்ஸஃப் புற்று நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்றும், இது  போலவும் நடந்திருக்கலாமென  ஐயப்படுவதற்கும் இடமுண்டு.

தனது செல்வாக்கின் ஒரு பகுதியை லத்தீன் அமெரிக்காவில் இழந்து விட்டது அமெரிக்கா. எனவே தனக்கு வேண்டாத தலைவர்களைச் சமாளிக்க மிகவும் சுலபமானதும், செலவில்லாததுமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதிக காலம் ஆல்பா கதிர்வீச்சுக்குட்படுத்தல், மின்காந்த அலைகள், அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலமாக உடனடியாக புற்றுநோயையும் பரப்ப இயலும். இந்த வகையான அனுபவங்களை பயன்படுத்தி, சிஐஏ தனது ஆயுதங்களை முற்போக்குவாத, புரட்சிகர லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிடம் ஆய்வு செய்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரமும் கிரீஸுக்கு இணையான தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தினைக் கொண்டுதான் இன்னும் கடனில் மூழ்காமலிருக்கிறது. இருப்பினும், அமெரிக்க அரசு இராணுவத்தை பயன்படுத்தி, எல்லோரையும் ஆதிக்கம் செய்ய பணம் அதிகமாகுமென்பதால்  அதை விரும்பவில்லை. எனவே எதார்த்தத்திற்கேற்ப செலவில்லாத, உடனே செயல்டுத்தக் கூடிய முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளை அழிக்கிறது. இதில் இன்றியமையாத முன்னேற்றம் என்னவெனில் இந்த முறையிலான ஆயுதங்கள் எவ்வித தடயங்களுமில்லாமல், நேரடியாகவும் தாக்காமல் யாருக்கும் பொறுப்பேற்க வேண்டிய சுமையே இல்லாமல் மறைமுகமாகவே தாக்குபவை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஹ்யூகோ சாவேஸ் - க்கு அஞ்சலிகள்


புற்றுநோயினால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாவேஸ் இன்று இறந்தார். இன்றைய காலத்தின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர். இரு வருடங்களுக்கு முன்பு ஃபிடல் காஸ்ட்ரோவும் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது, இவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஃபிடல் இன்னும் 80 ஆண்டுகள் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று கூறினார். ஆனால் க்யூபாவில் சிகிச்சை பெற்று வந்த இவரே தற்போது இறந்து விட்டார். சில நாட்களாகவே இவரது உடல் நிலை குறித்து கவலைக்குரிய செய்திகளே வெளிவந்தன, இவரது ஆதரவாளர்களே இவரது உடல் நிலை குறித்த செய்திகளை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ஒருவரை அமெரிக்கா எதிர்க்கிறது என்றால் அவர் தனது நாட்டின் மீது அதிகம் பற்று வைத்திருக்கிறார் என்று ஏறக்குறைய முடிவு செய்து விடலாம்.


 
அவர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தார் என்று ஒத்துக்கொள்கிறேன். எப்படி பல்வேறு தவறுகளுக்குப் பின்பும் புலிகளை ஆதரிக்கும் புலி ஆதரவாளர்களைப் போலவே இவரையும் ஆதரிக்கிறேன். குணம் நாடிக் குற்றம் நாடி மிகை நாடி மிக்க கொளல் என்பதற்கேற்ப பணம், ஆயுதம், உளவுத் தகவல், வழிகாட்டல் என எல்லாம் வழங்கி விட்டு இனப்படுகொலையில் கை நனைத்து விட்டு ஆவணப் படம் எடுப்பது ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றுவது என்று நாடகமாடும் இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்காவைக் காட்டிலும் சாவேஸ் ஒன்று துரோகம் செய்திடவில்லை.


சாவேஸை இனப்படுகொலைக்காக எதிர்க்கும் புலி ஆதரவாளர்கள், புலிகள் ஈழப்படுகொலை நடக்கும் முன்பே ஈராக்கில் 10 இலட்சம் பேர்களாவது கொல்லப்படக் காரணமான அமெரிக்காவை, இங்கிலாந்தை எதிர்த்ததுண்டா ? அந்நாடுகளை சர்வதேச சமூகம் என்றுதானே போற்றி வந்தார்கள். இப்போது மட்டும் இலங்கையைத் தண்டிப்பதற்காகத்தான் ஐநாவில் தீர்மானம் கொண்டு வரவில்லை. இனப்படுகொலையில் பங்கெடுத்த இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்களிப்பை மறைத்து இலங்கை மட்டுமே குற்றம் செய்வது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, தமது அரசியல் வர்த்தக நலன்களுக்காகவே ஆவணப்படங்களை உருவாக்கி, மனித உரிமை ஐநா தீர்மானம் என்று இலங்கையை மிரட்டுகிறது.  2009 -இல் போர் முடிந்த பின்பு நடந்த இலங்கைஅதிபர் தேர்தலில் இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய இராணுவத் தளபதி பொன்சேகாவை ஆதரித்தவர்கள்தான் தமிழர்கள்.எப்படி ராஜபக்சேவுக்கு எதிராக பொன்சேகாவை ஆதரித்த தமிழர்களை விடவும் அமெரிக்காவை எதிர்ப்பதற்காக ராஜபக்சேவை ஆதரித்த சாவேஸ் ஒன்றும் துரோகியில்லை.

அவருக்கு அஞ்சலிகள்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கண்டு கொள்ளப்படாத மகளிர் கிரிக்கெட்


தற்போது மகளிர்க்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. அது பெரிய அளவில் பேசப்படவில்லை. ஏனோ ? கிரிக்கெட் நடிகர்கள் ஆடினால் கூட கொஞ்ச பேர் பார்க்கிறார்கள், ஏன் நடிகைகள் கூட ஆடினால் பார்க்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட் மட்டும் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதுவும் கிரிக்கெட்டின் மிகப்பெரும் சந்தையான தெற்காசியாவில் கூட பெண்கள் கிரிக்கெட் மிகப்பெருமளவில் போணியாகவில்லை.

இந்த நிலையில் இப்போது ஆண்களும் பெண்களும் கலந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கப்போகிறார்கள். ஏன் அப்படியாவது பிரபலப்படுத்தலாமென்றா ? சும்மா கிளுகிளுப்பாகவாவது பார்க்க வைத்துவிடமுடியுமென்றா ?

பெண்கள் கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்தேன், ஆண்கள் அளவுக்கு துடிப்பாக இல்லையென்றாலும், பெண்கள் ஒரு வித நளினத்துடனும், மிதமான பரபரப்புடனும் நன்றாகவே விளையாடினார்கள். சிலருக்கு இன்னும் பேட்டிங் வரவில்லை. இறங்கி ( ஓரடி முன் வைத்து) அடிக்கும் போது முழங்கை வளைந்து, மண்வெட்டியில் வெட்டுவது போல் அடித்தார்கள் சிலர்.

பெண்கள் விளையாடும் விளையாட்டிலேயே கிரிக்கெட் மட்டுமே விளம்பரத்திற்கு உதவாத உடைகளை அணிந்து விளையாடுகிறார்கள். மினி ஸ்கர்ட், மினி ட்ரொஸர் மாதிரியான உடைகளை அணிந்து இதை விளையாட முடியாது என்பதால்தான் ரசிகர்கள் இவர்களைக் கண்டு கொள்ளவில்லையா ?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் தனிநபராக ஓட்டங்கள் அதிகம் அடித்தது ஒரு பெண் - பெலிண்டா கிளார்க் 229*


ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் அடித்த அணி நியூஸிலாந்து - 459

இதில் எதிராக ஆடிய பாகிஸ்தான் 47 ஓட்டங்கள் மட்டுமே பதிலுக்கு எடுக்க முடிந்தது, 408 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி. அல்லது நியூஸி வெற்றி.

இது இரண்டுமே ஆண்கள் கிரிக்கெட் "சாதனை"யை விட அதிகம். இது இரண்டுமே 1997 இல் செய்யப்பட்ட சாதனைகள்.

ஆஸி பெண்கள் அணி 6 முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதையெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டில் எப்போதுமே முறியடிக்க முடியாது. பார்ப்போம்.

எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி

இந்தச் சிறுமி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இருப்பவர் கால்பந்து அணியிலும் இருப்பவர். தமது 16 ஆம் அகவையில் நுழைந்தார் ஆஸ்திரேலியாவின் கால்பந்து அணியிலும், கிரிக்கெட் அணியிலும் ஒரு சேர. கால்பந்து உலகக் கோப்பையிலும் பங்கெடுத்திருக்கிறார், கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இருக்கிறார். இந்த மாதிரி கிரிக்கெட், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் ஒரு சேரக் கலந்து கொண்டவரென இதுவரை கேள்விப்பட்டதேயில்லை. கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கடந்த முறை ஆஸி வென்ற போது இவரது பங்கு குறிப்பிடத் தகுந்தது. 


(தற்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் பங்கேற்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரூ ஃபிளிண்டாஃப். அவர் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம்)

மைக்கேல் பெல்ப்ஸ் என்ற நீச்சல் வீரர் அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றவர் என்ற பெருமையப் பெற்றதோடு, அரை நூற்றாண்டு காலம் அதிக பதக்கங்களை வென்ற சாதனையை வைத்திருந்த ரஷ்யாவின் (முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்) ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிஸ் லாட்டினினாவின் சாதனையையும் முறியடித்தார். இதில் லாரிஸ் லாட்டினினா இரு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமெ பங்கேற்றவர், அதிலும் ஒரு போட்டியில் பங்கேற்ற போது அவர் கர்ப்பமாக இருந்தார். மைக்கேல் பெல்ப்ஸ் மூன்று ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.

இது மாதிரி சாதனைகள் எல்லாம் கண்டுகொள்ளப்படாமலே போகின்றன.

இப்படி மிகப்பெரும் சாதனைகளைப் பெண்கள் படைக்குமளவிற்கு திறமை இருக்கும்போது அவர்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த டென்னிஸ் போட்டிகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் மாடலாகவும் இருக்கின்றனர். ஷரபோவா வருடத்திற்கு 70 கோடிகள் வரை விளம்பர மாடலாகவே சம்பாதிக்க முடிகிறது. விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பெரிய நிறுவனங்கள் இவர்களின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காகவே புதுப் புது பிரபலங்களை உருவாக்குகின்றனர்.


அதே நேரம் ஆண்களின் கிரிக்கெட் எவ்வளவு மெனக்கெட்டு பரப்பப் படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் பெரிய நடிகர்களுக்கு இணையான செலிபிரிட்டிகளாக இருக்கிறார்கள். எல்லா விளம்பரங்களிலும் வருகிறார்கள். நடிகைகளுடன் கிசு கிசு எழுதுமளவிற்கு பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் தகுதி கிரிக்கெட் வீரர்கள் என்பது மட்டுமே.

இவர்கள் தேசத்தின் மானத்தைக் காப்பவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதே தேசபக்தி என்ற அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்பப் படுகிறது என்று பார்த்தால்,

வரும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னார் நீக்கப்பட்டார், இன்னார் தேர்வு செய்யப்பட்டார், இன்னாருக்கு வாய்ப்பில்லை

இந்திய அணி நாளை போட்டி நடக்கு இடத்திற்குப் போய் சேருகிறது.

இந்திய வீரர்கள் இன்று பெங்களூரு வந்தனர், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணி இன்று வெற்றி பெறுமா ?

வெற்றி பெறுவோம் கேப்டன் நம்பிக்கை.

கிரிக்கெட் போட்டியை வர்ணிப்பதுதற்குத்தான் தொலைக்காட்சிச்செய்திகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கின்றனர்.

போட்டி முடிந்தவுடன் வெற்றிக்குக் காரணம், தோல்விக்குக் காரணம் குறித்த அலசல்கள்.

இவையெல்லாம் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கூட வெளிவருகின்றன. 



கிரிக்கெட் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாம் நல்ல நகைச்சுவைகளே.

"அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை" என்பதற்கு முன்னால் எவையெவையெல்லாம் இணைக்கப்பட முடியும் பாருங்கள்.

இந்த வருடத்தில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இந்த அணிக்கு எதிராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது விக்கெட்டிற்கு "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஒரே நாளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இத்தனாவது இன்னிங்க்ஸில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

ஃபாலோ ஆன் பெற்றும் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இரண்டாவது பேட்டிங்கில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

குறைந்த நேரத்தில் அல்லது பந்துகளில் "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

அணித்தலைவராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

விக்கெட் கீப்பராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

பந்து வீச்சாளராக "அதிக ஓட்டங்கள் எடுத்து சாதனை"

இப்படியாக நகைச்சுவைகள் தொடரும் நீளம் கருதி நிறுத்துகிறேன். இவயெல்லாம் போட்டித் துளிகள் அல்லது ஹைலைட்ஸ் என்று பெட்டிச் செய்தியில் போட்டு விளையாட்டுச் செய்தியின் பக்கங்களை நிரப்புவார்கள்


கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்படும் அதே நேரம்  இன்னொரு புறத்தில் மற்ற விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை. வெறும் பெட்டிச் செய்திகளில் மட்டும் வெளிப்படுகின்றன. சொந்தக் காசையும், முயற்சியும் செய்து உயிரைக் கொடுத்துப் பயிற்சி எடுத்து ஒலிம்பிக்கில் எவனாவது பதக்கம் வாங்கினால் அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் "இந்தியர்கள்" பெருமைப்பட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை மறந்து விடுவார்கள். ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வாங்க முடியவில்லை என்று விவாதிப்பார்கள். கிரிக்கெட்டைக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். ஐபிஎல்லை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.

ஆளுக்குப் பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற போதும், மகேஷ் பூபதியும், லியாண்டரும் பெரிய அளவில் கொண்டாடப் படவில்லை. சானியா மட்டுமே டென்னிசின் அடையாளமாக இருக்கிறார். அவர் பிரபலமானதும் டென்னிஸ் என்ற விளையாட்டின் காரணமாக அல்ல. ஏதாவது ஒரு (வெப்பமான பெண் - அதாவது) ஹாட் கேர்ள் கிடைக்க வேண்டு ஊடகங்களுக்கு ஊதிப் பெருக்கிவிடுவார்கள். அதே நேரம் உயிரைக் கொடுத்து விளையாடும் சாய்னா நேவாலை பெரிய அளவில் ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

விளையாட்டாக இருந்தாலும், அழகு + செக்ஸி மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது போலும். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஸ்ரீலங்காவின் சியர் லீடர்ஸ் பற்றி கிரிக்கெட்+தேச பக்தர்கள் பலரும் தமது சங்கடத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அழகாக இல்லை. பாமர ரசிகர்கள் மொக்கை ஃபிகரெல்லாம் எவன்டா சீர்லீடர்ஸா போட்டான் என்று அலுத்துக் கொண்டனர். நிலைத்தகவல் போட்டு எதிர்ப்பைக் காட்டினர்.

விளையாட்டுபோட்டிகளில் எதற்கு சீர் லீடர்ஸ்கள் வந்து குட்டைப்பாவாடையில் ஆட வேண்டும், கேமராக்கள் பாவாடைக்குக் கீழிருந்து படம் பிடிக்க வேண்டும். கிரிக்கெட் போட்டிகளே தேசபக்தர்கள் பார்ப்பது, தேசபக்தி பொங்கி வழிந்தோடும் போது, எதற்கு இந்தக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. தேசபக்தி பேசும் அர்ஜுன் படங்களில் குத்தாட்டம் இருப்பது போல என்று கொள்வோம்.

டிடி ஸ்போர்ட்ஸில் உயரம் தாண்டும் போட்டிகள் போட்டிருந்தார்கள். ஒரு ஈரானியப் பெண்ணைக் காட்டினார்கள். அவர் பர்தா போன்றதொரு ஆடையை அணிந்து அது தலையிலிருந்து விழாமல் இருக்க ஒரு பேன்டையும் கட்டியிருந்தார். கை முழுவதும் மறைக்கும் ஆடை. அதே நேரம் இன்னொரு ஐரோப்பியப் பெண் ஏறக்குறைய இரு துண்டு ஆடை அல்லது பிகினி என்ற அளவிற்கு அணிந்திருந்தார். உடலை மறைப்பது ஒத்துக் கொள்ளக்கூடியது, மணிக்கட்டுவரையும், தலையையும் மறைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதெல்லாம் என்னளவில் ஒத்துக் கொள்ள முடியாது. என்னைக் கேட்டால் இந்த பர்தா, பிகினி இரண்டுமே விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஒத்து வராதது.

மத்திய கிழக்கு அல்லது இஸ்லாமிய நாட்டுப்பெண்கள் பெரும்பாலும் இதை அணிந்துதான் விளையாட வேண்டியிருக்கிறது. மற்ற நாட்டினர் நீச்சலுடை மாதிரி, அல்லது பிகினி மாதிரி அணிகிறார்கள். இதற்குத் தயங்கியே இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளின் பெண்கள் இது போன்ற போட்டிகளில் சேரத் தயங்குவார்கள் போல் தெரிகிறது.

நன்றி : ஹஃபிங்க்டன் போஸ்ட்
இந்த உடைகளை வடிவமைப்பவர்கள், விதிமுறையாளர்கள் எல்லாம் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டிகளில் பெண்களுக்கு வசதிப்படி வடிவமைப்பார்களா அல்லது ஆண்கள் ரசிக்கும்படி வடிவமைப்பார்களா என்று சொல்ல வேண்டியதில்லை. சில நாட்களுக்கு முன்பு, ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குட்டைப் பாவாடை மட்டுமே அணிய வேண்டும் என்று விதியை மாற்றினார்கள். அதற்கு பாகிஸ்தான், எகிப்து நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதெல்லாம் எதற்கு ? ஏன் ட்ரௌசர் அணிந்து விளையாடினால் என்ன கெட்டு விடும்.

ஆண்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கும்போது அணியும் ஆடைகளுக்கும் பெண்களுக்கும் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். ஆண்கள் உடைகளால் அவர்கள் சிரமப்படுவதேயில்லை. அதே நேரம் பெண்களைக்கவனித்தால் ?? அதென்ன விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் அணியும் உடைகள் முழங்கால் வரையில் அல்லது தொடை வரையாவது மூடியிருக்கும்படியும், பெண்கள் என்றால் புட்டத்தில் பாதியை மட்டும் மறைக்கும்படியும் இருந்தால் அதன் காரணம் என்ன ?

எந்த உடை பற்றியும் நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இதையெல்லாம் சொல்லக் கூடாதுதான். ஆனால் விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில்தான் சீர்லீடர்ஸ், கடற்கரைக் கைபந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே பெண்களை ஆடை அவிழ்ப்பு செய்விக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து ஆண்கள் அள்ளித் தெளிக்கும் கருத்துக்களுக்காகத்தான், திரைப்படங்கள், விளம்பரங்கள், இசைக் காட்சிகள், நடனக் காட்சிகள் இவைகளில் பெண்கள் காட்டப்படும் விதத்திலிருந்தே இந்த விளையாட்டுப் போட்டிகளில் காட்டப்படுவதையும் இணைத்துப் பார்க்க நேரிடுவதால் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது.  பெண்கள் உடை பற்றிப் பெரிய விவாதத்திற்கெல்லாம் கூட போக வேண்டியதில்லை. ஆண் வீரர்கள் அணிந்து விளையாடுவதையே பெண்கள் அணிந்தால் வேலை முடிந்தது. அதற்காகத்தான் பெண்கள் கிரிக்கெட் பற்றிச் சொல்ல வந்தேன்.

இன்னொன்றையும் சொல்ல மறந்தேன். சானியாவாகட்டும், சாய்னாவாகட்டும் அல்லது ஷரபோவாவாக இருக்கட்டும். பந்தை ஆக்ரோஷமாகத் திருப்பி அனுப்புகிறார் என்ற விவரிப்புடன் தினமணி, தினமலர், தினத்தந்தி உட்பட பெரும்பான்மை நாளிதழ்கள் வெளியிடும் புகைப்படங்களில் அவர்களது மேலுடை சற்றே உயர்ந்து தொப்புள் தெரிகிற மாதிரிதான் இருக்கிறது. இல்லையென்றால் பாவாடை பறக்கிற மாதிரித்தான் இருக்கிறது. இதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். இது இயல்பாக நடக்கிறதா ? வேறு போஸே கிடைக்கவில்லையா ? பாவாடை பறப்பதை ஸ்னாப் ஷாட் எடுத்துத்தான் போட வேண்டுமா கனவான்களே ?  பெண்களை செக்ஸியாகத்தான் உடை அணிய வேண்டும் என்று திணிப்பதாலேயே இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

இதைப் பார்ப்பதற்கென்றே பலரும் இப்போட்டிகளைக் காண்கின்றனர். பெண்கள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டியளவிற்கு, உலக அழகன் போட்டி பிரபலமாகவில்லை. கடற்கரைக் கைப்பந்துப் போட்டிகளில் பெண்கள் அளவுக்கு ஆண்கள் போட்டி பிரபலமாகவில்லை. இதெல்லாம் அதன் எதிர் விளைவுகள்தான். ஒவ்வொரு முறையும் உலக அழகிப் போட்டியும், பிரபஞ்ச அழகிப் போட்டியும் நடக்கும் போதெல்லாம், செய்திகளில் சொல்லப்படுவது என்னவென்றால், இந்திய அழகிக்கு இத்தனாம் இடமே கிடைத்தது, இந்திய அழகி ஏமாற்றம். இதற்கெல்லாம் இந்தியர்கள் வருத்தப்பட வேண்டுமாம்.




இப்படியாக பெண்கள் என்றால் ரசிப்பதற்கே என்ற நிலை இருக்கும் வரை, அதை வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் வரை திறமையைக் காட்டி வென்ற பெண்களை விட உடலைக் காட்டிய பெண்களே வெற்றி பெற்ற பெண்களாக வலம் வருவர்.

சன்னி லியோன், பூனம் பாண்டே, ஷெர்லின் சோப்ரா, வீணா மாலிக் இவர்களெல்லாம் என்ன செய்தார்கள் என்று நமக்கு நாளும் நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment