தோல்வியைத் திணிக்கும் கல்வியும் சமூகமும்

பன்னிரண்டாம் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து நடப்பவை, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க பேட்டி கொடுக்கின்றனர். தமது இலட்சியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். வழக்கம் போலவே இவ்வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகத் தேர்ச்சி என்ற வசனத்தை பதினைந்து வருடங்களாகக்(!!?) கேட்கிறேன். ஒவ்வொரு வருடமும் என்ன நடக்கிறதோ அதுதான் இப்போதும் நடக்கிறது, இனி வரும் வருடங்களிலும் இதுதான் எந்த மாற்றமுமின்றி நடக்கப்போகிறது. ஊடகங்களுக்கு இதை வைத்து எவ்வளவு செய்திகளை உருவாக்க முடியுமோ அந்தளவுக்கு செய்திகள் குவிந்து கிடைக்கின்றன. சாதனையாளர்களின் பேட்டிகள், பள்ளிகளின் பெருமைகள், மாணவர்கள், ஆசிரியரின் உழைப்பு, அர்ப்பணிப்பு வெற்றி இரகசியம், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகள், வயது, வறுமை உடல் ஊனத்தை வென்று அதிக மதிப்பெண் குவித்த மாணவர்கள் என இதைச் சுற்றிய செய்திகள் ஏராளம்.

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதுதான் புரியவில்லை. இதே அளவு பரபரப்பு 10 வகுப்புத் தேர்வு முடிவுக்கும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையிலேயே இதுதான் மிகப்பெரியது போலவும் இது முடிந்தால் போதும் வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றது போலவும் ஊதிப் பெருக்கி வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும், நகரத்திலும் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் படத்தை பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்கள். சரி அவர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் தேவைதான். அதற்காக இப்படி அதகளப்படுத்தினால் ?? இது தோல்வியடைந்த மாணவர்கள் மீது எவ்வகையான அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பது குறித்து பில்டப் காரர்கள் கவலை கொள்வதேயில்லை.

இப்படி மாய்ந்து மாய்ந்து பேட்டி எடுப்பவர்கள், இது போன்ற அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகள் கழித்து என்னவாகிறார்கள் என்று கவலைப்படுகிறார்களா ?  அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் சிலர் கல்லூரிப் படிப்பே தேற முடியாமல் போகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா ? தெரியாதா ? தேர்வு முடிவு வெளியானவுடன் கல்வியாளர்கள் அது இது என்று யோசனை சொல்கிறார்கள். இப்படி மாய்ந்து மாய்ந்து படித்தவர்கள் எத்தனை பேர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றார்கள் என்பது தெரியுமா ? அல்லது தற்போது பேட்டி கொடுத்தது போல கலெக்டரானவர்கள், மருத்துவரானவர்கள் எத்தனை பேர். இந்த பில்டப் பற்றிச் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைக்கும் போலி விளம்பரத்திற்கு ஒப்பானது.

ஒரு சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நல்ல கற்பித்தலுக்கும் "திறமையான மாணவர்களை" தயாரித்து அனுப்புவதிலும் முன்னணியில் இருக்கின்றன. ஊத்தங்கைரையில் ஒரு பள்ளி இருக்கிறது. அது நல்ல பெயரெடுத்த பள்ளியாம். 10 வகுப்பு முடிவு வெளியான அன்று அதிகாலையிலேயே பெற்றோர்கள் அப்பள்ளியில் விண்ணப்பம் வாங்கக் காத்துக் கிடப்பார்களாம். அதில் சேரவும் பத்தாம் வகுப்பில் மிகப்பிரமாதமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. அதாவது பெயர் பெற்ற பள்ளிகள் என்றால் ஏற்கெனவே நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை எடுத்து அவர்களை சக்கையாகப் பிழிந்து அதிக மதிப்பெண் வாங்க வைப்பது அவர்களின் "திறமையாம்." நாமக்கல் மாவட்டம் கல்விக்குப் பெயர் போனது, அங்குள்ள வித்யா விகாஸ் ((கல்வி நிலையம் என்பதன் சம்ஸ்கிருதம்தான் வித்யாவிகாஸ்) (பெரிய வித்யாசமான பேரெல்லாம் கிடையாது)). அங்கும் இப்படித்தான் பள்ளியின் வெளியே 11 ஆம் வகுப்பு விண்ணப்பம் வாங்குவதற்கு வரும் பெற்றோர்களால் கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் அனைத்து ரகமான பெரிய விலையுயர்ந்த கார்களைக் காண முடியும். 

இது போன்ற பள்ளிகளில் கற்பித்தல் என்பது உயர்ந்த தரத்தில் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பணம் வேண்டுமே படிப்பதற்கு, இல்லையெனில் 90 % மதிப்பெண்கள் வேண்டும் எத்தனை பேரால் முடியும். இந்த மனப்பாடக் கல்வி மீதே நமக்கு நூறு விமர்சனங்கள் உள்ளன. இந்தியனை அடிமைப்படுத்த மெக்காலே செயல்படுத்திய கல்வித்திட்டம், போதாக்குறைக்கு சிபிஎஸி, சமச்சீர் ஆங்கிலோ இந்தியன் என பலவகையான பாடங்கள். இதில் அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள், ஆங்கில வழி தமிழ் வழி என இத்தனை முரண்பாடுகள். தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு இப்போதெல்லாம் 9 வகுப்பும், 11 ம் வகுப்பும் அந்த பாடத்தின் தேர்வுகளும் செல்லாக் காசுகளாகிவிட்டன. ஏறக்குறைய ஒன்றைரை வருடங்கள் படித்த பின்புதான் 10 ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடக்கின்றன. இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் பிட்டடித்துத்தான் மதிப்பெண் பெறுகிறார்கள்.

பிட்டடிக்க முடியாதவர்கள் தோல்வியடைகிறார்கள். பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றார்கள். பெற்றோர்களால்தான் இவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தம் பிள்ளை தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ குறைந்து விட்டாலோ தமது மரியாதை கெட்டுவிட்டதைப் போலவும், குடி முழுகிவிட்டதைப் போலவும் கருதிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்பு என்பது எல்லோருக்கும் வராது என்பதுதான் எதார்த்தம். கடும் முயற்சி செய்தால் ஓரளவு மாறும், அதுவும் எல்லோருக்கும் சாத்தியம் என்பதில்லை. என்னதான் முக்கினாலும் சிலருக்கு வரவே வராது. எனக்கு கணிதம் என்றால் வேப்பங்காய், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை எனக்கு மாரடைப்பு வருமளவுக்கு மன அழுத்ததைக் கொடுத்தது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லை படித்தால்தான்  நல்ல வேலை கிடைக்கும் என்று மூட நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் அங்கங்கே வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெற்றால் அங்கே காத்துக் கிடக்கும், ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கும். அப்படியே வேலை கிடைத்தாலும் எல்லோருக்கும் 5 இலக்க ஊதியம் கிடைக்காது. இத்தனை படிச்சிட்டும் இவ்வளவு குறைச்சலாத்தான் சம்பளம் குடுக்கிறானா ? அப்பறமெதுக்கு அந்த வேலைக்குப் போற ? என்று வக்கனை பேசவும் சொந்தக் காரரும், நண்பரும் வருவார்கள்.

பல பெற்றோர்க்கு வேறென்ன ஆசையென்றால், பையன் படித்து பட்டம் வாங்கினால் அதை வைத்து நிறைய சீதனம் பெறலாம் என்ற கணக்கில் இருக்கிறார்கள். பையன் இத்தனை படித்திருக்கிறான் பெண்ணுக்கு இத்தனை செய்ய வேண்டும் என்று கேட்க திட்டம் வைத்திருக்கிறார்கள். இதை ஏன் பையனின் பெற்றோரை மட்டும் சொல்கிறேனென்றால் பெரும்பான்மையாக பெண்கள் தேறிவிடுகிறார்கள். ஆண்கள் அப்படியில்லை அவர்களுக்குத்தான் இப்பிரச்சனை. எனக்குத் தெரிந்து பல பேர் சீதனம் பெறுவதற்காகவே இரு பட்டங்களைப் படித்து முடிக்க வேண்டும் என திட்டம் போட்டு படிக்கிறார்கள். எம்பிஏ என்பது கவர்ச்சிகரமான பட்டமாக திருமணச்சந்தையில் இருக்கிறது. கன்யாகுமரியைச் சேர்ந்த என் நண்பனொருவன் BSc, MSc, MBA, என மூன்று பட்டங்களைப் படித்து விட்டான். அவனுக்கு படிப்பெல்லாம் வராது எல்லாம் பேப்பர் சேஸிங்தான். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சீதனமாகக் கிடைக்கும் என்கிறான். அதற்குப் புகழ்பெற்றதுதான் கன்யாகுமரி மாவட்டம் !!

திருமண அழைப்பிதழில் போடுவதற்கென்றே சிலர் அஞ்சல் வழியில் படிக்கிறார்கள். எப்படியென்றால் ஒரு விண்ணப்பத்தை வாங்கிவிட வேண்டியது அதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டியது. அவ்வளவுதான் டிகிரி வாங்கியாச்சு. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காருன்னு கேட்டால் சொல்லிக்கலாம். எல்லோரும் சான்றிதழைக் கேட்க மாட்டார்கள். அப்படியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கொஞ்சம் காசு கொடுத்தால் டிகிரியை வாங்கிவிடலாம். பல தடைகளைக் கடந்து நேர்மையாகத் தேர்வு எழுதும் மனிதர்கள் இருக்கும் ஊரில்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பட்டம், படிப்பு என்ற போலித்தனத்திற்கு இருக்கும் பகட்டுதான் காரணம். ஜாதிப்பெருமை போல பெரிய படிப்பு படித்தவர்க்கு திருமணச் சந்தையில் இருக்கும் வணிக மதிப்புத்தான் காரணம். நடுத்தர, பணக்காரர்களின் போலித்தனமான வெட்டி பந்தாதான் இதன் மூலம்.

பெற்றோர்களின் பேராசைக்கு ஒரு அளவேயில்லை. என்னுடைய சித்தி மகள் 1150 - க்கும் மேல் வாங்கிவிட்டாள். இருப்பினும் அவளது பெற்றோர்க்கு இன்னும் 20 மதிப்பெண்கள் கூட வாங்கியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்களாம். எதற்கு வெளியே பேசி பெருமையடித்துக் கொள்ளத்தான். அவள் 1195 வாங்கினால் கூட கலெக்டருக்கோ அல்லது மேற்படிப்போ படிக்க வைக்கப் போவதில்லை திருமணந்தான் செய்து வைக்கப்போகிறார்கள் இருந்தாலும் இப்படி ஒரு நப்பாசை. இப்படித்தான் ஒவ்வொரு பெற்றோருக்கும் மதிப்பெண் மீதான் மோகம் இருக்கிறது.

இப்படியிருக்கையில் தேர்வில் தோல்வியடைந்தவர்களைத் தேற்றுகிறேன் என்று அதிக மதிப்பெண் வாங்கியவர்களை சிறுமைப்படுத்துவதும் கண்டிக்கத் தக்கது. வருடக்கணக்காக உயிரைக் கொடுத்துப் படித்து மதிப்பெண் வாங்கியவர்களை மனப்பாடம் பண்ணி வாந்தியெடுப்பவர்கள், சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றெல்லாம் சொல்வது அறிவீனமானது. இதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, பாராட்டாமலும் இருக்க முடியாது.

கல்வி என்பது நல்ல வியாபாரமாக இருக்கிறது. இதனால் கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளின் பேரால் கொட்டி பெரும் பணக்காரர்களால் கல்வி நிலையங்களை நடத்த முடிகிறது. பள்ளிகளாகட்டும், கல்லூரிகளாகட்டும் இதுதான் நிலை. எத்தனை மதிப்பெண் பெற்றாலும் பணம் கட்டாமல் படிக்க முடியாது. சிலரைத் தவிர்த்து. எங்கள் கல்லூரியிலிருந்து இத்தனை பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சில கல்லூரிகள் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவங்களுடன் ஒப்பதம் போட்டுக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் பெயருக்கு வளாகத்தேர்வை நடத்துவார்கள், அனைவருக்கும் வேலை கிடைக்கும், அல்லது யாரையும் எடுக்காமலும் போகலாம். அல்லது அனைவரையும் வேலைக்கு எடுத்துவிட்டு சில மாதங்களில் பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி.  வெளியேற்றிவிடலாம் ஆனால் கல்லூரிகள் விளம்பரம் செய்து கொள்ளும் எங்கள் கல்லூரியில் சென்ற வருடம் இத்தனை பேருக்கு வேலைக்கு இடம்(placement) பெற்றுத் தந்தோம் என்று. எப்படி எல்லோருக்கும் வேலை தருவார்கள் என்றா கேட்கிறீர்கள், படிப்புக்கும் வேலைக்கும் பெரிய தொடர்புகள் இருப்பதில்லை என்ன படித்தாலும் 6 மாதப் பயிற்சி பின்பு வேலை அவ்வளவுதான். நாடகம் முடிந்தது. இப்படித்தான் இருக்கிறது நிலவரம் இந்த ஆட்டத்தில் திறமைக்கு நிச்சயம் மதிப்புண்டு, நல்வாய்ப்புக்கும்(Luck) இடம் உண்டு ஆனால் எல்லா இடத்திலும் இது நடக்காது சிலருக்கு கிடைக்காது சிலருக்குக் கிடைக்கும் இதுதான் இந்த சமத்துவ உலகில் நடப்பது.

அதனால் புதிதாக எதுவும் நான் சொல்வதற்கில்லை. தேர்வில் வெற்றி பெற்றால் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையா ரொம்ப நல்லது, நாம் யாருக்கும் அடிமை வேலை பார்க்கத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள், உலகம் இன்னும்  பெரியது. தாழ்வு மனப்பான்மையில் உழல வேண்டாம். நமது தோல்விக்கு நாம் மட்டுமே காரணமல்ல. நாம் குற்றவாளியோ மற்றவர்கள் புண்ணியவான்களோ இல்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பேராசையா அபத்தமா வாழ்க்கை ! - இவர்கள் இப்படித்தான் - 1

இந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில்தான் எத்தனை பரவசம் அடுத்தவனைப்போல் பாவனை செய்வதற்கு ? இவர்களுக்கு தெரியும் எல்லோரது குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்று. ஆனாலும் குழந்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தம் அவன் மட்டும் நல்லாப் படிக்கிறான் உன்னால மட்டும் ஏன் முடியல என்று ஆயிரம் கிலோ தாழ்வு மனப்பானமையை கொண்டு போய் பிஞ்சுகளிடம் ஏற்றி வைப்பார்கள்.

இது பள்ளிக்கூடம் முடியும் வரை தொடரும். நல்ல வேளையாக எனக்கு அப்பேர்ப்பட்ட கொடியவர்கள் பெற்றோர்களாக வாய்க்க வில்லை. என் அப்பா எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய பதினைந்து வயதிற்கு மேல் திட்டியதோ அதிர்ந்து பேசியதோ இல்லை. நான் கொஞ்சம் முன்கோபக்காரன், எனவே எனக்குக் கோபம் வந்து விடக்கூடாது எனவும், மனம் வருந்திடக் கூடாதெனவும் மிகவும் எச்சரிக்கையுடனே என் அப்பா என்னிடம் நடந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு மற்ற எல்லாப் பெற்றோர்க்கும் இருக்கும் சராசரியான ஆசைகள் இருந்தது, மகன் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றெல்லாம், இருந்தும் குழந்தையாக இருந்ததிலிருந்துஅதை மிகவும் அலட்டலுடனோ, எரிச்சலுடனோ சொன்னதில்லை.

ஆனால் என்னுடைய நண்பர்களின் தந்தைமார்களோ மிகவும் அலட்டல்காரர்கள், அவர்கள் தம் சொந்த மகனிடம் பேசுவது போலப்பேசவே மாட்டார்கள். என்னவோ குற்றவாளியிடம் பேசும் ஒரு காவலரின் தோரணைதான். படிப்பிற்கு இத்தன பணம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கிறோம் நீ என்ன மார்க் வாங்கற ? பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான ? என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல ? என்று கேட்பது எத்தனை அபத்தமோ அது போலத்தான் இவர்கள் பேசுவதும் இருக்கும். பணத்தைக் கட்டினால் மார்க்கு வாங்கிட வேண்டும். தந்தைமார்கள் இங்கனம் பேசுவதை நண்பர்கள் அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லலை அவர்களுக்கு இது பழக்கமானதுதான். எனக்குத்தான் மனம் கிடந்து தவிக்கும். இது படிக்கும் காலத்தில் நடந்தது.

அதே பாணியில் இப்போது வேலைக்குச் செல்லும் அல்லது வேலை தேடியலையும் பருவத்திலும் அவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஐந்திலக்க ஊதியத்தில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும் போக முடியாது என்பது எதார்த்தமான உண்மை. வேலை கிடைப்பது என்பதே எதார்த்தமில்லாத உண்மை. ஆனால் இவர்கள் விடும் ரவுசுதான் தாங்க முடிவதேயில்லை. இன்னுமா வேலை கிடைக்கல என்று ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவரோ அல்லது உறவினரின் மகனோ இன்ன இடத்தில் படித்தார் இன்ன இடத்தில் வேலை கிடத்திருக்கிறது இத்தனை சம்பளம் என்று பற்ற வைக்க வேண்டியது. போகும் போது ம்ஹூம் எல்லாருக்குமா வேலை கிடைக்குது என்று உச் கொட்டிவிட்டுப் போக வேண்டியது. இது இவர்களுக்குத் தேவையில்லாத வேலைதானே ?

என்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுக்கு உறவினர்களால் இத்தொல்லை ஏற்படுவதாகச் சொன்னான். அவனது உறவினரின் மகளுக்கு அக்சென்ஞ்சர் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அவள் பொறியியல் இவனும் பொறியியல், வழக்கம் போலவே பெண்கள் நன்றாகப் படிக்ககூடியவர்கள், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வளாகத்தேர்வு என்ற விதிகளின்படி அவளுக்கு வேலை கிடைத்து  விட்டது, இவனுக்கு இன்னும் அரியர் இருக்கிறது. 2 பட்டம் வாங்கியும் வேலை கிடைக்காத உலகில் அரியர் வைத்தும் ஒரு வேலை கிடைத்து விட்டது. ஒரு சுமாரான நிறுவனத்தில் 9000 ஊதியத்தில் அட்மினாக வேலை. இவன் பெற்றோர்களுக்கு வேறொரு கவலை. இவனுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை என்னவென்றால் இவன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகாவிட்டாலும் பரவாயில்லை அக்சென்ஞ்சர் நிறுவனத்திலாவது அட்மினாக வேலை பார்க்க வேண்டும். இல்லையெனின் இலண்டன் சென்று ஒரு வருடமாவது இருந்து விட்டு வர வேண்டும்.

இந்த மாதிரியான எண்ணங்கள் உருவாவதற்கு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அவர்களின் நண்பர்கள்தான் காரணம். நடுத்தரவர்க்க ஜாதிக்காரர்களுக்கு இந்த போலி கௌரவம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னர் தான் ஒரு அங்குலம் கூடத் தாழ்ந்து போகக்கூடாது என்பதில். எப்படியாவது கெத்துக் காட்ட வேண்டும். இன்னொரு பிரச்சனை பையனுக்குப் பெண் தேடுவதுதான். பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் கிராக்கி பண்ணுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதற்கும் மேலே இருக்கிறார்கள். பெண்கள் கிடைப்பது ரொம்பவும் சிரமமாகி விட்டது. (பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமென்றாலே சொந்த ஜாதிக்குள்தானென்பதை சொல்லத் தேவையில்லை). பெண்கள் எல்லோரும் படித்தும் விடுவதால் பெரிய வேலையிலிருக்கும் ஆணைக் கேட்கிறார்கள். எஞ்சிய ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையோ அல்லது வெளிநாட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்ற பெயரை எடுக்கவோ பெற்றோரை இது போல எண்ண வைத்திருக்கிறது. என்ன வேலையாக இருந்தாலும் சிங்கியடிப்பது அவரவர்க்குத்தான் தெரியும். பெற்றோர்க்கு அங்கலாய்க்க மட்டும் தெரியும். கள நிலவரமே அவர்களுக்குத் தெரிவதில்லை தம்முடைய தம்பட்டத்தை நிறுத்தவே அவர்களும் விரும்பவில்லை
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் ?

சிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் ! இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக செயல்படும் அமைப்பு சிருஷ்டி, இதன் கோவை பிரிவின் நிறுவனர் ஜான் என்பவரின் நேர்காணல் இடம்பெறுகிறது. மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த விழிப்புணர்வுக்காக இது எடுக்கப்பட்டது. (இதில் சில சொற்கள் புரியாததால் அப்படியே விட்டு விட்டேன். அதை காணொளியில் சரியாகக் கேட்டுக் கொள்ளவும்)
 
முதல பாகம் 
 

செல்லா:வணக்கம் நேயர்களே நான் ஓசை செல்லா பேசுகிறேன். இன்று நம்முடன் நம் ஸ்டுடியோவுக்கு வந்திருப்பவர் ஜான். வணக்கம் ஜான். ஓசை நேயர்களுக்கு உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஜான்: ஓசை நேயர்களுக்கு என் வணக்கம். நான் ஜான். நான் ஷ்ருஷ்டி மதுரை ஷ்ருஷ்டி கோயம்பத்தூர் என்ற LGBT organization ஒன்று இருக்கிறது. LGBT என்றால் Lesbians Gays Bisesexuals Transgenders. இந்த மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்றோமில்லையா அவர்களுக்காகப் போராடும் இயக்கம். அதில் நான் உறுப்பினர். I am the Director for Shrushti Coimbatore. ஷ்ருஷ்டி மதுரை என்னுடைய நண்பர் கோபியால் நடத்தப்படுகிறது.

செல்லா: தற்போது மக்களுக்கு ஆண் பெண் என்ற எண்ணம் இருக்கிறது. பின் லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் எழுத ஆரம்பித்த பின்னர்தான் திருநங்கைகள் என்ற சொல்லாடல் தமிழ்ச்சமூகத்தில் வந்திருக்கிறது.  நீங்கள் இது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்று உங்களுடன் பேசியதிருந்து தெரிந்தது. தற்போது இரண்டுவிதமான செய்திகளைத் தமிழ் மக்களுக்குக்  கொண்டு போகிறோம். முதலாவது பேசவேண்டியது Gender அல்லது பாலினம். அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?. அதைப்பற்றி முதலில் சொல்லி விடுங்கள்.

ஜான் :  கண்டிப்பாக. Gender என்றால் முதலில் நமக்குத் தெரிவது முதலில் ஆண் இன்னொன்று பெண்.  இன்னொன்று சொன்ன மாதிரி திருநங்கைகள் பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.  ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின வேறுபாடுகள் இருக்கின்றன என்று உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக பார்த்தீர்களானால் திருநங்கைகள் என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். இதைத் தாண்டி Transsexuals, Transgenders இவைகளுக்கிடையேயான வேறுபாட்டை உங்களுக்குச் சொல்ல வேண்டும். Transgenders இந்த gender என்ற சொல்  ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் gender - இல் இருக்கும். Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexualism, Transgendersim என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன. முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் Anderogenous people இவர்களை "பால்நடுநர்கள்" என்று அழைக்கலாம். இவர்கள் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை எந்த ஒரு பாலினமாகவும் நினைக்க மாட்டார்கள். திருநங்கைகள் தம்மை பெண் என அழைக்கப்பட விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தம்மை பாலினத்தின் அடிப்படையில் அழைக்கப்பட விரும்புவதில்லை. Gender Neutral என்ற வகையில் அழைக்கப்பட விரும்புவார்கள். அடுத்தவர்கள் Genderless people  அல்லது Agender - பாலினமற்றவர்கள். Gender என்பதையே ஏற்க மறுப்பவர்கள். பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள். இன்னொரு பிரிவினர் Bigenders தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள். Trigenders  என்பவர்கள் தம்மை ஆணாகவும், பெண்ணாகவும்,  திருநங்கையாகவும் எண்ணிக் கொள்பவர்கள். Gender Fluid என்பவர்கள் ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் தொகுப்பாக Queer People என்போம். இன்னும் Gender non confirmates, Demigirls, Demiboys என்றெல்லாம் இருக்கிறார்கள்.

செல்லா : Genders பற்றிப் பார்த்தோம். அடுத்து Sexuality எனும் போது Straight என்பது மட்டுமே பரவலாக உள்ளது.  அடுத்ததாக Gay என்பது அறியப்படுகிறது. தீபா மேத்தாவின் Fire-க்குப் பின் Lesbian  என்பதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. இதைப்பற்றிச் சொல்லுங்கள். இன்னும் பல வகைகள் இருப்பதாகக் கூறினீர்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லுங்கள்.

ஜான் : Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது  என்பது. Sexual orientation-க்கும் Gender Orientation-க்கும் உள்ள வேறுபாடு Hetero Sexuals என்ற  Straight எனப்படுவது பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது. இதைத் தாண்டி Gay, Lesbian பற்றிப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆணிடம் ஈர்ப்புக் கொள்ளும் ஆண்களை Gay என்றும் தமிழிழ் "நம்பிகள்" என்றும் சொல்லலாம். இவர்கள் Hetero Sexuals தமது இணையிடம் எதிர்பார்க்கும் அன்பு, காதல், பாலியல் என அனைத்து உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பவர்கள்தான் இந்த நம்பிகள். இதே இரு பெண்களிடையேயான உறவை Lesbian எனலாம். அடுத்ததாக BiSexuals இவர்கள் ஆண்களிடமும் கவரப்படுவார்கள் பெண்களிடமும் கவரப்படுவார்கள். இவர்கள் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். இவை போன்று பரவலாக அறிந்தவர்கள் தவிர்த்து, PolySexuals, Asexuals, Pansexuals என்ற வகையில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Asexuals -  எவ்வகைப்பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள். மக்கள் தொகையில் 1% இவர்கள் இருப்பதாக கின்ஸே (Kinsey) அறிக்கை கூறுகிறது.

PolySexuals - ஆண், பெண் தவிர திருநங்கைகள், திருநம்பிகள் என நான்கு வகையினருடனும் பாலியல் கவர்ச்சி உடையவர்கள்.

Pansexuals - அனைத்துத் தரப்பினரிடமும் ஈர்ப்புடைய பாலினத்தவர்கள். இவர்கள் தாம் நாட்டம் கொள்ளும் நபர் குறித்த பாலியல் வேறுபாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளாதவரகள். அந்நபர் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, Bigenders, Trigenders போன்ற எத்தகைய தன்மையுடையவரிடமும் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

Girl Fads, Boy Dytes இவர்கள் Straight - வகையில் சேர்ந்த ஆண் பெண்கள்தான். இவர்களின் பாலியல் நாட்டமானது,

Girl Fads - வகைப் பெண்கள் Gay, Bisexual ஆண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்

Boy Dytes - வகை ஆண்கள்  Lesbian, Bisexual பெண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்.

Androphilia, Gynophilia  என்பது Gay & Lesbian - க்கு மாற்றாக வருகின்ற வகைப்பாட்டியலாகும். Intersex என்பவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ கருதப்பட முடியாதவர்கள் பிறப்பின் போதே ஆண் பெண் பாலுறுப்புக்களுடன் பிறந்தவர்கள். ஆணின் இனப்பெருக்க உறுப்புடனும், பெண்ணின் இனப்பெருக்க பால் சுரப்பி உறுப்புடனும்  Intersex என்று சொல்லலாம். தமிழில் இடையிலங்கம் எனலாம். ஆண் பெண் உறுப்புகளை ஒருங்கே கொண்டவர்களை  True hermophrodites எனலாம். இவர்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருத முடியாது. இந்நிலையில் Gays, Lesbians, Bisexuals  போன்ற பதங்களுக்கு பொருளில்லாமல் போய்விடுகிறது.  இந்நிலையில் ,

Androphilia -  ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்

Gynophilia - பெண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்.

என்று வகைப்படுத்தலாம். அடுத்ததாக எதிர்பால் உடையினர் அல்லது Crossdressers அல்லது Transvesters. இவர்களை (ஆண்கள்) பொதுவாக gays என்றே அடையாளப்படுத்துவார்கள். ஆனால் இவர்கள் உடையணிவதுதான் பெண்கள் போலவேயன்றி இவர்களின் பாலியல் கவர்ச்சிக்கும் உடையணிவதற்கும் எந்தத் தொடர்புமில்லை. இவரகள் ஆண்களிடம் நாட்டம் கொள்பவர்களல்ல, இவர்களது பாலியல் விருப்பும் பெண்களே. இவர்களை Straight Crossdressers எனலாம். இவர்களுள் Gay - ஆகவும் சிலர் இருக்கலாம். அனைவரும் Gay என்ற கட்டாயமில்லை. இன்னொரு பிரிவினர் Sissy - கள்.  இவர்கள் பெண்கள் போன்று பாவனைகள் சிலவற்றைச் செய்யும் ஆண்கள். கிராமங்களில் சொல்வார்கள் "ஏன் பொண்ணு மாதிரி பண்ற" என்று. ஆண்கள் பெண்மையுடன் இருப்பது (girlish-ஆக). அவர்களும் Gay என்ற கட்டாயமில்லை. யாரிடமும் ஈர்க்கப்படும் வாய்ப்புண்டு. மாவீரன் அலெக்ஸாண்டர் ஒரு Gay. ஆனால் அவர் Girlish - ஆக இல்லாமல் முழுமையான masculine figure ஆகவே அறியப்படுகிறார். இருப்பினும் அவர் பாலியல் நாட்டம் கொண்டிருந்தது ஒரு ஆணிடம். அது போல்தான் இந்த Sissy - கள். இவர்களைக் கண்டு பயப்படும் அல்லது எதிரான மனநிலையை Sissy - Sissyphobia, Transgenders - களுக்கெதிரான மனநிலையை  Transphobia, Bisexuals - களுக்கெதிரான மனநிலையை Biphobia என்று வகைப்படுத்தலாம்.

செல்லா : Tomboys குறித்து ?

ஜான் : Tomboys என்பவர்கள் masculine girls. ஆண்கள் போல் தோற்றமுடைய பெண்கள் இவர்களின் சில செய்கைகல் ஆண்களை ஒத்திருக்கும். ஆனால் அவர்கள் பெண்களே.

இரண்டாம் பாகம் 

செல்லா : ஜான் இப்பொழுது நாம் பாலினத்தின் நிறங்கள் குறித்துப் பார்த்தோம். Sexuality - க்கு வந்திருக்கிறோம். என்னுடைய அடுத்த கேள்வி திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?

ஜான் : திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை.  தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்துறை இவர்களை அடிக்கும் போது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.

செல்லா : பாலியல் தொழில் இல்லை பிச்சையெடுப்பது, இவை தவிர வேறு தொழில் இல்லை ?

ஜான் : ஆம். இப்படியாகி விட்டது. இன்னொரு சிரமமான சூழ்நிலை வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர் ? முதலில் அவர்களுக்குக் கல்வியறிவு இருக்கிறதா ? கல்வியே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது அந்த வளரிளம் பருவத்தில் (adolacent) உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் என்பேன். கொலை செய்வதும் கூட கொடுமையானதுதான். ஆனால் தானிருக்கும் உடலையே தானே வெறுத்து வாழ்வதை ஒரு நிமிடம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலையில் போகும்போது திருநங்கைகளை வெறுப்புடன் பார்க்கும் நாம் இது பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இன்னொன்று திருநம்பிகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள். இவர்கள் குறித்த விழிப்புணர்ச்சி குறைவு. திருநம்பிகளை பெண் சமபால் விருப்புக் கொண்டவர்கள் (Lesbians) எனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களிடம் ஈர்க்கப்படும் பெண்களையே Lesbians என்று சொல்கிறோம். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பெண்களே திருநம்பிகள் ஆவர். இந்த திருநம்பிகள் பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ளும்போது அவர்களை Transmen என்று அழைக்கலாம். பெண் வளர்கையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கே குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பர். அக்குழந்தை என்னவாக விரும்புகிறது என்பதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பதே சமூகச் சுழற்சியாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உடலை வெறுத்து வாழ வேண்டும். வீட்டினரின் விருப்பத்தையும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவது மாதிரியான அழுத்தங்களை எதிகொள்ள வேண்டும். இப்படியாக அவர்களது சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியேறினாலும் சமூகம் அவர்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கிறது ? பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் இருக்கிறது.  திருநங்கைகள், திருநம்பிகள் என எல்லா வகை மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாக, பந்தாடப்படுபவர்களாக, விளையாட்டுப்பொருளாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கும் நிலை இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நிமிடம் உங்கள் உடலை வெறுத்து வாழ்ந்து பாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அப்பேர்ப்பட்டவர்களை சமூகம் எப்படி வன்கலவி செய்கிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

செல்லா : இப்போது பாலியல் விருப்பம் - Sexuality Gays, Lesbians  குறித்து இதே போல் சொன்னால் நன்றாக இருக்கும். சமுதாயத்தைப் பற்றி அவர்கள் பார்வை என்ன  ? அவர்களைப் பற்றி சமுதாயத்தின் பார்வை என்ன ? இருவரிடையே உரையாடல் இல்லாததால் பிரச்சனை இருக்கிறது. அதை நீங்கள்தான் சிருஷ்டி சார்பாக ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்.

ஜான் : கண்டிப்பாக. Gays, Lesbians, Bisexuals  என்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று பார்க்கிறேன். அவர்களிடமுள்ள பிரச்சனை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டு கொள்வது. தங்களின் உணர்வுகள் மற்றவர்களின் உணர்வுகளுடன் எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறிவது. என்னுடைய நண்பன் ஒரு பெண்ணை ரசிக்கிறான். ஆனால் நானோ ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்படித்தான் Gay - இன் நிலை இருக்கும். இப்படியான பாலியல் விருப்பத்தின் வேறுபாடுகள் இருக்கும்போது, பல வகையின(பாலின) மக்களை பார்க்கின்ற சமுதாயம் அவர்களை வெறும் உடல் ரீதியான இன்பத்துக்காக இணைந்தவர்கள் என்றே கருதுகிறது. ஆனால் உண்மையில் சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது. அவர்களுக்குள்ளே என்னென்ன விதமான அழுத்தமிருக்கிறதென்றால், வெளியிலிருக்கும் சமூகத்தைப் பார்த்து, நான் இப்படியில்லை நானொரு Straight - தான் என்ற தூண்டலும், அதேவேளை தன்னுடலும் உணர்வும் விரும்பும் சமபாலுணர்வுத்தன்மையும் (Gay & Lesbianism ) இருக்கும். இவ்விரு எண்ண முரண்பாட்டில் அவர்களது குழப்பம் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டிகள் உண்டு. எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த சமுதாயம் ஒரு நல்ல பார்வையை கொடுத்ததில்லை. அவர்களை உடலுறவு இன்பத்தை நாடுபவர்கள், பெண்ணை (இழிவாக) நடத்துவது  போல நடத்துவது, பகடி செய்வது மாதிரியிலான பிரச்சனைகள் சமுதாயம் அளிக்கிறது. இதனால் அவர்களுக்குள் இரட்டை வாழ்க்கை (Double Life) வாழ வேண்டியிருக்கிறது. ஆணாக இருந்தால் தாய், தந்தை, தங்கையைக் கவனிக்கும் பொறுப்புடனும், பெண்ணாக இருந்தால் புகுந்த வீட்டிற்கு செல்லும் வகையில் நடந்து கொள்ளவும் வேண்டும். இது போன்ற செய்கைகளை மீறுவதாகத்தான் இந்த மூன்றாம் பாலினர் நடந்து கொள்வார்கள். இவர்களது உணர்வு வெளிப்படும் போது இன்னொரு ஆணைத்தான் இவர்கள் தமது அனைத்து வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக தேடுவார்கள். பெண் சமபால் விருப்புக் கொண்டோர் பெண்ணைத்தான் தேடுவார்கள்.  அதுதான் Gays, Lesbians.

செல்லா : இது பாலுணர்வை மட்டுமே சார்ந்தது இல்லை என்று கூறுகிறீர்கள் ?

ஜான் : இல்லை. Straight - இல் உள்ள அதே காதல் அதே ஏக்கம், காதல்ன் தன்னுடனிருக்க வேண்டும், தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும், உணர்வுகளை, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்த மாதிரியான உணர்வுகளைத்தான் அவரகள் கொண்டிருக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான உணர்வுகள் எப்படி சிதறடிக்கப்படுகிறதென்றால், முக்கியமாக இரட்டை வாழ்க்கையினால் உள்ளுணர்வை விடமுடியாமலும் வெறும் பாலின்பத்தை நாடுவதில் மூலம் வடிகால் தேடுகிறது. நாம் (ஆண்) ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் ( சமபால் விருப்புடையோர்) போல் பூங்காக்களில் மட்டுமா உட்கார்ந்து இருக்கிறோம் ? (இணையாக எல்லா இடத்திலும் சுதந்திரமாகப் போய் வர முடிகிறது). ஏனிவர்கள் இப்படியிருக்கிறார்கள் ? அரசியலமைப்பு இன்னும் அவர்களை ஏற்றுக் கொள்ள வில்லை. 2009 - இல் சட்டப்பூர்வமாக்கினார்கள். இப்போது தவறான உறவு என்கிறார்கள். இது எங்களை அதிகமாக பாதித்தது. எங்களை ஏற்கெனவே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசே ஏற்றுக்கொள்ளாத போது, எங்களின் உரிமைகள் எப்படியிருக்கும் ? எங்களை யார் புரிந்து கொள்வர் என்கிற ரீதியிலான கவலைகள் எங்களனைவருக்கும் இருக்கும்.  வெளிப்படுத்துதல் - coming out என்பது தன்னுடைய உறவினரிடமோ, நண்பரிடமோ, குடும்பத்தினரிடமோ வேறு யாரிடமோ தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, தங்கள் எப்படி மாறுபடுகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வது. இப்படிப்பட்ட பகிர்ந்தல் நம் சமூகத்தில் இல்லை. அதற்கான வடிகால்களை சமூகம் ஏறடுத்தவுமில்லை. இந்த மாதிரியான செயல்களை அங்கீகரிக்கணும். அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.  என்பதுதான் எங்களின் முக்கியமான வேண்டுகோள்.

மூன்றாம் பாகம் 


செல்லா :  இந்த மூன்றாம் பாலினம் என்கிறோம்.  மேற்கத்திய சூழலில் தம்மை இந்த மாதிரி வெளிப்படுத்திக் கொண்டவர்கள் யார் ? தெரிந்த பெயர் ஏதாவது சொல்ல முடியுமா ? Historical Figure யாராவது சொல்ல முடியுமா ?

ஜான் : ப்ளேட்டொ ஒரு சமபால் விருப்புடையவர் (Gay) என வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடுத்து லியானார்டோ டாவின்சி, கடவுளும் மனிதனும் தொட்டுக் கொள்வது போல் ஓவியம் வரைந்த மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோர் சமபால் விருப்புடையோர். லியானார்டோ டாவின்சி ஒரு சமபாலின விருப்புக் கொண்டவர் என்பது வரலாற்றுப் பதிவுகள் மூலம் தெரிய  வந்தது.  ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு ரீதியாக ஆராய்ந்த போது, இயேசுவும், அவரது தாயும், திருமுழுக்கு யோவானும் உள்ள படத்தை வைத்து interplate பண்ணும் போது,  அவரிடமிருந்த சமபால் விருப்பை விளக்குகிறார். உயிரோட்டமுடைய சிற்பங்களை செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ ஒரு சமபால் விருப்புடையவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் ஆலன் ட்யூரின் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆனால் கணிணியைக் கேள்விப்பட்டிருப்போம், அதில் உள்ள algorithms, codings ஆகியவற்றை உருவாக்கியவர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர். ரிக்கி மார்ட்டின், ஆடம் லாம்பர்ட், லேடி காகா ஒரு Bisexual- ஆண் பெண் என இருவரிடமும் ஈர்ப்புக் கொள்பவர். தமிழில் "ஈரர்" எனலாம். இதே போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்த மிகப்பெரிய எழுத்தாளர் அல்டேர் ரோட், கறுப்பினத்தைச் சார்ந்த பெண்ணியலாளர் ஒரு Lesbian. டி. ஹெச். லாரன்ஸ் ஒரு புதின ஆசிரியர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர் என்று ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். கிங் ஜேம்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் சமபால் விருப்புடையவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கிரேக்க சமூகத்தில் மிகச் சாதாரண விடயமாக இருந்ததுதான் இது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடயமாகவும் இருந்தது. ரோம சமூகத்திலுமிருந்தது. இதை எப்போது தவறாகப்பார்க்க ஆரம்பித்தார்களெனில், தாமஸ் அக்கியூரஸ் என்ற கிறித்தவ மறையியலாளர், இயற்கைக்கு ஏதுவான சேர்க்கை, இயற்கைக்கு மாறான சேர்க்கை என்று அவர்தான் முதன் முதலில் எழுதினார். இனப்பெருக்கம் செய்வதற்காக பெண்ணுறுப்பு வழியாக கலவி செய்வது மட்டும்தான் இயற்கையான சேர்க்கை அதாவது மிஷனரி நிலையில் இருந்து கலவி செய்வதுதான் சரியானது என்று அவர்தான் சொன்னார். குடியேற்றக்காரர்கள் (காலனியாளர்கள்) கொண்டுவந்ததாக பெண்ணியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர் அப்படி எழுதி வைத்தார், பின்பு வந்த குடியேற்றக்காரர்கள், ஆட்சியாளர்கள் கிறித்தவ மதத்தைப் பரப்பினார்கள். இப்படியாக பழைய கலாச்சாரங்களிலிருந்து சமபால் சேர்க்கையை அழித்தார்கள். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களை தென் அமெரிக்காவில் Two sprit people என்று சொல்வார்கள். இவர்களின் கலாச்சாரம் தாக்கியழிக்கப்பட்டது. அதற்கு முன் இருந்த சமபால் சேர்க்கை குறித்த தடயங்களை மொத்தமாக அழித்தார்கள். இது மாதிரியான நிறைய சமபால் சேர்க்கைக்கெதிரான செயல்கள் தேவாலயங்களில் இருந்தன. 1880 - இல் மெக்காலே காலத்தில்தான் சமபால் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டது. அதை Victorian view on sex or victorian mentality எனலாம். அதற்கு முன்பு வரை சமபால் சேர்க்கை நம் கலாச்சாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்லா : அரவான் குறித்து ? அர்வானுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அரவானே ஒரு திருநங்கையா ?

ஜான் : அரவான் அர்ச்சுனரின் மகன். அரவம் என்றால் தமிழில் பாம்பு என்று பொருள். அவருக்கு பாம்புக் குறியீடு உள்ளதை நிறைய இடங்களில் பார்க்கலாம். குருக்ஷேத்திரப் போர்க்காலங்களில் காளிக்கு பலி கொடுப்பதற்காக அர்ச்சுனரின் மகனைக் கேட்டார்கள். அதாவது வெட்டிப் பலி கொடுப்பது மாதிரி. அல்லது சில நேரம் அவரை அவரே வெட்டிக் கொண்டு சாகிறது மாதிரியும் இருக்கும். அரவான் தான் இதுவரை தாம்பத்ய இன்பமே அனுபவித்ததில்லை என்கிறார். திருமணத்திற்காக பெண்களைக் கேட்ட போது அடுத்த நாளே இறக்கப் போகிறவர் என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் விஷ்ணு மோகினி வேடத்தில் வந்து அவருக்கு மனைவியாக இருக்கிறார். பின்பு அரவான் பலி கொடுக்கப்படுகிறார். இந்த அரவான் நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்.

செல்லா : LGBT collect மாதிரி எடுத்துக் காட்டாக ரோஸ் தொலைக்காட்சியில் வந்து விட்டார். கல்கி படத்தில் நடிக்கிறார். இப்படியாக அவர்கள் வெளிவரும்போது,  உங்கள் சார்பில் ஆற்றல் மிக்க குரல்கள் ஒலிக்கப்படும் என்று கருதுகிறீர்களா ?

ஜான் : கண்டிப்பாக. எங்கள் மக்கள் வெளிவரும்போதுதான் எங்கள் பிரச்சனைகள், குரல்கள், செய்திகள் மக்களுக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். திருநங்கைகள் ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்ததற்கும், தற்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயமும் வெளிவரும்போதுதான், கலைத்துறையாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் சரி எங்களைப் பற்றித் தெரியவரும்.

செல்லா : இவர்களும் நம்மை மாதிரி மனிதர்களே! வேறு வகையில் இருக்கின்றனர் என்ற தெளிவு விழிப்புணர்வு வரும் ?

ஜான் : ஆம். பாலினத்தின் பல நிறங்கள், வானவில்லின் பல நிறங்கள் போல. நாங்கள் வானவில்லைத்தான் எங்கள் சின்னமாக வைத்திருக்கிறோம். LGBT - குழுவின் கொடி வானவில்தான். ஒரே நிறமாகத் தெரிந்தாலும் பல வண்ணங்களாகச் சிதறியிருக்கிறது.

செல்லா : உங்களுடன் பேசிய பின்புதான் இத்தனை இருக்கின்றன என்பதே எனக்குத் தெரியவருகிறது. உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. நன்றி ஜான்.

ஜான் : ரொம்ப மகிழ்ச்சி. நன்றி !
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அணு உலை - ஜப்பான் மூடுகிறது தமிழகம் திறக்கிறது !!


ஐன்ஸ்டீன்கள் வாழும் தமிழ்நாடு உலக அதிசயம். ஆனால் உலகத்திலேயே தமிழர்களைப் போல ஒரு அதிசயப் பிறவிகளைப் பார்க்க முடியாது. எப்படித்தான் இவ்வளவு துணிச்சலுடன் இருக்கிறார்களோ தெரியவில்லை. இன்னும் 10 நாள்களில் அணு உலையத் திறக்கப் போகிறோம் என்று முதல்வர் அறிவித்து விட்டார். போராட்டக்காரர்கள் தம் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் காவலர்கள் அங்கு வன்முறையைத் தூண்டக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்னவெல்லாமோ செய்து பார்க்கிறாரகள். சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்களின் பஞ்சாயத்துத் தலைவர்கள் சிலரை சில நூறுகோடிகள் உங்கள் கிராமங்களுக்கு நலத்திட்ட உதவி என்று ஆசைகாட்டி அவர்களை விலைக்கு வாங்கியுமுள்ளனர். பட்டினிப்போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏனென்றால் கடந்த 9 மாதங்களாகப் பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  பல பெண்களின் உடல்நிலை மோசமாகியிருக்கிறது




போதாக்குறைக்கு கேரள முதலவர் தமக்கு 500 மெகாவாட் தேவையென அம்மாவுக்குப் போட்டியாகக் கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமருக்கு.  இது நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும். ஏனென்றால் கூடங்குளம் முழு மின்சாரத்தையும் தமிழகத்திற்குக் கிடைக்காது என்று கடிதம் எழுதிய அம்மாவுக்கும் தெரியும் மற்றும் பிரதமர், அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என அனைவருக்கும் தெரியும். இதனுடன் ஒப்பிடுகையில் கேரளாவின் கோரிக்கை நியாயமானதால் அது நிறைவேற்றப்படும். இதை எதிர்த்து அம்மாவை ஒருத்தனுன் கேள்வி கேட்க முடியாது. இதை கேரளாவிற்கு எதிரான மனப்பான்மையைத் தூண்டுவதற்காகக் கூறவில்லை. ஏனெனில் கூடங்குளம் போராட்டத்திற்கு இந்திய அளவில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருக்கின்றனர். வேறொரு மாநிலத்திலிருந்து போராட்டம் குறித்துப் பயிற்சி பெறவும் கூடங்குளத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அணு உலை எதிர்ப்பு என்பது சுற்றுச்சூழல் இயற்கை மீதான பாதுகாப்பு என்ற உணர்விலிருந்து வருவதாகும். அணு உலை கூடங்குளத்திலிருந்து வேறொரு இடத்திற்கோ  வேறொரு மாநிலத்திற்கோ மாற்ற வேண்டுமென்பதல்ல கோரிக்கை. அணு உலை என்பது ஆப்கானிஸ்தானோ பாகிஸ்தானோ அமெரிக்காவோ உலகின் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது என்பது தான் உண்மையான அணு உலை எதிர்ப்பாக இருக்க முடியும்.


மாறாக ஜப்பானில் அணு உலை மூடப்பட்டதை ஜப்பானியர்கள் ஒரு வருடப் போராட்டத்தின் வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்காக தமது இன உணர்வைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் அதிமுக ஆதரவாளனாம். அதாவது அம்மாவின் எதேச்சாதிகாரத்தனத்தையும், திமிரையும் துணிச்சல் என்று துதிபாடும் அறிவாளிகளைப்போலத்தான் அவனும். அவன் சொல்கிறான், ஒரு நாள் இல்லை ஒரு நாள் உதயகுமாரைப்போட்டுத் தள்ளி விடுவார்களாம். எனென்றால் அவன் (உதயகுமார்) இப்ப அமைதியா இருப்பான், கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் பணத்த வாங்கிட்டுப் பிரச்சன பண்ணுவானாம். அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டம் இன்னும் நடப்பதையே அறியவில்லை அந்தப் புண்ணியவான். அணு உலை ஆதரவாளர்களிடம் ஒரு வித வெறியைக் கண்டால் ஈரக்குலை நடுங்குகிறது. அது என்ன எழவு போராட்டக்காரர்களைக் கண்டாலே அத்தனை வெறுப்போ ?


இன்னும் சில அறிவாளிகள் தற்போது மின்வெட்டு நீங்கிய பின்பு சித்தம் தெளிந்து வெறி அடங்கியவர்களாக கூடங்குளம் மின்சாரம் மொத்தமும் தமிழ்நாட்டுக்கில்லையாமே என்று அதிர்ச்சி காட்டுகிறார்கள். இந்த லட்சணத்தில் அணு உலை ஆதரவு இருக்கிறது. அப்படியே அணு உலை வெடித்தாலும் அவனுகதான சாவானுக என்ற எண்ணமும் உள்ளே பலருக்கு இருக்கிறது. இதைவிட முட்டாள்தனமான எண்ணம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒரு உதாரணம் ரஷ்யாவின் ஷெர்னோஃபில் விபத்து நடப்பதற்கு ஒரு  மாதத்திற்கு முன்பு SOVIET LIFE என்ற இதழுக்குப் பேட்டியளிக்கும் போது கூறினார் "இந்த அணு உலையை இயக்குவது கார் ஓட்டுவதை விடப் பாதுகாப்பானது" அதைத்தொடர்ந்து பேட்டியொன்றில் இந்திய அணுசக்திக் கழகத்தில் தலைவராக இருந்த ராஜா ராமண்ணா கூறியது "அணுகுண்டைப்போல அணு உலை வெடிக்கும் என்பது முட்டாள்தனமானது. இன்றைய தொழில் நுட்பமானது பல பாதுகாப்பு சாதங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துவதால வெடிப்பதைத் தடுக்கவல்லது". இன்னொன்று அணு உலை வெடிப்பு என்பது வெடிகுண்டு வெடித்து அடங்குவதைப் போல வெடித்து அழிவை உண்டாக்கி விட்டு உறங்கிவிடாது. அது தொடர்ந்து அழிவை வெளியிடும் கதிரியக்கமாக. அதைத் தொடர்ந்து விபத்தைத் தடுக்க வெடித்த உலையானது தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் அதை அழிக்க அல்லது மூட ரஷ்யா செலவிட்ட தொகை 1800 கோடி இதில் 5 இலட்சம் பேர் ஈடுபட்டனர். இதன் விளைவாக 1986-2004 வரையில் 9,8500 பேர் புற்று நோய் பாதிப்பினால் இறந்தார்கள் என்று ரஷ்ய அரசே அறிக்கை வெளியிட்டது. அத்தனை பேருக்கு எப்படிப் புற்று நோய் வந்தது. ரஷ்யாவிலிருந்து 2700 கிமீ தொலைவிலிருந்த இங்கிலாந்தின் 382 பண்ணைகளிலும் அங்கிருந்த 2,26,500 ஆடுகள் மீதும் கதிர்வீச்சுப் பரவியது. கதிர்வீச்சின் அளவு 8% ஆசியாவிலும், 6% ஆஃப்ரிக்காவிலும், வட அமெரிக்காவில் 0.6% அளவு என பல கண்டங்களிலும் பரவியது.

தற்போது விபத்து நடந்த ஃபுகுஷிமா விலிருந்து, வெளியேறிய கதிரியக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இனி உலகத்திலேயே தூய்மையான உண்வோ நீரோ என்று எதுவும் கிடையாது என்கிறார். அணு உலை மின்சாரம் வேண்டுகிறவரகளுக்கு நச்சுடன் கூடிய உணவைத் தரவேண்டும் என்கிறார் கியோட்டொ பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியரும், அணு உலை நிபுணருமான ஹிரோகி கோய்டே. 



அணு உலை ஆதரவாளர்கள் என தூங்குவது போல் நடிக்கிறவர்களை எழுப்ப முடியாது. அவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வதில்லை. அது குறித்த அக்கறையும் ஆர்வமுமில்லை. இதனால்தான் 25 வருடங்களுக்கு முன்பே இலங்கையிலிருந்தும் கூடங்குளம் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது ஏனெனில் அது இலங்கையையும் பாதிக்கும். 

நேர்மையிருந்திருந்தால் போபால் விபத்தும் அதைத் தொடர்ந்த 25 வருட நிகழ்வையும் கொஞ்சம் தெரிந்திருந்தாலே போதும் அணு உலைகளை எதிர்ப்பதற்கும், அரசாங்கத்தின் நம்பிக்கைத் துரோகமும் விளங்கியிருக்கும். பிறகெப்படி ஷெர்னோபில், ஃபுகுஷிமா இவையெல்லாம் காட்டிப் பயமுறுத்தினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. நாளை கூடங்குளத்தில் விபத்து நேர்வதற்குக் காரணமாக இருக்கப்போவது இந்த அணு உலையை திறப்பதுதானே ஒழிய வேறு காரணங்கள் இருக்க முடியாது. ஆனால் இதை மறைத்து ஏதாவது ஸ்விட்சை ஆன் பண்ண மறந்து விட்டார்கள், பூகம்பம், மழை, சுனாமி என இயற்கை செயற்கை காரணங்களைச் சொல்லும் தினமலரும் அதன் விசுவாசிகளும், தற்போது போல வாயு பகவான் வருண பகவான் என்று சொல்ல மாட்டார்கள்.


சிங்கள் இராணுவத்திடமிருந்து தமிழக மீனவர்களைக் காக்க விரும்ப்பாத இந்தியா 5000 கிமீ தொலைவிற்கு அணு ஆயுதத்தை எடுத்துச் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றி கரமாக ஏவியுள்ளது. பத்தாம் நம்பர் சிங்கள ராணுவத்தை எதிர்க்காத தமிழர்களைக் காக்காத இந்தியா இந்த அணு ஆயுதத்தை ஏவி சீனாவிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் என நம்புகிறவர்கள் நம்பட்டும். பாதுகாப்புக்காகவும் அணு எதிரிகளை அழிக்கவும் அணு நல்ல வல்லரசுகள் நல்ல அரசாங்கங்கள் நல்ல நாடுகள் நல்ல உலகம்.

அடுத்ததாக பயங்கரவாதத் தாக்குதல், இராணுவ நிபுணர்களைப் போல சீனப் பூச்சாண்டி காட்டுகிறவர்கள் நியாயமாகப் பார்த்தால் இதை எதிர்த்திருக்க வேண்டும், ஒரு வேளை இலங்கையை வளைக்கத் தொடங்கிவிட்ட சீனர்கள் தமிழகத்தின் தாக்குதல் இலக்காக முதலில் கூடங்குளம் அணு உலையைத்தானே  தேர்ந்தெடுப்பார்கள்.


ஃபிரான்சில் பசுமை அமைதி இயக்கத்தவர் ஒருவர் அணு உலைகளுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவது மிக எளிது என்பதையும் நடத்திக் காட்டியுள்ளார். ஃபிரான்சிலேயே அப்படியென்றால் நம்நாட்டில் ??! 





ஆனாலும் தமிழ்நாட்டானுங்களுக்கு துணிச்சல் அதிகமப்பா !! எனக்கு அப்படியில்ல. எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு ஆசை ஜப்பானைப் போல நம்ம எப்ப மாறுவம்னு ஏற்கெனவோ ஜாதி என்ற விடயத்தில் மட்டும் நாம் ஜப்பானியருடன் ஒன்றித்திருந்தோம் தற்போது அணு உலையிலும் அவர்களைப் போலவே மூடுவதில் அல்ல திறப்பதில் எத்தனை பட்டாலும் திருந்தப்போவதில்லை.

கூடுதல் வேண்டுகோளாக டெசோ தலைவருக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறையிருந்தால் அணு உலையின் மீது அவர் பார்வை படட்டும். அதை நிறுத்தட்டும். ஈழத்தை அடுத்த மாசம் வாங்கிக் கொடுத்து விடலாம்


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment