இந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) ?


இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக் கொண்டாடப்படுகின்றனர் ?, அவர்கள் இந்திராவைக் கொன்றிருக்காவிட்டால் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் சீக்கியருக்கெதிரான படுகொலைகள் நிகழ்ந்திருக்காது. அல்லது பொற்கோயிலில் இந்திய இராணுவத்தை ஏவி மிகப்பெரும் படுகொலைகளையும், சீக்கியரின் புனிதமாகக் கருதும் இடத்தை அழித்த இந்திராகாந்தியை கொன்றதால் கொண்டாடப்படுகிறார்களா என்றால் அதுதான் உண்மை. அவர்களிருவரும் பகத் சிங்கை விடவும் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்திரா காந்தி படுகொலையை அவர்கள் துன்பியல் நிகழ்வாகக் கருதவில்லை. அவர் கொல்லப்படுவார் என்பதை பஞ்சாப்பிய சீக்கியர்கள் உணர்ந்தே இருந்தனர். இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம்  வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.  இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History )  என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

                                       

அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது.  இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார். 

அமைதி நடவடிக்கை (Operation Shanti)

சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம். 

பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.

இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி)  என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்;

பின்குறிப்பு: சீக்கியர்கள் பற்றி எழுதிய இடுகைகள், படங்கள்  அனைத்திற்கும் உதவிய தகவல்களின் மூலத்திற்கான  இணைப்புகளை அங்கங்கே கொடுத்துள்ளேன். அவையனைத்திற்கும் நன்றிகள். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1984 கலவரத்தின் சில துளிகள்


இந்திரா காந்தியின் படுகொலையும் மக்களின் எதிர்வன்முறையும்

சிறுபான்மையினரின் மேல் வன்முறை ஏவப்படும்போது இந்துப் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் ஒரு பதில் சொல்வார்கள். இந்த வன்முறை இந்துக்களின் எதிர்த்தாக்குதல் என்று மொத்த இந்துக்களின் மீதும் பழியைப்போட்டுவிடுவார்கள். இதைத்தான் டெல்லியில் நடந்த படுகொலைக்குப் பின்பும் சொன்னார் இராஜீவ் காந்தி. இந்திராவின் படுகொலைக்கும் பஞ்சாப்பில் நிலவிய பிரிவினைத் தீவிரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் பல்லாயிரம் சீக்கியர்கள் பேராயக்கட்சிப் பேய்களின் கொடூரத்திற்கு இலக்காகி மாண்டுபோனார்கள். டெல்லியிலிருந்த சீக்கியர்கள் பலர் பேராயக்கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்து மதவெறியைத் தூண்டுவதற்காக இவர்களைக் கொல்லப்படக் காரணமான கொலைகாரப் பயங்கரவாதி உதிர்த்த முத்துக்கள்தான் இவை. 

     "இந்திரா அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து சில கலவரங்கள் நடைபெற்றன. இந்தியாவே சில நாள்களுக்கு உலுக்கப்பட்டதிலிருந்து (சீக்கியர் படுகொலை) மக்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததை நாம் அறிவோம், ஆனால் பெரிய மரம் வீழும்போது தரை சிறிது அதிர்வது இயற்கையானது" என்றார் இராஜீவ்.

இந்திராகாந்தி 1984 -ம் ஆண்டு, அக்டோபர் 31 ம் நாள் காலை 9.15 மணிக்கு சுடப்படுகிறார். அவர் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். பலனின்றி இரண்டு மணிநேரத்தில் இறந்துவிடுகிறார். அவரது இறப்புச் செய்தி அனைத்திந்திய வானொலியில் அறிவிக்கப்படுகிறது. நண்பகலில் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் மக்கள் கூடத் தொடங்குகின்றனர். அவர்களால் வெறுப்பைக் கக்கும் "இரத்ததிற்கு இரத்தம்", "சீக்கியர்கள் தேசத்துரோகிகள்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. அவை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்நாள் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைய குடியரசுத்தலைவரான ஜைல் சிங் அன்று மாலை அவ்விடம் வந்து சேர்ந்த போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. அங்கங்கே சீக்கியர்கள் மகிழுந்துகளிலிருந்தும், பேருந்துகளிலிருந்தும் வெளியே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர், அவர்களது தலைப்பாகைகள் கிழித்தெறியப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவ்வளவுதான் இந்திரா காந்தி படுகொலை நடந்த நாளில் சிக்கியருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக இருந்தது.

திட்டமிடப்பட்ட வெறியாட்டம்

இந்த ஆவேசமானது ஒரு இரவுக்குள் மிகப்பெரும் படுகொலைகளைத் தொடக்கிவைக்கும் அளவுக்குக் கொலைகாரர்களால் ஊதிப்பெருக்கப்பட்டது. இதற்குக் காரணம் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்பதே. அந்தத் தந்திரம் வெற்றி பெற்றது. அந்தத தேர்தலில் மிகப்பெருமளவிளான வாக்குகளைப் பெற்று வென்றது பேராயக்கட்சி (காங்கிரஸ்).


 திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையும் காவல்துறையின் உதவியும் மிகப்பெருமளவில் படுகொலைகள், கொள்ளையடிப்புகள், வன்கலவிகளுக்கு வழிவகுத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன்குமாரும், வர்த்தக சங்கத் தலைவர் லலித் மேகன் என்பவரும் கொலைகாரக் கும்பலுக்குப் பணமும், சாராயமும் தந்து தூண்டிவிட்டவர்கள். ஜே.ஜே காலனி எனப்படும் இடம் அவசரநிலைக் காலத்தில் பேராயக்கட்சியின் ஆட்சியாளர்களால் சேரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மறுகுடியேற்றப் பகுதிகளாகும். இந்தப் பகுதி பேராயக் கட்சிக்கு மிகப்பெரும் வாக்குவங்கியாக இருந்தது. குஜ்ஜார், ஜாட் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பாங்கீஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் வரை பலரும் பேராயக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இப்பகுதிகளில் இருந்த படிப்பறிவற்றவர்கள், உதிரிப்பாட்டாளிகள், சமூகப்பகைவர்கள், பொறுக்கிகள், பொறம்போக்குகளைக் கொண்டு பேராயக் கட்சி தமது அரசியல் போராட்டங்களில், பேரணிகளில், பொதுக்கூட்டங்களில், கலவரங்களில் ஈடுபடுத்தி வந்தது. இவர்களே கொலை, கொள்ளை, வன்புணர்ச்சிகளை நடத்தும் அடியாள்களாக செயல்பட்டனர்.


இந்தக் கொலைகாரர்களுக்கு மூன்று நாட்களும் போக்குவரத்து வசதி எல்லாவகையிலும் செய்து தரப்பட்டது. டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தொடங்கி, காவல்துறையினரின் வாகனங்கள் வரையில் இந்தக் கும்பல்களை சீக்கியர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு உதவின. இந்தக் கும்பலுக்குத் தொடர்ந்து வெறியூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன். "சீக்கியரைக் கொல், கொள்ளையடி", "சீக்கியனுக்குப் பாடம் கற்பிக்க!", "ஒரு சர்தாரும் தப்பக்கூடாது!", "காவல்துறையே நம்முடன் இருக்கிறது!" இவை முழக்கமிடப்பட்டன. இந்தக் கொலைகாரப் பேய்களுக்கு உருட்டுக்கட்டைகள், கம்புகள், வேல்கள், வாட்கள், கத்திகள், இரும்புத்தடிகள் மண்ணெண்ணெய் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டன, அவர்களின் கைகளில் வாக்காளர் பட்டியல் இருந்தது. வீடுவீடாக வெறியாட்டம் நடந்தது. வீடுகளிலிருந்தவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அடித்தும், வெட்டியும், உயிருடன் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். சாலையில் துரத்தித் துரத்தி வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். ஆண்கள் தலைப்பாகையைக் கிழித்தும் முடியை வெட்டியும், பெண்கள் கணவர்கள், அண்ணன்கள் முன்னிய்லையில் கும்பல்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். பாதி உயிருடன் எரிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரது பிணங்களும் தெருவிலே கிடந்தன. அவைகள் மூன்று நாட்களுக்குப் பின்பே கொலையானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டிய நிலையில் அப்புறப்படுத்தப்பட்டன. 

காவல்துறையினர் பரப்பிய வதந்திகள்

டெல்லியின் காவல்துறையும் தன் பங்கிற்கு பொய்யான வதந்திகளைப் பரப்பி சீக்கியருக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. பரப்பப்பட்ட மூன்று வதந்திகள் 

1. சீக்கியர்கள் இந்திராவின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டும் மகிழ்ந்தனர். 

2. ஒலிப்பெருக்கியுடன் இருந்த காவல்துறையினரின் வாகனங்கள் "சீக்கியர்கள் டெல்லியின் குடிநீர் விநியோகத்தில் நச்சைக் கலந்து விட்டார்கள்" என்றன , சில இடங்களில் மக்கள் நீரைக் குடிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

3. பஞ்சாப்பில் கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களுடன் இரயிலொன்று பழைய டெல்லி இரயில் நிலையத்தில் வந்துள்ளது. சீக்கியர்களின் கூட்டமொன்று கலவரத்தைத் தூண்டுகிறது, எனவே இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாணியில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன.  

இதனால் சீக்கியர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவர்களின் புனித நூல்கள் எரிக்கப்பட்டன. அவர்களின் குருத்துவாராக்களில் சிறுநீரைக் கழித்துவிட்டு அவைகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினர் சீக்கியரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர். கொலைகாரர்கள் வீடுவீடாக வாக்காளர் பட்டியலுடன் சென்று அடையாளம் கண்டு கொன்று குவித்தனர்.  மேலும் சீக்கியர்களில் ஆண்கள் தலைப்பாகை, தாடிகளைக் கொண்டும், பெண்கள் உடைகளைக் கொண்டும் எளிதாக அடையாளம் காணப்பட்டு சூறையாடப்பட்டனர். இத்தனைக் களேபரத்திலும் மிக நேர்த்தியாக நடந்த நிகழ்வுகள் சில, அன்றாடங்காய்ச்சிகளான உழைப்பாளி சீக்கியர்கள் வாழும்பகுதிகளில் அதிகமாக கொலைகளும் , பணக்கார சீக்கியர்கள் வாழுமிடங்களில் கொள்ளைகளும் அதிகமாக நடந்தன. கொலைகார ஓநாய்க்கூட்டத்திற்கு எந்தெந்தக் கடைகள் கொள்ளையடிக்கப்படவேண்டும், எந்தெந்தக் கடைகள் எரிக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். 

இந்தக் கொலைவெறியாட்டத்தினால் 3000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. விதவைகள் எண்ணிக்கை 1300, பெற்றோர், உறவினரை இழந்து அநாதைகளானவர்கள் 4000 பேர்கள். உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் டெல்லியிலிருந்து மட்டும் ஏறக்குறைய 50,000 பேர்கள் வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குறித்தும் பஞ்சாப்பில் சீக்கியர் மனநிலை குறித்தும் ஒரு ஆவணப்படம் கீழே.


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நீல விண்மீன் நடவடிக்கையில் அழிந்த சீக்கியரின் வரலாற்று நூலகம்


சீக்கியரின் அடுத்த ஈடு செய்யமுடியாத இழப்புதான் பொற்கோயிலின் ஒரு பகுதியாக இருந்த அவரகளது நூலகம்(Sikh Reference Library) அழிந்து போனது. இராணுவச் சண்டைக்குள் காணாமல் போன துயரத்தில் ஒன்றாக கருதப்படுவது இந்த  நூலகம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிகழ்வு. அவர்களின் சில நூற்றாண்டுச் சேகரிப்புகள் ஒரு நாளில் மறந்து போயின. இது ஒரு வகையில் யாழ்ப்பாண் நூலகம் எரிக்கப்பட்டது போன்றதுதான். 

சீக்கியரின் பொற்கோயிலில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலின் பெயர்தான் நீல விண்மீன் நடவடிக்கை (Operation Blue star). அந்த இராணுவ நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தால் பொற்கோயிலில் இருந்த விலைமதிப்பற்ற தங்கம் போன்ற பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றில்  சில திருப்பியும் அளிக்கப்பட்டன. பலவும் அழிந்து போயின அல்லது தொலைந்து போயின.  பொற்கோயிலின் ஒரு கட்டிடத்தில் இருந்த இந்த நூலகம் 1947 - ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 600 ஆண்டுகால சீக்கியரின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சீக்கிய மதத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் , குருமார்களின் போதனைகள் கொண்ட பல நூல்களையும் கொண்ட அவர்களின் அடையாளமாகவும் விளங்கியது. இது இந்திய இராணுவத்தால் மர்மமான முறையில் எரித்து அழிக்கப்பட்டது அங்கிருந்த சில விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 


                                                                              எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி 

நூலகத்தில் ஏறக்குறைய 20000 நூலகள் இருந்திருக்கலாம். சீக்கிய குருக்களின் சீடர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதிகள்,  ஆதிகிரந்தத்தின் பல்வேறு கையெழுத்துப் பிரதிகள், குரு கோவிந்த் சிங் அவர்களால் தொகுக்கப்பட்ட போதனைகள், பல்வேறு இலக்கியங்கள், ஓவியங்கள், பாடல்கள் அடங்கிய பல பண்பாட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டன. அதில் பஞ்சாபி மொழியிலிருந்த நூலகள், கையெழுத்துப் பிரதிகள் எண்ணிக்கை 2335. பஞ்சாபிய மொழி மட்டுமன்றி அஸ்ஸாமிய, சிந்தி, வங்காள மொழிகளிலும் இருந்த நூல்களும் இதில் அடக்கம். ஆங்கில மொழியில் மட்டும் 1047 நூல்கள் இருந்தன. ஏறக்குறைய 383 பாகங்களாக இருந்த நூல்கள் 980 தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன

நூலகம் எரிக்கப்பட்டதா என்ற சர்ச்சை

பிந்தரன்வாலேவையும் அவரது ஆதரவாளர்களையும் அழிப்பதற்காக இந்த நீல விண்மீன் நடவடிக்கை இந்திராவினால் உத்தரவிடப்பட்டது. சில நூறு காலிஸ்தானிகளை எதிர்த்து மிகப்பெரும் இராணுவ நடவடிக்கையாக பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மிகப்பெரும் தாக்குதல் சீக்கியர் மீது நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை 1984 ம் ஆண்டு ஜூன் 3 முதல் 6 ம் தேதிவரையில் நடத்தப்பட்டது. அரசின் கணக்குப்படி 493-800 காலிஸ்தானிகள் (பொதுமக்களும் சேர்த்து ) 83 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஆனால் பல்லாயிரம் சீக்கியர் கூடும் ஒரு திருநாளில் நடத்தப்பட்டதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்ககூடும்.

நீல்விண்மீன் நடவடிக்கை ஜூன் 6, 1984 வரை நடந்தது. அந்த நாளின் (ஜூன் 6) மாலை வரையிலும் நூலகம் பாதிப்படையவில்லை. ஜூன் 7 ம் நாள் அதிகாலை வேளையில்தான் எரிக்கப்பட்டுள்ளது. எனவே சண்டையில் நூலகம் சேதமடைவில்லை. பின்பு மர்மமான முறையில் இராணுவத்தால் எரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஏன் நூலகம் அழிக்கப்பட்டது?

யாழ்ப்பாண நூலகம் மொத்தமாக அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்களுடன் சேர்த்து எரியூட்டப்பட்டது. சீக்கியரின் நூலகமோ அங்கிருந்த நூல்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு எரிக்கப்பட்டது. நூலகத்திலிருந்த நூல்கள் பல நூற்றுக் கணக்கான பெரிய மூட்டைகளில் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த மூட்டைகள் இலக்கமிடப்பட்டவையாக (numbered) இருந்தன. இவையனைத்தும் பல  இராணுவ வாகனங்களில் ஒரு இரகசிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்பு நூலகக் கட்டிடம் எரியூட்டப்பட்டது. இது  மைசூர் புலி திப்பு சுல்தானின் நூலகத்தை வெள்ளையர்கள கொள்ளையடித்த செயலுக்கு ஒப்பானது.  

அவை ஏன் எடுத்துச் செல்லப்பட்டன எனபது குறித்துத் தெளிவான செய்திகள் இல்லை.அவை இந்திராவால் பிந்தரன்வாலேவுக்கு எழுதிய முக்கியமான கடிதங்களை கைப்பற்றும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அந்தக் கடிதங்கள் கைப்பற்றப் படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் 2 விழுக்காடுகள் சீக்கியரிடம் திருப்பியளிக்கப்பட்டன. தற்போது கைப்பற்றப்பட்ட பல பொருட்களும், ஆவணங்களும், கோப்புக்களும் நடுவண் புலனாய்வுத் துறையினரிடம் உள்ளன. இந்தத் தகவல்கள் நடுவண் புலனாய்வுத் துறையில், நீலவிண்மீன் நடவடிக்கையில் இருந்த   ஒருவரால் வெளியிடப்பட்டது. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1984: டெல்லியில் சீக்கியர் மீதான கலவரத்தைத் தூண்டிய அமிதாப் பச்சன்


சீக்கியர் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் மொத்தம் 200 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் 177 காங்கிரஸ் கொலைகாரர்களும் , 17 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம். இதுவன்றி குற்றம் சாட்டப்பட்ட பெரும்புள்ளி நடிகர் அமிதாப் பச்சன். முதன் முதலில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை மக்களிடம் தூண்டியவர் அமிதாப் பச்சன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சீக்கியர்கள். 
                                            
அமிதாப்பின் மீதான குற்றச்சாட்டுக்கள்

    

  சீக்கிய இனப்படுகொலைக்கு முன்பு அமிதாப் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அதில் சீக்கியர்களைக் கொல்லுமாறு மக்களைத் தூண்டினார்.

 "சீக்கியர்கள் இந்திராகாந்தியை மட்டும் கொல்லவில்லை, அவர்கள் இந்த தேசத்தின் தாயையே கொன்றுவிட்டார்கள்" என்றார்.

  "இந்திரா சிந்திய குருதியை கொலைகாரர்களும்(சீக்கியர்கள்)  சிந்த வேண்டும்" என்கிற பாணியில் "இரத்தத்திற்கு பதில் இரத்தம்" என்று முழங்கினார் அமிதாப்.

(Khoon ke chheente Indira ko marne walon ke gharon tak pahunchne chahiye (The bloodstains must reach the houses of those who killed Indira))



இந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அகில இந்திய மருத்துவ கழகத்தில்(AIIMS), அமிதாப்பும் இராஜீவும் இருந்தனர். அப்போது தூர்தர்ஷனின் நிருபர்களும் இருந்தனர். அப்போதுதான் இந்த அமிதாப் கலவரத்தைத் தூண்டும் வகையில் கூடியிருந்த மக்களை நோக்கி "சர்தார்கள் தேசத்துரோகிகள்" என்றும் "இரத்ததிற்குப் பதில் இரத்தம்" (Blood for blood)  என்கிற தொனியில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு மக்கள் கூட்டத்துடன் சில தொலைவு நடந்தார். இவரது ஆவேசப் பேச்சு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. வட இந்தியா முழுவதும் சீக்கியருக்கு எதிராக இந்துக்களை கலவரத்தில் ஈடுபடுத்த இது ஒரு தூண்டுதலாக இருந்தது. 

இராஜீவ் - அமிதாப் நட்பு

இவர்களின் நட்பு மிகவும் புகழ் வாய்ந்தது. இராஜீவும் அமிதாப்பும் தோஸ்தி நெ.1 என்று அழைக்கப்படுமளவிற்கு நண்பர்களாக இருந்தனர். பச்சன் காந்தி குடும்பத்தின் நட்பு உலகறிந்தது. இரண்டு குடும்பங்களுமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லிக்குக் குடிபெயர்ந்த பின்னும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அமிதாப்பும் இராஜீவும் பால்ய காலத்தில்  ஒன்றாக ஊர்சுற்றியது, நீச்சலடித்ததையும் குறிப்பிட்டுள்ளார் அமிதாப். மேலும் 1968 - ல் சோனியா அன்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) இந்தியா வந்த போது திருமணத்திற்கு முன் ராஜீவின் இல்லத்தில் தங்கக் கூடாது என்பதால் அமிதாப்பின் வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டார். அமிதாப்பின் தாயார் தேஜி பச்சன் அவருக்கு தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். 

மேலும் முதன் முதலில் அமிதாப் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் இராஜீவ்தான். இந்திராவின் படுகொலைக்குப் பின்னர் இராஜீவ் வற்புறுத்தலினால்  தேர்தலில் நின்றார் அமிதாப். அலகாபாத் தொகுதியில் பஹூகுனா என்ற செல்வாக்குள்ள ஒருவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட அமிதாப் 62% வாக்குகளுடன் மிகப்பெரும் வெற்றி பெற்றார். இருப்பினும் மூன்று வருடங்கள் மட்டுமே அரசியலில் இருந்த அமிதாப் ஃபோபர்ஸ் குற்றச்சாட்டின் காரணமாக அரசியலிலிருந்து விலகினார். இராஜீவின் படுகொலைக்குப் பின்னர் இரு குடும்பத்திற்குமிடையிலான் நட்பு உடைந்தது. 2007 இல் அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனின் இறந்த போது, இறுதிச் சடங்கில் கூட சோனியா கலந்து கொள்ளவில்லை.

அமிதாப்பின் புகழைப் பயன்படுத்திக்கொண்ட இராஜீவ்

1980 களில் அமிதாப் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்பது  நாம் அறிந்ததே. எல்லாக் காலத்திலும் திரைப்படங்களில் நாயகர்களுக்குப் புகழைத் தரும் பாத்திரமான "கோபக்கார இளைஞன்" வேடத்தில் நடித்துப் செல்வாக்குப் பெற்றவராக இருந்தவர் அமிதாப். சீக்கியர் மீதான வெறியைத் தூண்டும் இவரது ஆவேசப் பேச்சுக்கள் ஹிந்துக்களிடம் கலவரத்தைத் தூண்டியதில் மற்ற கொலைகாரர்களைக் காட்டிலும் பெரும் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர் சீக்கியர்கள். அதுவும் தூர்தர்ஷன் இவரது உரையை நேரடியாக ஒளிபரப்பியது மிகவும் கீழ்த்தரமானது.  இவராகப் பேசினாரா அல்லது இராஜீவின் தூண்டுதலினால் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகர் அரசுத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் உரை நிகழ்த்துவதை என்னவென்பது?

இதுவரையிலும் அமிதாப்பச்சனுக்கு எதிரான  வழக்குகள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.  அமிதாப்பும் இதுவரையில் தனது நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கவில்லை. இதை எதிர்த்து அமிதாப்பின் வலைப்பூவிலும் பின்னூட்டமிட்டவர் அஜ்மீர் சிங் ரந்தாவா என்பவர். அவரது வலைப்பூவில்  இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். 

அமிதாப்பின் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டமும் அவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலும் 










அமிதாப்பச்சனின் அம்மா சீக்கியரா?

படுகொலையின் காரணங்களுக்குப் பதில் சொல்லும்போதெல்லாம் அமிதாப்பச்சனும், ஜக்தீஷ் டைட்லரும் தாம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அது உண்மையா? ஜக்தீஷ் டைட்டல் சீக்கியராக பிறந்தவர்தான் எனினும் கிறித்தவராக மாறிவிட்டாரென்றும் கூறுகின்றனர். அமிதாப்பச்சனின் அம்மா தேஜி சீக்கியர்தான். ஆனால் அவர் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இந்து ஒருவரைத் திருமணம் செய்து (இந்துவாக) மதம் மாறியவர்தான். மேலும் அவரது தந்தையாரும், தாத்தாவும் சீக்கிய மதத்துக்கு எதிரானவர்கள் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர். அவரது முப்பாட்டனார் தேஜிபச்சனின் தாத்தா சர் கெம் சிங் பேடி சீக்கியர்களை இந்து மத்திற்குள் உள்வாங்கும் இந்துத்துவாக்களுக்கு துணை நின்றவர். அவரது இரண்டு மகன்களும் இதே போன்று செயல்பட்டவர்கள். சீக்கியர்களின் புனித நூலை ஐந்தாவது வேதம் என்றும் சீக்கியர்கள் இந்துக்களே என்றும் கூறவும்  பரப்புரை செய்யவும் உதவியவர்கள். இந்தப் பரம்பரையில் வந்த அமிதாப் இயல்பாகவே சீக்கிய வெறுப்பில் வளர்க்கப்பட்டவர் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர்.                        
                                                                                                                                        (தொடரும்)
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சீக்கியர்கள், இராஜீவ்காந்தி, காங்கிரஸ் மற்றும் இந்துப் பயங்கரவாதம்


இந்திய அரசால் (காங்கிரஸ்) இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் சிறுபான்மையினர் மீதான கலவரங்கள் விடுதலை பெற்ற 63 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர், ஈழத்தமிழர்கள் ஆகியோர் இதற்கு இரையானவர்கள் என்று சொல்லலாம் . இதில் சீக்கியர்களும் தப்பவில்லை. பயங்கரவாதம், பிரிவினைவாதம், அந்நியர்களின் சதி, தேசிய ஒருமைப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பிராந்திய மேலாதிக்கம், நக்ஸல் பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் போன்ற காரணங்களுக்காக இவை நியாயப்படுத்தப் படுகின்றன. இந்த வகையில் ஒன்றுதான் சீக்கியர் மீதான கலவரம். தன்னுடைய தேர்தல் நலன்களுக்காக மதவாதத்தைத் தூண்ட காங்கிரஸ் தயங்கியதே இல்லை. காங்கிரசின் இந்துமதப் பயங்கரவாதத்தின் ஒரு உதாரணம்தான் 1984 - ல் நடைபெற்ற சீக்கியர் மீதான படுகொலைகள். பாஜக ஆதரவாளர்கள் காங்கிரசை என்னமோ பயங்கரவாதம், அருந்ததிராயைக் கைது செய்யாமல் இருப்பது, நக்சலைட்டுகளுடனான் போர், பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை, சீன ஆக்ரமிப்பு போன்ற விவகாரங்களில் ரொம்பவும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அலட்டிக் கொள்வார்கள். ஆனால் பாஜகவை விட காங்கிரஸ் பலவிதங்களில் முன்னோடியாகவும், கொடூரமாகவும்  இருக்கிறது. நரேந்திரமோடிக்கு முன்னோடியே இராஜீவ் காந்திதான் என்பதற்கு  சீக்கியர்படுகொலை ஒரு எடுத்துக்காட்டு.

1984 - ல் சீக்கியர் இனப்படுகொலை முடிந்து 26 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்றுவரையில் அதன் முக்கியக் குற்றவாளிகள்(சஜ்ஜன் குமார், ஜெக்தீஷ் டைட்லர், ஹெச்.கே.எல். பகத், கமல்நாத் போன்ற) எவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்காது. காங்கிரஸ் கொலைகாரகள் தமது ஊடக செல்வாக்கையும், அடியாள்களையும் பயன்படுத்தி சீக்கியர் மீதான இனப்படுகொலையை சீரும் சிறப்புமாக செய்து முடித்தனர். இந்த சீக்கியர் மீதான கொலையை கலவரம் என்று சொல்வதே தவறானது. கலவரம் என்பது இரண்டு குழுவினர் மோதிக்கொள்வது, இங்கே கொல்லப்பட்டவர்கள் சீக்கியர்கள் மட்டுமே என்பதால் இதைக் கலவரம் என்றே சொல்ல முடியாது . இதே விதிதான்  மும்பை, குஜராத் போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இது எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்த்தாலே விளங்கிவிடும் இது கலவரமா இனப்படுகொலையா என்று. 

அக்டோபர் 31 1984 இல் இந்திரா காந்தி கொல்லப்படுகிறார். அதே நாள் இராஜீவ் பிரதமராகிறார். அன்றைய நாளில் சில இடங்களில் சீக்கியர் மீதான தாக்குதல் நடைபெறுகிறது, இருப்பினும் இரவுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. சீக்கியர்கள் நிம்மதியடைகிறார்கள். அன்றைய நாளின் பின்னிரவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நவம்பர் 1,2, மற்றும் 3 ம் தேதிகளில் நடந்த வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்படனர். அவர்கள் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டனர். பெண்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

                                          

இது மிகத்தெளிவாக திட்டமிடப்பட்ட  இனப்படுகொலை என்பதற்கு சாட்சியாக 


டெல்லியில் பாலம்(palam) விமான நிலையத்தில் வந்திறங்கிய இராஜீவ், இந்திரா கொலையான செய்தியைக் கேட்டதும் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். "என் அம்மா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? போய்ப் பழி வாங்குங்கள். ஒரு தலைப்பாகையும்(Turban) இங்கே இருக்கக் கூடாது. (No turban should be seen)

அக்டோபர் தேதி டெல்லியிலிருந்த சீக்கிய காவலர்களுக்கு  விடுப்பு அளிக்கப்பட்டு , அவர்களின் ஆயுதங்கள் பெறப்பட்டு,இராணுவக்  குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு சீக்கியர் தனது இந்து நண்பரின் வீட்டில் மறைந்து கொள்கிறார். அவரைத்தேடி வந்த கும்பல் அந்த வீட்டுக்காரரிடம் கேட்க, அவர் ஏற்கெனவே கொல்லப்பட்ட அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று பதிலளிக்கிறார். நம்பாத அந்தக கும்பல் தம்மிடமுள்ள வாக்காளர் பட்டியலைக் காட்டி அதில் இன்னும்  அவரது பெயர் குறிக்கப்படவில்லை எனவே அவர் இன்னும் கொல்லப்படவில்லை என்றது.

மேலும் கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே வாகனங்களில் வந்த நபர்களால், மண்ணெண்ணெய் போன்ற எரிப்பதற்குப்  பயன்படுத்தும் பொருட்கள்  கலவர கும்பலுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாரத்தது, சீக்கியர் தற்காபபுக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் கொலை வெறியாட்டத்தில் பங்குபெறும் காலாட்படையாக செயல்பட விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். 

கலவரம் நடந்த இடம் இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில், மூன்று நாட்களாகக் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இராணுவத்தைக் கொண்டு சில மணிகளிலேயே கட்டுப்ப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இராணுவமும் ஈடுபடுத்தப்படவில்லை. அதே நேரம் டெல்லி கலவரத்தின் எதிர்வினையாக பஞ்சாப்பில் சீக்கியர்கள் இந்துக்களின் மீது வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தினால் பஞ்சாப்பிற்கு அனுப்பவதற்கும் ஆயத்தமாக இருந்தது அரசு. ஆனால் பஞ்சாப்பில் எதிர்ப்பார்த்தபடி  கலவரம் ஏற்படவில்லை.

கலவரமானது டெல்லியிலிருந்து வட இந்திய மாநிலங்களுக்கும் பரப்பபட்டது. அரசு எந்திரமே இந்தப்படுகொலைக்கு உதவியது என்பதற்குச் சான்றாக டெல்லியின் மாநகர அரசுப் பேருந்துகள் கொலைக் கும்பலை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டன.

அன்றைய ஊடகங்களான தூர்தர்ஷனும், அனைத்திந்தியா வானொலியும் "பிரதமர் இந்திராகாந்தி தனது "சீக்கிய" மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்" என்று தொடர்ந்து ஒலிபரப்பின.

சீக்கிய எதிர்ப்பு மனநிலை

அந்நாள்களில் தற்போது காஷ்மீரிகள் மீது இந்தியர்களின் மனப்பான்மை  எப்படி இருக்கிறதோ  அதே போல் சீக்கியர்கள் மீது இருந்தது. இந்திரா காந்தியால் அகாலிதள் கட்சிக்கு எதிராக வளர்க்கப்பட்ட காலிஸ்தானிகள் தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களால் பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீக்கியர்கள் இந்தியாவை வெறுப்பவர்கள் என்ற கருத்தும் பொதுவாக நிலவியது. இது போன்ற ஒரு காலகட்டத்தில் சீக்கியர்களின் புனித பொற்கோயிலில் நீல விண்மீன் நடவடிக்கையின் (Operation Blue Star)  வாயிலாக காலிஸ்தானிகளின் தலைவர் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். சீக்கியரின் பொற்கோயிலுக்குள்  இந்திராவினால் இந்திய இராணுவம் நுழைந்ததை சீக்கியர்கள் தமது சமூகத்தின் மீதான அவமானமாகக் கருதினர். இந்துக்கள் சீக்கியரிடையே வெறுப்புணர்வும் இருந்தது.  இதற்குப் பின்னர்தான் தனது மெய்க்காப்பாளர்களால் இந்திரா கொல்லப்பட்டார்.

இதைப் பின்புலமாகக் கொண்டே இந்த வன்முறைக்கு சீக்கியர்மீதான கொலைவெறி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திராவின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியரின் படுகொலை குறித்து  இராஜீவ் தனது புகழ்பெற்ற கருத்தான "பெரிய மரம் சாய்கையில் தரை பலமாக அதிர்வது இயற்கைதான்" என்பதை வெளியிட்டார்.

இந்த சீக்கிய எதிர்ப்பு மனநிலையே பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை  சீக்கியர்  படுகொலைக்குப் பின்பு நடந்த தேர்தலில் பேராயக்கட்சிக்கு பெற்றுத் தந்தது.

இந்துத்துவாக்களின் ஆதரவு 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து வீசிய அனுதாப அலையில் இந்துத்துவ  இயக்கங்களும்   இராஜீவ் காந்திக்கு ஆதரவாக இறங்கின. இராஜீவ் தேசிய ஒருமைப்பாடு சீக்கிய பயங்கரவாதம் ஆகியவற்றைப் பேசி வாக்குகளை வாங்கினார். முதன் முதலாக இராஜீவ் காந்திதான் பாபர் மசூதியின் கதவை இந்துக்களுக்காகத் திறந்துவிட்டு கலவரம் ஏறபடக் காரணமானவர் எனபதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  தற்போதைய் பாஜக வின் செயல்களெல்லாம் அன்றைய பேராயக் கட்சியிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். 1986 லிருந்தே இந்துத்துவாக்கள் ராஜீவின் பேராயக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.

                                     


1984 தேர்தலில் காங்கிரஸ்  வரலாறு காணாத வெற்றி பெற்றது. மொத்தம் 80% இடங்க்ளைப் பெற்றது. காரணம் இந்திரா காந்தி கொலை தோற்றுவித்த அனுதாப அலை,  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து, சீக்கிய தீவிரவாதம்  உடபட இந்துக்களைத் தூண்டி விடும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. RSS அமைப்பு பேராயக்கட்சிக்கு முழு ஆதரவளித்தது. அன்றைய RSS இயக்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் ராஜீவ் காந்தியை ஆதரித்ததற்கு சாட்சியாக எழுதியவை

 "சீக்கியர் மீதான இந்துக்களின் உண்மையான உணர்ச்சியை 1984 - இன் சீக்கியர்க்கெதிரான கலவரங்கள் காட்டுகின்றன." எல்லா சீக்கியர்களுமே இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டதை ஆதரிக்கும்போது, அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலகளையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்" .

RSS கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒருவன் மகாத்மா காந்தியைக் கொன்றபோது RSS காரர்கள் தாக்கப்படுகிறார்கள். அதற்குக் கொலைகாரனுக்கும் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றவர்களின் தலைவர் , இரண்டு சீக்கிய மெய்க்காவலர்கள் கொன்றதற்கான பாவத்தை மொத்த சீக்கியரும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்.

நானாஜி தேஷ்முக் சீக்கியர்களை தம்மை, இந்துக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதையும் கடிந்து கொள்கிறார்.

மேலும் பஞ்சாப்பில் நிகழ்ந்த வன்முறைக்கு சீக்கியரைக் குற்றம் சொல்கிறார், இந்திய ராணுவத்தின் பொற்கோயில நுழைவையும் நியாயப்படுத்தினார்.

குஜராத் படுகொலையப் பற்றிக் காங்கிரஸ்காரர்கள்  பேசும்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸ் கொலைகாரர்களின்  சீக்கியருக்கெதிரான கலவரத்தைப்  பேசி பதிலடி கொடுப்பார்கள்.டெல்லியின் கலவரத்தின்போது சீக்கியர்களை காங்கிரஸ் கொலைகாரர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களின் லட்சணம். கிறித்தவமும், இசுலாமும் வெளிநாட்டு மதமென்பதால் எதிர்க்கிறோம் என்று கூறியவர்கள், உள்நாட்டு மதத்தவரான  சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அவர்களின் அரசியல் நிலைப்பாடு இதுதான். 

                                                                                                                                             ( தொடரும் )
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள்


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு நாள். இந்த நாள் மிராபல் சகோதரிகள் என்ற மூன்று  பெண்களின்   நினைவாக உலகமெங்கும் நினைவு கூரப்படுகிறது. அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்  ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal), அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal). இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து ) அந்த நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இம்மூவரும் படுகொலை செய்யப்பட்ட நாள் நவம்பர் 25, 1960. அவர்களின் மறைவிற்கு 20 ஆண்டுகளிற்குப் பின்பிலிருந்து அதாவது 1980 ம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 - என்பதை பாலியல் வன்முறைக்கெதிரான நாளாகவும், அவர்களின் படுகொலையை நினைவு கூரவும் ஒரு அடையாளமாக முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையிலான 16 நாள்கள் "பால்நிலை வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வு" (Days of Activism Against Gender Violence) ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 16 நாள்கள் நவம்பர் 25 thethi  பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women), நவம்பர் 29 உலக பெண்கள் மனித உரிமை காப்பாளர் நாள் (International Women Human Rights Defenders Day), டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாள், டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் நாள் என்று முடியும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

                                            


சர்வாதிகாரி ட்ரூஜில்லோ 

சர்வாதிகாரிகளை வரலாற்றிற்கு அள்ளி வழங்கிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசில் 26 ஆண்டுகள் ஆண்டவர்தான் ரஃபேல் லியோனிடாஸ் ட்ரூஜில்லோ மோலினா (Rafael Leonidas Trujillo Molina). இவர் 1930 - 1938 வரையிலும், பின்பு 1942 - 1961 வரையிலும் நாட்டை ஆண்டார். இவர் மூன்று திருமணங்கள் செய்தார். பல இளம்பெண்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். தம்முடன் இணங்காத இளம்பெண்களை அவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றும் பெண்பித்தனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தார். இவர் மீது பாலியல்வன்முறைக் குற்றச்சாட்டுக்களுமுண்டு. அண்டை நாடான ஹெய்தியின் எல்லையிலிருந்த கறுப்பர்கள் பல 10000 பேர்களைக் கத்திகளால் வெட்டிக் கொலை செய்தனர் இவரது படையினர். இறுதியாக 1961 - ல் CIA - ஆல் கொல்லப்பட்டார். நாட்டின் தலைநகருக்குத் தனது பெயரைச் சூட்டினார். தனக்குத்தானே பல பட்டங்களையும், விருதுகளையும் ( உதாரணமாக "நாட்டின் மிகச் சிறந்த வள்ளல்"(Great benefactor of the nation) , "புதிய டொமினிக்கின் தந்தை"(Father of the new Dominion)) கொடுத்துக் கொண்டார். மிராபெல் சகோதரிகளைப் பற்றிய ஒரு புதினம் "வண்ணத்துப்பூச்சிகளின் காலத்தில்" (In the time of the Butterflies). அதில் ட்ரூஜில்லோ தனது படத்தையும் யேசுவின் படத்தையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருப்பார் அதன் ஆசிரியரான ஜூலியா அல்வரேஸ்
                                          
                                                      

மிராபல் சகோதரிகள்

மிராபலின் சகோதரிகளின் தந்தை வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார். அவர்கள் நால்வருக்குமே திருமணமாகியிருந்தது. ட்ருஜில்லோ அதிபரானதும் நாட்டின் வளங்களைக் கையகப்படுத்தினார். இதனால் மிராபல் குடும்பத்தின் பெரும்பாலான உடைமகள் பறிக்கப்பட்டன. நான்கு சகோதரிகளில் ஒருவரான மினர்வா மட்டும் ட்ரூஜில்லோவின் அரசினைக் கவிழ்ப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். அவர் சட்டம் படித்து வழக்கறிஞரானவர். இருப்பினும் அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற உரிமம் வழங்கப்படவில்லை. காரணம் ட்ருஜில்லோவின் வழக்கமான "காதலை" அவர் நிராகரித்துவிட்டார்.அதனால் அவருக்கு உரிமம் வழங்காமல் இருக்குமாறு உத்தரவிட்டார் ட்ரூஜில்லோ.

 பின்பு ட்ருஜில்லோவிற்கு எதிராக மிராபல் சகோதரிகள், அவர்களது கணவர்கள் இணைந்து தலைமறைவு இயக்கத்தை தோற்றுவித்தனர். அதன் பெயர் ஜூன்14 இயக்கம். இந்த இயக்கம் உருவாக முன்னோடியாக இருந்தது டொமினிக் விடுதலை இயக்கமாகும்(Dominican Liberation Movement).  இது ஃபிடல் காஸ்ட்ரோவின் உதவியுடன் ட்ரூஜில்லோவின் அரசை தூக்கியெறியும் புரட்சியில் ஈடுபட்டது. அது தோல்வியில் முடிந்தாலும் பலரை ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கத்தில் இணைவதற்கு வழிசெய்தது. மிராபல் சகோதரிகள் இயக்கத்திற்குள் "வண்ணத்துப்பூச்சிகள்" என்ற அடைமொழியுடன் அறியப்பட்டனர். அதுவே பிற்காலத்திலும் அடையாளமாயிற்று. இருப்பினும் மிக விரைவாகவே இயக்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மிராபல் சகோதரிகளும், அவர்களது கணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது கைதை கத்தோலிக்கத் திருச்சபையும் கண்டித்தது. சிறையில் அடைக்கப்பட்ட மிராபல் சகோதரிகள் பலமுறை சித்ரவதைகளுக்கும், வன்கலவிக்கும் ஆளாக்கப்பட்டனர். 

படுகொலை

இவ்வாறு பலமுறை சிறையிலடைக்கப்பட்டும் அவர்கள் ட்ரூஜிலோவிற்கு எதிராக  தீவிரமாக இருந்தனர். அவர்கள் உடைமைகளனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவர்களது செல்வாக்கு அதிகமாக இருந்தது. 1960 நவம்பர் 25 - ல் கனமழையுடன் கூடிய இரவில் ஒரு வாகனத்தில் சிறையிலிருந்த தமது கணவன்மாரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் மறிக்கப்பட்டு, அருகிலிருந்த கரும்புத்தோட்டத்திற்குள் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர், அவர்களது வாகன ஓட்டுனரும் கொல்லப்பட்டார். அவர்களது உடல்கள் அவர்கள் வந்த வாகனத்தில் (Jeep) வைத்து மலைமுகட்டிலிருந்து தள்ளிவிடப்பட்டு, மோசமான மழையினால் வாகன விபத்து ஏற்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டது. இது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ட்ரூஜில்லோவால் செய்யப்பட்டது என்றே நம்பப்படுகிறது. 

இரண்டாவது சகோதரியான பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் மட்டும் இந்த இயக்கத்தில் ஈடுபடாததால் இன்னும் உயிருடன் இருக்கிறார். மிராபல் சகோதரிகள் தமது கலகத்திற்காக டொமினிக் குடியரசின் தேசிய நாயகிகளாகப் போற்றப்படுகின்றனர். உலக அளவில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் சின்னமாகவும் "மறக்கமுடியாத வண்ணத்துப்பூச்சிகள்(Unforgettable Butterflies)" என்று  முன்னிறுத்தப்படுகின்றனர்.

தகவல்களுக்கு நன்றி  : விக்கிபீடியா 


எழுதத் தூண்டிய பதிவுகள்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Womenபெண்களுக்கு y


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பெண்ணை ஏன் அப்படிப்பார்க்க வேண்டும் ?


பல நாட்களாகவே உறுத்திக் கொண்டே இருக்கும் ஒரு சிலவற்றில் இதுவும் ஒன்று. மிகச்சிலரைத் தவிர்த்து இதுநாள்வரையிலும் என்னுடன் பழகிய பல நண்பர்களும் என்னால் ஏற்க முடியாத கருத்துக்களையே கொண்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் சரியாகத்தான் சிந்திக்கிறார்களோ, நான்தான் அடிப்படையில் கோளாறாக சிந்திக்கிறேனா, இல்லை சேலம் சித்தவைத்தியரைப் பார்க்கவேண்டுமோ என்ற ஐயமும் சிலமுறை வரும். ஒரு பெண் என்பவள் வெறும் காட்சிப்பொருளாகவே பார்க்கப்படுகிறாள் என்பது எனது வேதனை. நான் உடன் பிறந்த, பிறவாத சகோதரிகளைக் கொண்டிருப்பதாலும், பல பெண் நண்பர்களைக்கொண்டிருந்ததாலும் அவர்களது இயல்புகளையும், உணர்வுகளையும் அறிந்தவன் என்ற முறையில் இது போன்ற செயல்கள் எனக்கு அதிகமாகக் கவலையளிக்கின்றன. பெண்ணை ஒரு வெறும் போகப்பொருளாகவும், துய்க்கப்பவேண்டியவளாகவும் உணர்வுள்ள ஒரு சக மனித உயிராக மதிக்கப்படாமல் பாலியல் பண்டமாகப் பார்க்கப்படவேண்டுமென்பதும் ஆண்களின் நாடி நரம்பெங்கும் ஊட்டப்பட்டுள்ளது.பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஆளாவதற்கு இவைகளே தூண்டுகோல். ஒரு ஆணின் மனம் தனக்கு சம்பந்தமில்லாத பெண்ணை எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்பது இயல்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சியாக இருக்கிறது பெணணுக்கு வைத்திருக்கும் புனைப் பெயர்களான ஃபிகர், கலர், பீஸ், கட்டை, குஜிலி, குட்டி,  ஜிகிடி, ஐட்டம், ஆன்ட்டி, மேட்டர், பட்சி  இன்னும் பலவும். இதில் ஃபிகர் என்பது ஓரளவு பெண்களிடமும் புழங்குகிறது. இந்தப் பெயர்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட பெண்ணைக் குறிப்பிடப் பயன்படுத்துவதில்லை. தனக்கொரு நியாயம் ஊரானுக்கொரு நியாயம். இதை எனதருமை நண்பர்களிடம் எனக்கேற்பட்ட அனுபவங்களின் மூலம் கூறுகிறேன். 

நிகழ்வு 1

ஒரு முறை ஒரு நண்பனிடம் புகைப்படங்களைக்காட்டிக் கொண்டிருந்தேன். அதில் சில பெண்களின் புகைப்படமும் இருந்தது. ஒரு புகைப்படத்தைப்பார்த்து புன்னகையுடன் கேட்டான். 

"டேய்! இந்த ஃபிகர் சூப்பரா இருக்குது. யார்ரா இது?"

"என்னோட தங்கச்சி"

என்று நான் சொன்னதும் அவனுக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. நான் கோபப்பட்டுவிடுவேன் என்று அஞ்சிவிட்டான். இந்த மாதிரி பேசினால்  எனது எதிர்வினை நெளிவது மட்டும்தான். எப்போதும் போல நெளிந்தேன், அவ்வளவுதான். அவனுக்கு எந்தப்பெண்ணைப்பாத்தாலும் இது போல வர்ணிப்பதும், வரையறுப்பதும் வழமையாக இருந்ததால் எனக்கு எதுவும் அதிர்ச்சியில்லை, கோபமுமில்லை.என்னைச் சார்ந்தவர்களுக்காக தனிப்பட்ட முறையில் பொங்கவும் மாட்டேன். அது நேர்மையுமல்ல. 


இது போன்று பெண்களை விளிப்பதை நான் விரும்புவதில்லை. யாரைச் சொன்னாலும் ஒரே சங்கட உணர்வுதான் எனக்கு ஏற்படும். இங்கு என்னிடம் அறிமுகமான அல்லது வேண்டிய ஒரு பெண்ணை அவ்வாறு கூறிவிட்டதால் எனக்கு ஒரு சலனமுமில்லை. ஆனால் அவனுக்கு மட்டும் ஏன் குற்ற உணர்ச்சி வரவேண்டும் என்பது கேள்வி

"சாரிடா, உன்னோட தங்கச்சி எனக்கும் தங்கச்சி, எதுவும் மனசில் வச்சுக்காத"   என்றான். 

நிகழ்வு 2

இன்னொரு நண்பன் தான் "பல்ப்" வாங்கிய கதையொன்றைச் சொன்னான். மேலே சொன்னது போலத்தான். 

"மச்சி ஒரு நாள் ஊர்ல பசங்கெல்லாம் திருவிழாவுக்கு போயிருந்தோம். அப்ப ஒரு பொண்ணு வந்துச்சு. ஃப்ரண்ட கூப்பிட்டு,மச்சா  அங்க பார்ரா அந்த ஆன்ட்டி செமையா இருக்குதுன்னு சொன்னேன். அவன் பார்த்துட்டு அவுங்க என் அண்ணிடா அப்படின்னு சொன்னாம் பாரு, எனக்கு அப்படியே ஒரு மாதிரியாய்டுச்சு. சாரிடா சாரிடா அப்படின்னு நெறையா தடவ சொன்னேன்".

இது போல் பலபேர் பேசிவிட்டு சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு நல்லபுள்ளயா அசடு வழிவதையும் பார்த்திருப்போம்

நிகழ்வு 3

ஒரு வட மாநில நண்பன். அவனுக்கு ஒரு காதலி வேற அவங்க ஊர்ல இருந்தாங்க. அவங்க பெயர் X. இங்க வஞசனையில்லாமல் எந்தவொரு பெண்ணையும் ஏற இறஙகப் பார்க்கிற மாதிரியான வேலையெல்லாம் ரொம்ப ஆர்வமா செய்வான். அது பிரச்சனையில்லை. கல்லூரியில் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து இவருக்கு காதல் வந்துவிட்டது. அந்தப் பெண்ணிடம் பேச முடியாம ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். சில மாதங்கள் சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்தவன், பின்பு மறந்துவிட்டான். இது போல் ஊரில் காதலியை வைத்துக்கொண்டு வந்த இடத்தில் நட்புக்கும் காதலுக்கும் நடுவில் ஒரு உறவைப்பேணுவதற்காக பெண்களைத் தேடும் ரோமியோக்கள் பலரையும் சந்த்தித்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். இது பற்றி ஒரு முறை அவனிடம் கேட்டேன் .

"X இருக்கும் போது நீ இன்னொரு பெண்ணை நினைச்சது சரியா?, இது மாதிரி X செய்தால் ஒத்துக்குவியா?. 

"I don't know machi. I just wanted to speak with her and make her as my friend." என்றான்.

ஒருமுறை அவன் X  ஏதோ ஒரு விழாவிற்காக கல்லூரிக்கு வந்திருந்தான். அப்போது வகுப்புகள் ஏதும் நடைபெறாது கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே சொல்லாமல் இருவரும் போய்விட்டனர். அவர்களைக் காணாமல் நண்பனொருவனிடம் கேட்டபோது, 

"எங்க போனாலும் எல்லாப் பசங்களும் X-யே பாத்தானுங்க,  காண்டாயி சீக்கிரமே திரும்பிப் போய்ட்டான்டா" 

என்று கூறினான். ஓரு முறை X உடன் ஜோடியாக இரயிலில்(தாம்பரம் - கடற்கரை) போயிருக்கிறான். இவர்களைப் பார்த்த பன்னாடை ஒருவன் X - க்காட்டி இவனிடம் "சூப்பரா இருக்கு" என்பதாக சைகை காட்டியிருக்கிறான். இதனால் என்னிடம் வந்து தமிழ்நாட்டில் எவனுக்கும் கலாச்சாரமே இல்லை என்று புலம்பித்தள்ளிவிட்டான். 

பொதுவில் பெரும்பான்மையான ஆண்கள் தமது காதலியர் வேறொரு ஆடவனுடன் கொள்ளும் இயல்பான நட்பினைக் கூட விரும்பாத அளவில் இருக்கின்றனர். ஆனால் வேறொரு ஃபிகரை பொழுது பொக்குக்காக மடக்குவதை விரும்புகின்றனர்.

நிகழ்வு 4 

கல்லூரியில் வகுப்பில் ஒரு நண்பன், நண்பியுடன் பேசியது.

உனக்கு கூட பிறந்தவங்க எத்தன பேருடி?

ஒரு தங்கை மட்டுமதான்.

அழகா இருக்குமா? 

ம்

அப்ப நல்ல ஃபிகரா?  உன்ன மாதிரி இல்லயா?

ஆமாண்டா, சனியனே!

இங்கு இதே தோழி இருந்த இடத்தில் ஒரு தோழனை வைத்துக் கேட்பதற்கு ஒரு ஆணால் முடியுமா ? முடியாதெனில் அதற்குப் பெயரென்ன ? குறைந்த பட்சம் உன் ஆளு அல்லது தங்கை "அழகாக இருக்கிறாள்" என்று கண்ணியமான முறையில் சொல்வதையோ அல்லது சொன்னால் ஒத்துக் கொள்ளும் பக்குவமும் ஆண்களுக்கு இருக்கிறதா ? அதே இடத்தில் ஒரு பெண்ணாக இருக்கும்பட்சத்தில் உங்கக்காவையோ தங்கச்சியையோ கரெக்ட் பண்றேன் பார்டி ! என்று "நகைச்சுவையாக" பேசுமளவுக்கு இருக்கும் துணிச்சலுக்குக் காரணமென்ன ? 

இதையே பெண்கள் பேசும் போது "மச்சி உன் அண்ணன் ஸ்மார்ட்டா இருக்காண்டி" என்றோ "உன் ஆத்துக்காரர் செம ஹேண்ட்சம் ஐ ரியல்லி ரிக்ரெட்" என்றோ சொல்லும்போதும் அவர்களுக்குள் இயல்பாக எடுத்துக் கொள்வது போல் ஆண்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் ஆண்களுக்கே தெரியும் அவர்கள் பார்வை தவறானது என்று.  ஆண்களின் பார்வையானது தவறான உள்நோக்கம் கொண்டது, பாலியல் ரீதியிலானது, பாகுபாடானது, கோழைத்தனமானது, திருட்டுத்தனமானது சில நேரங்களில் வக்கிரமானது . சம்பந்தப்பட்ட நபர் இல்லாத போது வேண்டுமானால் இரகசியமாக மூன்றாம் நபரிடம் சொல்வார்கள் "அவனோட ஆளு (அல்லது wife) செம ஃபிகர்டா" என்று.

இது போன்று எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். நீளம் கருதி இதனுடன் நிறுத்திக் கொள்கிறேன். 

                               


ஆக இவைகளிலிருந்து என்ன புரிகிறது. தான் செய்தால் தவறில்லை என்பது அடுத்தவன் செய்தால் எப்படி தவறாகிறது. தனக்கு தெரியாத, வேண்டப்படாத எந்தப் பெண்ணையுமே ஜேம்ஸ்பாண்ட் பார்வையில் பார்ப்பதும், நமது பெண்கள் என்றால் தாலிபானாக மாறுவதும் என்ன நியாயம்? அவர்களுக்கிருப்பதும் அதே உணர்வுகள்தானே? ஏன் சாலையில் செல்லும் பெண்ணைப்பார்க்கும்போது ஏதோ செவ்வாய்கிரகத்திலிருந்து வந்த உயிரியைப் பார்ப்பது போல் பார்வையில் துகிலுரிய வேண்டும்?. இந்த விதி ஆண்களுக்கு மட்டும்தான், தோழியின் தங்கையென்றால் அவள் ஃபிகர். சில சமயம் அவளுடைய அக்காக்களும், அம்மாக்களும் "ஆன்ட்டி சூப்பர்". இதே தோழனின் தங்கையென்றால் அவள் சிஸ்டர். இதுதான் அவர்கள் நியாயம். ஆண்கள் மச்சான், மச்சி என்று தமக்குள் அழைத்துக் கொள்வதில் "உன்னுடைய ஆள்" (மட்டும்) எனக்கு சிஸ்டர் என்ற இரகசிய உடன்படிக்கையும் இருக்கிறது. ஏனைய பெண்கள் அனைவருக்குமான பொதுச்சொத்துக்கள்தான். அவர்களை எப்படி வேண்டுமானாலும் வர்ணித்துக் கொள்ளலாம். இதற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஊர், உலகமே அப்படித்தான் இருக்கிறது. 

பொதுவாக ஏதாவது ஒரு துன்பமான நிகழ்வு நடந்தால் அதற்கு என்னால் கோப்பபடவும், வேதனைப்படவும் மட்டுமே முடிகிறது. ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா? என்ற அதிர்ச்சி ஏற்படுவதில்லை  (சமீபத்தில் கோவையில் குழந்தைகள் கடத்திக்கொல்லப்பட்ட நிகழ்வு). காரணம் இந்த உலகத்தின் எதார்த்தமாக எந்தவொரு குற்றங்களும் ஏற்படுவதற்கு ஏற்ற சூழல் இங்கு ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சமூகத்தில் பாலியல் என்பது பொதுவான இயற்கைத் தேவை என்பதற்கு மாறாக, தவறானது, கூச்சப்படவேண்டியது என்ற போலித்தனமான ஒழுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய கூச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது. அதனால்தான் அதற்கு "தப்பு பண்றது" என்ற பெயரோ?. ஆனால் மறுபுறம் நமது பாலியல் உணர்வு எல்லாவகையிலும் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குழந்தைக்குப் பாலூட்டும் உறுப்பு பாலியல் உணர்வைத் தூண்டுவதற்கான உறுப்பாக மாற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையை செய்வதற்கு முன் ஒருவன்  பலநாட்களாக பல்வேறு வகையில் தூண்டப்படுகிறான். மஞ்சள் இதழ்களைப் படித்தல், நீலப்படங்கள் பார்த்தல் போன்றவைகளைத் தேடி, அதில் மேலும் மேலும் மிகையான சாத்தியமற்ற கற்பனைகளையும், வன்முறைகளை அவனது மனம் உள்வாங்கிக் கொள்கிறது. இதற்கான வடிகால் இல்லாத நிலையில் இது ஒருவகையான வெறுப்பாக மாறி ஏக்கத்தில் உழல வைக்கிறது. ஒரு பலவீனமான இரை மாட்டும்போது இந்த வெறுப்பே ஒருவகையில் பாலியல் வன்முறையாக வெளிப்பட்டுக் கொலையில் முடிகிறது. இதற்கு குற்றவாளி மட்டுமே காரணமல்ல.  இந்த தூண்டுதல்களை ஊடகங்கள் செவ்வனே செய்கின்றன.


                                                                  


சன்தொலைக்காட்சி (உதாரணம் நித்தி விவகாரத்தில்) முதலிடம் பிடிப்பதற்காக எந்தவொரு செயலைச் செய்யவும் தயங்காது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஒருமுறை சன் செய்திகளில் தவறான அறுவை சிகிச்சையால் 35 பேருக்கு பார்வை பறிபோனது என்பது ஒரு செய்தி. அதற்கு அடுத்து நடிகை ரம்பா எதற்காகவோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதை ரம்பா காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி என்ற தகவலால் பரபரப்பு என்ற தனக்கே உரிய பாணியில் கிசுகிசு செய்தியைச் சொன்னது. அந்த செய்தியில் நமக்கெல்லாம் ரம்பா எப்படியிருப்பார் எனத் தெரியாதல்லவா? அதனால் "அழகிய லைலா" பாடலில் பாவாடை பறக்கும் காட்சியைக் காட்டியது. 

அடுத்ததாக நாளிதழ்கள், வார இதழ்கள் அனைத்தும் கவர்ச்சிப்படங்கள் இல்லாமல் வருவதேயில்லை. குமுதத்தில் அரசு பதிலகளில் தூக்கத்தைப்பற்றிக் கேள்வி வந்தால் போதும், உடனே நமீதா தூங்கும் படத்தைப் போட்டுவிடுவார்கள். கோவிலைப்பற்றிய வரலாறு ஒரு பக்கத்தில் இருக்கும். அடுத்த பக்கம் மடோன்னாவின் உள்ளாடை ஏலம் போன செய்தியைப் போட்டு உள்ளாடையுடன் நிற்கும் மடோன்னாவை நாம் ரசிக்கலாம். நடிகைகளின் படம் போடாமல் இருக்கமுடியாதா என்றால், நடிகை படம் போடவில்லையென்றால் நீங்கள் வாங்கவே மாட்டீர்கள் என்று வாசகர்கள் மீதே பழி போடுவார்கள். நானும் 15 வருடங்களாகப்பார்க்கிறேன். ஒரு நடிகையின் படம் போடவேண்டுமென்றால் அது கவர்ச்சிப்படத்திற்கே முன்னுரிமை. கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு என்று கௌதமியிலிருந்து, ஸ்ருதி வரை ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் விளம்பரம் என்றால் இது போன்றுதான் இருக்கும் இரண்டு செய்திகள் எனில் பேருந்து மோதி 10 பேர் பலி, காதலனுடன் கவர்ச்சி நடிகை கும்மாளம் அவ்வளவுதான், செய்தி பரபரப்பாக அல்லது கிளுகிளுப்பாக இருக்க வேண்டும். தினத்தந்தியில் வரும் கற்பழிப்புச் செய்திகளைக் கிளுகிளுப்புக்காகப் படிப்பதை கண்டிருக்கிறீரா? நக்கீரன்தான் இது போன்ற செய்திகளின் மன்னன். பல விடயங்களை அம்பலப்படுத்துகிறது எனினும் அதன் விளம்பரங்கள் கீழ்த்தரமானவை. இளம்பெண்ணை சீரழித்த காமுகன் என்று செய்தியிருக்கும். அதற்கு முந்தானையில்லாமல் நிற்கும் பெண்ணின் படத்தைப் போட்டிருப்பார்கள். நாளிதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அழகிகள் கைது என்று செய்திகளை கிளுகிளுப்பாக வெளியிடுவது, யோக்கியன் என்று காட்ட பொது இடங்களில் காதலர்கள் அத்துமீறல் - ஆபாசக்கூத்து என்று செய்தியை வெளியிட்டு லாவணி பாடுவார்கள். இந்தியா டுடே  ஆண்கள் பெண்ணுடலின் எந்தபாகத்தை அதிகம் ரசிக்கிறார்கள், முகமா, கழுத்தா, இடுப்பா, அல்குலா, காலழகா, பின்னழகா, முன்னழகா என்பது போன்ற சமூகத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புகள், அறிக்கைகளை வெளியிடும். மேலும் கணவன்/மனைவி மற்றவர் அறியாமல் வேறு உறவு வைத்திருப்பவர்கள் எத்தனை விழுக்காடு என்பது பற்றிய நகரங்கள்தோறும் எடுத்த கணக்கெடுப்புகளும் உண்டு.

திரைப்படங்களைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை 35 வருடங்களாகக் கதாநாயகர்கள் துகிலுரிந்துகொண்டேயிருக்கிறார்கள். 150 கோடிகள் செல்வில் ஆங்கிலப்படத்திற்கிணையாக எடுக்கப்படுகின்ற படத்தில் கூட ஐஸ்வர்யாராயைக் குனிய வைத்துக் கைதட்டல் வாங்கவேண்டிய அவலம். ஈரானியப்படங்கள் தவிர்த்து உலகப்படங்கள் என்றாலே  குளியலும், கூடலும் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம். ஒரு நடிகை நடிக்க வந்தால், முக்கால்வாசி உடலைக் காட்ட வேண்டியிருக்கிறது. நம்மவர்கள் கவர்ச்சி உடையில் நாயகியை நடக்கவிட்டு ஒரு ஆணாதிக்கக் குப்பை வசனத்தையும் எச்சரிக்கையாக வைப்பார்கள். "கணவனுக்குக் காட்ட வேண்டிய" உடம்பைக் கண்டவனுக்குக் காட்டுவதைக் கண்டித்து, பொண்ணுன்னா கையெடுத்துக் கும்புடற மாதிரி "இருக்கணும்", கைதட்டிக் கூப்புடற மாதிரி இருக்கக்கூடாது என்று "எப்படியெல்லாம் இருக்கப் வேண்டும்" என்ற அவளது கடமையைச் செய்யச் சொல்லி வசனம் பேசுவார் நாயகன். ஆனால் பாடல் காட்சிகளில் நடிகையின் கணவனே காணமுடியாத கோணங்களிலெல்லாம் நாம் கண்டுகளிக்கலாம். அந்த நடிகை தனது கணவனுக்குக் காட்டவேண்டியவற்றை கேமரா முன் காட்டாவிட்டால் படமே இல்லை. வெள்ளைக்கார அம்மணிகள் பிகினியில் வலம்வந்து நாயகனைச் சுற்றி நின்று தடவும் பாடல்கள் அதிகமாகிவிட்டன. சாராயக்கடைக் குத்தாட்டங்கள், காபரே பாணி நடனங்கள் இல்லாத படங்களே இல்லை. திரைப்படங்களால் சமூக சீர்கேடுகள் வளர்வதில்லை எனபது உண்மையில்லை. திரைப்படத்தைப்பார்த்தவுடன் ஒருவன்  கொலை செய்யக் கிள்ம்பிவிடுவதில்லை. ஆனால் சிலவற்றை எளிதில் பரப்பிவிடும். அது தூண்டுவதில் பங்கு வகிக்கிறது. பெரியம்மா வயதுள்ள  பெண்ணின் பின்னால் முட்டும் "ஆன்ட்டிகளை உரசும்"நாயகத்தனங்களையெல்லாம் ரங்கநாதன் தெருவிலிருந்து எட்டுத்திசையிலுமுள்ள தெருப்பொறுக்கிகளுக்கும் கற்றுக் கொடுத்தது திரைப்படம்தான்.


விளையாட்டுககளை எடுத்துக் கொண்டால் முடிந்தவரை கவர்ச்சியைப்(அல்லது ஆபாசம்) புகுத்திவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக cheerleaders. கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு பெண்ணாதிக்கம் நிலவும் துறைகளில் பிரபஞ்ச, உலக அழகிப் போட்டிகளுக்கடுத்தது பெண்கள் டென்னிஸ். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், இரட்டையர் போட்டிகளில் விம்பிள்டன் உட்பட 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்த லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி (11 பட்டங்கள்)  பெறாத இடம் ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் அதுவும் பூபதியுடன் இணைந்து பெற்ற சானியாவுக்கு எப்படிக் கிடைத்தது அவர் கவர்ச்சிப் பொம்மையாகவே வெளிப்படுத்தப்பட்டார். இங்கு அவரை நான் குறை சொல்லவில்லை. ஒரு இந்தியப் பெண் டென்னிஸ் விளையாட்டில் உலக அளவில் முதல் 50 இடங்களுக்குள் வருவது சாதனைதான்.  அழகுப்பதுமையாகவே அந்தக்கண்ணோட்டத்திலதான் அவரைப் பார்ப்பதே எனது கவலை. சில தமிழ்  நாளிதழ்கள் அவரை அழகுப்புயல் என்றெல்லாம் விளிக்கின்றன. முடிதிருத்தகங்களில் ஒட்டப்படும் கவர்ச்சிக்கன்னிகளுடன் அவரது படத்தையும் ஒட்டும் நிலைதான் இருக்கிறது. சச்சினுக்கு முன்பே ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்தவர் ஒரு பெண். 1997 -ம் வருடத்திலேயே டென்மார்க் அணியுடனான போட்டியில் 229 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தவர் ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் பெலிண்டா கிளார்க் என்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கே தெரியாது.  ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் புகழ் பெண்கள் கிரிக்கெட்டிற்கு இல்லாததற்குக் காரணம் அது விறுவிறுப்புக்குறைவு மட்டுமல்ல, அதில் கவர்ச்சியாகக் காட்ட எதுவுமில்லை என்பதும்தான். 

இப்படியாகக் காணுமிடமெல்லாம் வரைமுறையில்லாமல் காமம் திணிக்கப்படுவதால் அனைவரும்  காமவெறிபிடித்தவர்களாக மாற்றப்பட்டு நல்ல பிள்ளைகளெல்லாம் பெண்கள் விடயத்தில் மட்டும் மன்மதன்களாகிவிடுகின்றனர். இதுதான் காணும் பெண்களையெல்லாம் காமத்துடன் பார்க்க வைக்கிறது. பெண்கள் ஆபாசமாக உடையணிவதால்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், சும்மா பார்ப்பதில் என்ன தவறு, அழகை ரசிப்பதில் தவறில்லை, ஆண்கள் சைட்டடிப்பதை பெண்கள் உள்ளுக்குள் ரசிப்பார்கள், ஆண்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள், பெண்கள் யாருக்கும் தெரியாமல் பார்ப்பார்கள், இனக்கவர்ச்சி, கலைக்கண்ணோட்டத்தில் பாத்தா என்ன தப்பு  என்பதெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகவும், உண்மையாகவும் தோன்றும். ஆனால் இதனால் பாதிக்கப்படுவது யார் என்பதே முதன்மையானது. காமம் என்பதே மனம் சார்ந்த்தன்றி உடல்சார்ந்ததன்று . பெண்ணின் உடல்பாகங்களுடன் காமத்தைத் தொடர்புபடுத்துவது தவறானது. எதிலும் புனிதமும் இல்லை ஆபாசமும் இல்லை. ஒவ்வொரு உறுப்புமே இயற்கையின் இயல்பான தேவைக்கானது. பெண்களின் உடல்பாகங்கள் வெளியே தெரிவதால்தான் காமம் தூண்டப்படுகிறதெனில், பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு நடப்பதை விட அதிகளவில் குழந்தைகளுக்கு (ஆண் குழந்தைகளுக்கும் சேர்த்து) நடக்கிறதே. கொஞ்சினால் கூட வாடிவிடும் குழந்தைகளிடம் காமவெறிப்பேய்களின் உணர்வைத் தூண்டும்படியாக உறுப்புகள் எதுவும் இல்லையே.அவை ஏன் குதறப்படுகின்றன. ஒருவேளை குழந்தைகள் ஆபாசமாக உடையணிவதுதான் காரணமா?.சில வட இந்தியப் பெண்கள் (ராஜஸ்தானிகள் ?) தலையில் முக்காடு போட்டு மறைத்திருப்பார்கள், ஆனால் பாதிவயிற்றையும், இடுப்பையும் வெளித்தெரியுமாறு இருக்கும்.  இது  அவர்கள் கலாச்சார உடை, வேண்டுமென்றே காட்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஆதிவாசி இனங்களில்  திறந்த மார்புடன்தான் அனைவரும் இருப்பார்கள், அங்கெல்லாம் பாலியல் வன்முறைத் தொல்லையில்லை நமது நாகரீக உலகில் இருப்பது போல. ஆபாச இணையதளங்களில் இருக்கும் ஒளித்துவைத்துப் படமெடுக்கப்பட்ட தம்பதியினரும் சராசரிப் பெண்களெல்லாம் என்ன பாரிஸ் ஹில்டனைப் போன்று புகழ்விரும்பிகளா? பெண்ணின் நிர்வாணத்தைக் காணத்துடிக்கும் ஆணின் இச்சையால்தானே இதெல்லாம்?கணவனுக்கும், மனைவிக்கும் படுக்கையறையில் கூட சுதந்திரமில்லை. பேசினாலும் அதைச் சுட்டு இணையத்தில் பரப்பி விடுகிறார்கள்.   இதில் மட்டும் அனைவரும் பொதுவுடமைவாதிகளே! தான் பெற்ற இன்பத்தை பெறுக இவ்வையகமென்று தாம் அனுபவித்ததை அரங்கேற்றி விடுகிறார்கள். 

இதை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. கற்பழிப்பவனுக்கும் பெண்ணை just சைட்டடிப்பவனுக்கும் ஒரே அளவுகோலை வைக்கவில்லை, அவை இருவர்களுக்கிடையே அளவு (quantity) வேறாகவும், தரம்(quality) ஒன்றாகவும் இருக்கிறது என்கிறேன். ஜொள்ளுவிடுவதும், கடலை போடுவதும், இன்ன பிறவும்  காதலியுடனும், மனைவியுடனுமிருப்பது வரை ஒன்றுமில்லை. மச்சினியைப் பார்ப்பதில்தான் பிரச்சனையே. பார்வைகளும் ஒருவகையில் துன்புறுத்தும் வன்முறையே ! ஆகவே அறமில்லாத தவறான காமக்கண்ணோட்டத்தை விட்டு உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் நண்பர்களே!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குழந்தைகள் நாள் - சித்ராவைத் தெரியுமா?



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உலகின் மிக அழகான பெண்


10 வருடங்களாக தனது தாய்மண்ணுக்காக, கொள்கைக்காக உண்ணாநிலையில் உறுதியுடன் இருப்பவரை உலகின் மிக அழகான பெண் என்று சொல்வதைத் தவிர்த்து வேறு எப்படி அவருக்கு மரியாதை செலுத்த முடியும் என்பது தெரியவில்லை.


அவர் எழுதிய கவிதை கீழே 

When life comes to its end
You, please transport
My lifeless body
Place it on the soil of Father Koubru

To reduce my dead body
To cinders amidst the flames
Chopping it with axe and spade
Fills my mind with revulsion

The outer cover is sure to dry out
Let it rot under the ground
Let it be of some use to future generations
Let it transform into ore in the mine

I'll spread the fragrance of peace
From Kanglei, my birthplace
In the ages to come
It will spread all over the world.

-lrom Sharmila

ஒரு கவிஞர் தனது தான் எழுதிய கவிதையைப் போன்றே வாழ்ந்து காட்டுவது நடைமுறையில் குறைவு. இரோம் ஷர்மிளா சானுவின்  போராட்டம் நிச்சயமாக அவரது கவிதையைக்காட்டிலும் அழகானது. 

உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு எவ்வாறு தனது மக்கள் மீது வன்முறையைக் கொடூரமாக ஏவுகிறது என்பதறகு மணிப்பூர் ஒரு உதாரணம். இந்தியா விடுதலை பெற்ற பின்பு வலுக்கட்டாயமாக பத்துக்கணக்கான தேசிய இனங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப் பட்டன. அதில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள், இந்திய துணைக்கண்டத்தின் பொதுவான பண்பாட்டுடனும், வரலாற்றுப் பழக்க வழக்கங்களுடன் எந்தவொரு ஒற்றுமையுமற்ற இவர்களும் வலுக்கட்டாயமாக இந்திய தேசிய ஒருமைப்பாடு எனும் தேசிய இனங்களின் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு "விடுதலை" பெற்ற இந்தியாவிடமிருந்து இவர்கள் விடுதலை கோரும்  போராட்டத்தைத்  தொடங்கினார்கள். பிறகு வரலாற்றின் வழக்கத்தின்படி காட்டிக்கொடுப்புகள், அரசியல்தலைவர்களின் சதி, ஆயுதக் குழுக்களின் தவறுகள்,  என்ற அனைத்தும் அரங்கேறின. பின்பு அரசுகள் வழக்கமான நடத்தும் செய்யும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் , தேசத்துரோகம் பொன்றவற்றைச் சொல்லி அவைகளைத் தடுக்க இராணுவத்தை நிறுத்தியுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் (The Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958) என்ற சட்டம் ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராளிகளை ஒடுக்க பிறப்பித்த சட்டத்தின் மறுபதிப்பு. காசுமீர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் 1980 களிலும் காஷ்மீரில் 1990 களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை நீக்கும் வரையில் தமது போராட்டம் நடைபெறும் என்று 10 வருடங்களாகக் கூறிவருகிறார் ஷர்மிளா. ஆனால் இவரது போராட்டம் தொடங்கிய பின்புதான் பிறகுதான் மனோரமா தேவி என்ற பெண்ணின் படுகொலையும், மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தி இராணுவத்தின் கொடூர முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியதும் நடந்தது. இவர் இறந்தால் கூட இது திரும்பப் பெறப்படாது என்பதே இந்தியா அரசின் கொள்கையாக இருக்கும் போல் தெரிகிறது.   இவர் தனது பட்டினிப் போராட்டத்தைத்துவக்கியது நவ 2, 2000ம் ஆண்டு. இதுநாள் பத்து வருடங்களாக வரையிலும் குழாயின் மூலமாக சத்துக்கள் அடங்கிய திரவ  உணவு செலுத்தப்பட்டு வருகின்றது. இல்லையெனில் இவரும் திலீபனைப் போலவே இறந்திருப்பார்.தற்கொலை முயற்சிக்கு ஓரிரு வருட சிறைத்தண்டனை தான் அளிக்க முடியும் என்பதால் கைது செய்யப்படுவதும், விடுவித்த பின்பு மீண்டும் போராட்டத்தைத் தொடர்வதும் வழக்கமாக இருக்கிறது.  


                                           இரோம் சானு ஷர்மிளா  
200 வருடங்களாக உலகையே கொள்ளயடித்தவன் ஒரு தலைவரின் அஹிம்சைப் போராட்டத்தில் தோற்றுப்போய் மனமிரங்கி இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவானா ?   அப்படிக் கிடைத்த விடுதலை எத்தகையது என்பதை அஹிமசைப் போராட்டத்தின் தலைவரை , இந்திய தேசத்தின் தந்தை எனப்புகழப்படுபவரையே தேசபக்தர்கள் எனப்படுவோர் கொன்று நிரூபித்தார்கள். அது கிடக்கட்டும். காந்திய தேசம் எனப்படும் ஒரு நாடு காந்திய வழியில் போராடுவோர்க்கு என்ன பதிலை வைத்திருக்கிறது கைது, சிறையிலடைப்பு என்பதைத்தவிர. இவரது போராட்டத்தைத் தற்கொலை முயற்சி என்று சிறுமைப்படுத்தியும், குற்றம் சாட்டியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் சதி, பயங்கரவாதிகள் சதி, பிரிவினைவாதம், மதவாதம் என்று சொல்லிட முடிகிறது. மணிப்பூருக்கு என்ன காரணங்கள் சொல்ல வருகிறார்கள்? இவரொன்றும்  தனிநாடு கேட்டுப் போராட வில்லையே, இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரச் சட்டத்தை நீக்கச் சொல்லித்தானே போராடுகிறார். 

2006 - ம் ஆண்டில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

" நான் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில், பொது மக்களின் ரத்தம் சிதறிய பிணங்களைப் பார்த்தேன். இதுதான் என்னை இந்த மரணப் போராட்டத்தின் பக்கம் திசை திருப்பியது. ஒன்றுமறியாத மக்கள் மீது ஆயுதப் படையினர் ஏவும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த, எனக்கு வேறு வழி தெரியவில்லை. அமைதிப் பேரணி என்பது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. நிலைமையை மாற்ற, ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு உருவானது. எனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஏனென்றால், பட்டினிப் போராட்டம் என்பது என் உணர்வு சார்ந்தது. இதில் உடலை வருத்திக் கொள்வது என்பதே கிடையாது. இது நான் செய்தே ஆகவேண்டிய கடமை. எனக்கு தற்கொலை எண்ணம் துளிகூட கிடையாது. அப்படி இருந்தால், உங்களுடன் இத்தனை இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பேனா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைக்காக நான் போராடுகிறேன். கடைசியில் உண்மைதான் வெல்லும்"




39 வயதாகும் அவருக்கு தொடர்நது உண்ணாமல் இருப்பதால் மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது.வலுவிழந்து  உடல் நிலையும் அபாயமாக இருப்பதாகவே தெரிகிறது. அவர் நாள்தோறும் செய்யும் யோகாப் பயிற்சியும், அவருடைய ஆன்மிக நம்பிக்கையின் காரணமாகவும் எப்படியோ உயிர் வாழ்கிறார். இவரது கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றி சர்மிளாவையும், தன்னையும் காக்க வேண்டும் என்பதுதான்  இவரது ஆதரவாளர்களின் வேண்டுகோள் . பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ள போராளிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!




Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நிறம்


திருமணத்தரகர் கொடுத்த புகைப்படம் பார்த்த அம்மா
வேண்டாம் பையன் கருப்பு என்றாள்
சிவப்பான தனது மகளுக்காக

பின்னொருவருடத்தில் 
திருமணத்தரகர் கொடுத்த புகைப்படம் பார்த்த அம்மா
வேண்டாம் பொண்ணு கருப்பு என்றாள்
கருப்பான தனது மகனுக்காக
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment